தாமரையின் கவிதைகள்!!

தாமரையின் ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’ என்ற கவிதை தொகுப்பிலிருந்து………

வலி

ஏய் பல்லக்கு தூக்கி!
கொஞ்சம் நிறுத்து…
உட்கார்ந்து உட்கார்ந்து
கால் வலிக்கிறது..


எதிர்வினை

‘கொலையும் செய்வாள் பத்தினி…
‘கொஞ்சம் இரு
முன்னதாக நீ என்ன செய்தாய்?

வீடு

நண்பன் சொன்னான்
வீட்டுக்குள்ளிருந்தே
விண்மீன்கள் பார்த்தானாம்…-
கூரையில் ஓட்டைகள்!
ப்பூ! இதென்ன பிரமாதம்?
என் வீட்டுக்குள்ளிருந்து
வானத்தையே பார்க்கலாம்!

மழைக்குறிப்பு என்று ஒரு கவிதையில், மழை வரும்போது ஏற்படும் மண்வாசத்தை அனுபவிப்பது பற்றி, மகிழ்ச்சியடையும் மயில்கள். உழவர்கள், குழந்தைகளின் பற்றி எல்லாம் சொல்லி விட்டு, இறுதியில் இப்படி முடிக்கிறார்…

எல்லாம் சரி…
தண்டாயுதபாணி கோயிலுக்குப்
போகும் நடைபாதையில்
பழைய சாக்கு விரித்து
அன்றாடம் வேண்டியிருக்கும்
அரைவயிற்றிக் கஞ்சிக்காக
சுருங்கிய கைகளோடு
சூடம் விற்கும்
தாயம்மா கிழவியை
நினைத்தால்தான்..

ஒட்டடை என்று ஒரு கவிதையில் வேலைக்கும் சென்று வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு வாழும் ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாமல், வீட்டில் ஒட்டடை அடிக்க பிந்தி விட்டதற்காக, கணவன், மாமனார், மாமியார் எப்படி எல்லாம் வார்த்தைகளால் புண்படுத்துகிறார்கள் என்பது பற்றிச் சொல்லி விட்டு இப்படி சொல்கிறார்….

யார் அடிப்பது மனசின் ஒட்டடை?

நியாயத்திற்கான போராட்டத்திற்கு அழைக்கும் என்னையும் அழைத்துப் போ என்ற கவிதையில் சில வரிகள்…

கனவுகள் கண்டு
கொண்டுநான் நின்றுவிட்டேன்
குனிந்த தலையோடு
கனவுகளை விழுங்கிவிட்டு
நீ நடந்தாய்
நிமிர்ந்த நெஞ்சோடு…
இனியும் மிதிபட முடியாது
என்னையும் அழைத்துப் போ…
நீந்தத் தெரியாவிட்டால் என்ன
வெள்ளம் சொல்லித் தரும் வா
என்று சொல்..

அந்தப் பதினொரு நாட்கள் என்று ஒரு கவிதையில் சில வரிகள்…

முதுகெலும்பின் நீளம்
என்ன என்ற கேள்விக்கு
ஆரம் அரையடி என்றே
பதில் எழுதிக்கொண்டிருந்தோம்…
அவர்கள் நகைக்குமுன்பு
நீ அளந்து காட்டிய
நீளத்தால் மூர்ச்சையானவர்கள்
இன்னும் எழவில்லை…
எங்கள் உயிரின் இருப்பை
நாங்கள் தேடிக் கொண்டிருந்தபோது
உன் உயிரின்
ஒவ்வொரு துளியையும்
நீ வாழ்ந்தாய்திலீபா..!
உயிருக்கு நீ தந்தமரியாதையை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை…
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே!

புத்தர் சிரித்தார் என்ற கவிதையில் சில வரிகள்…

ஆக்சிஜன் மேலிருந்த
அன்பு குறைந்துபோய்
இப்போதெல்லாம்
ஹைட்ரஜனோடு
ஐக்கியமாகி விட்டோம்
புத்தர் சிரித்தார் என்று
நாமும் சிரித்து வைத்தோம்
அணுக்குண்டுகளைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
மனித நேயத்தை
ஏவு கணையில்
ஏற்றி அனுப்பி விட்டார்களே
என்ற உதைப்பின் ஊடாக..

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் என்ற கவிதையில் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து வேறொரு இடத்தில் விடுதியில் தங்கியிருந்து படிக்கையில் அதை வெறுத்தது பற்றி கவிதையின் முன் பகுதியில் சொல்லி,இறுதியில் இப்படிச் சொல்கிறார்….

குறைந்தது நூறு முறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்தகாலத்தையும்,
வந்துஅழைத்துப் போங்களையும்…
திடீரென்று எனக்குள் ஒரு கதவு
அறைந்து திறந்தது
என் அறைக்கதவு
திறந்தது போலவே…
அறை தோழியாய்
வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்…
என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
“அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்தி விட்டேன்
அடுத்த முறை அங்கே
வரும்போது
ஒரு சினேகிதியை
அழைத்து வருவேன்…
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி…”

நன்றி: ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’, தாமரை

Related posts

Comments (2)

EkanathApril 16th, 2010 at 6:54 am

Poems are life breaths. deep express of thoughts. in few catchy lines with lively words which pierce the heart with humane experience. nanraga irrukkirathu kavithaigal.

SaravananJune 24th, 2010 at 12:11 am

all poem are good. I feel that your poem must too different to others. Bez so many of written about poverty,fod,mother… The Vali poem is good

Leave a comment

Your comment