நெஞ்சம் கனக்கிறது…..
நெஞ்சம் கனக்கிறது…..
“தனியொருவனுக்கு
உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்”
பாடி வைத்தான்
பாட்டுப் புலவன்
பல கோடி மக்கள்
பட்டினி இருந்தாலும்
வகை வகையாய் சமைத்து நாம்
உண்ணத்தான் செய்கின்றோம்
அதோ அங்கே….
சிதைந்த உடல்கள் – பல
சிதறிக் கிடக்கிறது
கொடூரமான கொலைகள்,
பதைக்க வைக்கும் பாவங்கள்
எல்லாம் அந்த
பெளதீக இரசாயன
கலவைகளின்
கண்மூடித்தனம்தான்
பாடசாலை சிறார்களை
பணயம் வைக்கும் பரிதாபம்
மனிதன் ஒரு மிருகம்
என்பதை
உறுதிப்படுத்தும்
உத்வேக பிறவிகள்
மனித மனங்கள் நாம்
சில கணம் பதைக்கின்றோம்
மேலும் சில கணம் அழுகின்றோம்
ஆனாலும் என்ன…
ஒரு நாள் கழிந்ததும்
துடிப்பு மறைந்ததும்
வழமைக்கு திரும்புகிறோம்
மனித நேயம் கொல்லப்படுவதை
கண்டும் காணாமல் செல்ல
மனதில் ஒரு இசைவாக்கம்
எப்படி வந்தது……..
எங்கோ நடக்கிறது
நமக்கில்லை என்று
நம்மை நாம் தேற்றிக் கொள்கிறோம்
எப்படி முடிகிறது…..
இன்னிசை ரசிக்கும்
இதயங்கள்
இழவுக் குரலுக்கு
இசைவு பட்டு விடுமோ
மனம் அழுகிறது….
இயற்கை எழில் கொஞ்சும்
உலகமும் ஒரு நாள்
அழுகையின் சத்தத்தில்
அமுங்கிப் போய் விடுமோ
இதயம் பதைக்கிறது…..
காற்று மண்டலமும்
களங்கப் பட்டு
கனத்துப் போய் விடுமோ
எங்கள் மழலைகள்
எலும்புத் துண்டுகளை
கையில் ஏந்தி விளையாடும் நாள்
கன வேகமாய் வந்திடுமோ
கனக்கிறது நெஞ்சம்…..

கலை,
உண்மையை சொல்ல வேண்டுமானால், உங்களுக்கு அவ்வளவாய் கவிதை எழுத வரவில்லை. (என் யோக்கியதை என்பது வேறு விஷயம்)..வசன கவிதையில் நறுக்குத் தெறித்தாற் போல் சில வரிகள் வர வேண்டும். அப்படி உங்கள் கவிதைகளில் காண முடியவில்லை. நிறைய இடங்களில் நீங்கள் வரிகளை ஒடித்து எழுதியிருப்பதை உரைநடையாக வரிசையாகவே எழுதி விட முடியும். நீங்கள் இன்னும் நிறைய கவிதைகளை வாசித்தும் எழுதியும் பழகலாம் என்பது என் அன்பான ஆலோசனை..:)
எடுத்துக்காட்டுக்கு,
//எங்கள் மழலைகள்
எலும்புத் துண்டுகளை
கையில் ஏந்தி விளையாடும் நாள்
கன வேகமாய் வந்திடுமோ
கனக்கிறது நெஞ்சம்….. //
கவிதையின் இந்த முடிவு வரிகள் இன்னும் பொட்டில் அடித்தால் போல் இருந்திருக்க வேண்டும். நிகழ்வுகளை முழுக்க விவரிக்கும் உரை நடையில் இருந்து விடுபட்டு காட்சிகளை snap shot போல் தந்து தாவிச் செல்வது நல்ல உத்தியாக இருக்கும்.
பின்னூட்டத்துக்கு நன்றிகள் ரவிசங்கர். ஏதாவது எழுதினால், நீங்கள் சொல்வதையும் கருத்தில் கொள்கின்றேன்.