தேடல்!

அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.

தேடல்!

மீண்டும் பிரம்மச்சாரி
ஊர் கேட்க கத்தினேன்
நீ உன் பிறந்தகம் போன
அந்தக் கணத்தில்
உன் உத்தரவில்லா
உலகத்துள்
என் ஒருத்தனின்
ராஜாங்கம்


தாமதமாய் விடியல்
பல் துலக்காமல் தேநீர்
ஆஷ் டிரேக்கு வெளியே
அணையாத சிகரெட் துண்டு
நண்பர்கள்
மதுக்கோப்பை
இறைச்சியின் எச்சம்


எல்லாமே நான் மகிழ்ந்த
கதை பேசின
பளீரென்று சிரிக்கும் பூ
பையப் பைய வாடுதல் போல
என் அத்தனை உற்சாகமும்
ஓய்ந்து தீர்ந்தது
ஓரிரு நாளிலேயே


வீடு வெற்றிடமாய்
வெற்றிடமெல்லாம் நீயாய் தெரிய
உன்னை நினைத்து நினைத்தே
வாழ்க்கை சராசரிக்கும் கீழாய்
சரியத் தொடங்கியது


காமமாம் இச்சையாம்
நான் உன்னை வேண்டுவதன்
காரணம் சொல்கிறான்
உளவியல் படித்த நண்பன்


எவருமே உணரமுடியாத
என் உள்ளாடும் தவிப்பை
எங்ஙனம் சிருஷ்டிப்பது
வார்த்தைகளாய்?
மிக நீண்ட பிரயத்தனத்திற்குப் பின்
சொல்கிறேன்


தெருப்புழுதியில்
வெகு நேரம் விளையாடி
அம்மா நினைவு வந்தவுடன்
ஓடி வரும் குழந்தையாய்
உன்னைத் தேடுகிறேன் போ

நன்றி: சு.கவிதா
அவள் விகடன்..

Related posts

Comments (0)

நளாயினிNovember 6th, 2005 at 1:12 pm

அடடாh… நல்லதொரு கவிதை.

சிவாஜிSeptember 9th, 2006 at 12:40 pm

very nice…

சிவாஜிFebruary 8th, 2007 at 12:59 pm

very nice…

Leave a comment

Your comment