நாடு நல்ல நாடு – நோர்வே 6

நோர்வே 6!

வரலாறு

இந்த பகுதியில், முதலில் ரவிசங்கரும் பொன்ஸ் உம் பின்னூட்டத்தில் வரலாறு பற்றி கேட்டிருந்ததுக்கு பதில் சொல்லலாம் என்று யோசிக்கின்றேன். (நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் எனக்கு வரலாறு பாடத்தில் குறைந்த புள்ளிகள்தான் கிடைப்பது வழமை :) . அதனால் இதுவும் எப்படி இருக்குமோ தெரியாது. இவர்கள் இருவரும் எனக்கு எத்தனை புள்ளிகள் போடுகின்றார்கள் என பார்க்கலாம்).

ரவிசங்கரின் கேள்வி இதுதான்…..
“உலகளாவிய அமைதி முயற்சிகள்ல நோர்வே தான் முன்னால நிக்குது. இதுக்கு அந்த நாட்டின் வரலாறும் ஒரு காரணம்னு சொல்லுறாங்க..இதப் பத்தி கொஞ்சம் விளக்க முடியுமா?”

நோர்வேயின் உலகளாவிய அமைதி முயற்சிக்கும், நோர்வேயின் வரலாறுக்கும் ஏதாவது நேரடி தொடர்பு இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எதுவும் தென்படவில்லை :) . அதனால் இந்தக் கேள்வியை நோர்வேஜியர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் சரியான பதிலை தரவில்லை.

அதே வேளை, நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் நோர்வேஜிய மக்கள் அனைவரின் பொதுவான கருத்து அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பங்களிப்பதே என்று கூறியிருக்கிறார். அமைதி முயற்சிகளில் நோர்வே ஆற்றும் தொடர்ந்த பங்குக்கு அவர் 6 விடயங்களை திறவு கோல்களாக கூறுகின்றார்.

1. அரசாங்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அமைதி முயற்சிகள் சம்பந்தமான விடயங்களில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாது, ஒரு தொடர் நிலையை தக்க வைத்துக் கொண்டிருப்பது.

2. மனிதநேய உதவிகள், அபிவிருத்தித் திட்டங்கள், அமைதி முயற்சிகள் மூன்றிற்கிடையேயும் ஒரு ஒன்றிணைப்பு கொள்கையை கொண்டிருத்தல்.

3. மக்கள் சமூகத்துக்கும், அரச சார்பற்ற நிறுவங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பை பேணி வருவது.

4. அமைதி முயற்சிகளில் ஈடுபடும் இடங்களில் வேறு எந்த சொந்த தேசிய நலனையும் எதிர் பார்க்காமல் செயற்படுவது.

5. UN, NATO, the US, European partners உடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பது.

6. அமைதிப் பேச்சு வார்த்தைகளில் நேர்மையான, உண்மையான அக்கறை காட்டுவது.

நோர்வேஜிய வரலாற்றில் எனக்கு தெரிந்த தகவல்களை இங்கே சொல்லி விடுகின்றேன். நோர்வேஜிய மொழி படித்தபோது அவர்கள் சொல்லிக் கொடுத்ததை இங்காவது சொல்லாவிட்டால் எப்படி, அதுதான் :) . நோர்வேயின் வரலாற்றுக்கும், நோர்வே அமைதி முயற்சிகளில் முன்னிற்பதற்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா என்பதை ரவிசங்கர்தான் சொல்ல வேண்டும் :) .

நோர்வேயில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஜேர்மன், பின்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் குடியேறியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் நோர்வே பல குட்டிக் குட்டி இராச்சியங்களாக இருந்ததாகவும், பின்னர், Harald Fairhair என்பவர் அனைத்து இராச்சியங்களையும் கைப்பற்றி, ஒன்றாக்கி, இணைந்த நோர்வேயின் முதல் அரசனாக வந்தார்.

வீக்கிங் காலம் (Viking Age) என அழைக்கப்படும் 8 – 11 நூற்றாண்டில் நோர்வேஜிய வீக்கிங் மக்கள் கப்பலில் பல நாடுகளுக்கும் வர்த்தக நோக்கங்களுக்காக சென்று (கொள்ளையடித்து :) ), வெவ்வேறு நாடுகளின் பகுதிகளைக் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வீக்கிங் மக்கள் விட்டுச் சென்ற சரித்திரப் பதிவாக, அண்மைய காலம்வரை நோர்வேயில் கப்பல் கட்டும் தொழில் மிகவும் பிரசித்தமானதாய் இருந்தது.

1349 இல், ஏற்பட்ட ஒரு பாரிய நோய்த் தாக்கத்தால் நோர்வேயின் சனத்தொகையில் 40-50 % மக்கள் இறந்தார்கள். இந்த காலத்தை ‘Black period’ என்று அழைக்கின்றார்கள். Black death or Black Plague என்றறியப்பட்ட இந்த அதி வேகமாகப் பரவிய நோய் உலகின் பல பாகத்திலும் பெருத்த சேதத்தை, மக்கள் இறப்பை ஏற்படுத்தியது.

இதன்போது நோர்வே பெரும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்தது. அதன் பின்னர் நோர்வே, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றாக இணைக்கப்பட்டன. பின்னர் ஸ்வீடன் சுதந்திரம் பெற்று பிரிந்து சென்றிருந்தும் சில காலம் டென்மார்க்கும் நோர்வேயும் இணைந்தே இருந்தன. நெப்போலியன் காலத்தில் ஏற்பட்ட போரின் பின்னர் மே 17, 1814 இல் நோர்வே சுதந்திர நாடாக இருப்பதற்கான அரசியல் யாப்பை உருவாக்கி, சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. ஆனாலும் ஸ்வீடன் பலாத்காரமாக நோர்வேயை தன்னுடன் இணைத்து தனது இராச்சியத்தின் கீழ் வைத்திருந்தது.

1840 ஆம் ஆண்டளவில், நோர்வேஜியருக்கென தனிப்பட்ட கலை கலாச்சாரத்தை பேணுவதற்கென ஒரு அமைப்பு உருவானது. அந்த அமைப்பு Norwegian romantic nationalism என அழைக்கப்பட்டது. இந்த அமைப்பு நோர்வேக்கு என தனிப்பட்ட தேசிய அடையாளத்தை கொடுக்கக் கூடிய இலக்கிய, ஓவிய, இசை, மற்றும் மொழி சம்பந்தமான கொள்கைகளை வகுத்துக் கொள்ள உதவியது. Edvard Greig என்பவர், உலகில் பிரபலமான ஒரு இசையமைப்பாளர்களுள் ஒருவர். அவர் தனது இறுதிக்காலத்தில் வாழ்ந்த வீடு, அவரது பொருட்கள் நிறைந்த பொருட்காட்சிச்சாலை தற்போது பேர்கனில் (நான் வாழும் நகரத்தில்), Trollhaugen என்னுமிடத்தில் சுற்றுலாத் தலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அவரது வீடு இயற்கை அழகு நிறைந்த ஒரு இடத்தில், கடலுடன் நெருங்கி அமைந்திருக்கிறது. இந்த இடம் பார்த்து வந்ததும் ஒரு இனிமையான அனுபவமே.

1905 இல் ஸ்வீடனிடம் இருந்து, அமைதியான முறையில் நோர்வே பிரிந்து தனியாகி விட்டது. பின்னர் இரண்டாம் உலகப் போரில், நோர்வே எந்த ஒரு பக்கச் சார்பையும் எடுக்காது இருந்தபோதும் (முதலாம் உலகப் போரில் போன்றே), 1940 இல் ஜேர்மனியப் படைகள் நோர்வேயை முற்றுக்கையிட்டன. நோர்வே இந்த தாக்குதலை எதிர் பார்த்திருக்காவிட்டாலும், 2 மாத காலத்துக்கு அவர்களுடன் எதிர்த்துப் போரிட்டது. இந்த காலமே ஜேர்மன் படைகள் தாம் சென்ற நாடுகளில் எதிர்ப்பை சந்தித்த அதி கூடிய காலமாக இருந்தது. ஜேர்மன் படைகளின் முற்றுக்கையின்போது நோர்வேயிடம் இருந்த கடற்படையே உலகின் 4 வது பெரிய கடற்படையாக இருந்தது. ஐந்து வருடங்களின் பின்னர் சரித்திரத்தின் தற்செயல் நிகழ்வாக, 1945 மே 8 ஆம் திகதி (அரசியல் நிர்ணயம் செய்யப்பட்ட தினத்திற்கு 9 நாட்கள் முன்னதாக) நோர்வேயில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்து, ஜேர்மனிய படைகள் சரணடைந்தன. ஆனாலும் மே 17 நாளே இங்கே கோலாகாலமாக கொண்டாடப்படுகின்றது. (ஒரு வழியாக மே 17 க்கு 3 நாட்கள் இருக்கும்போது எனது பதிவை நிறைவு செய்யப் போகின்றேன் :) ).

1949 இல் நோர்வே NATO வில் இணைந்தது. 1960 களில் பெற்றோலிய பொருட்கள் கண்டறியப்பட்ட பின்னரே, நோர்வேயின் பொருளாதாரத்தில் பிரமாண்டமான வளர்ச்சி ஏற்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது பற்றி எடுக்கப்பட்ட இரு பொதுமக்கள் வாக்களிப்பில் (1972 இலும் 1994 இலும்), மக்களால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதில்லை என்ற முடிவு பெறப்பட்டது.

அப்பாடா, ஒரு மாதிரி வரலாறு கொஞ்சம் சொல்லியாச்சு :) .

மொழி

முக்கியமாக இரு சம அந்தஸ்து கொண்ட நோர்வேஜிய மொழிகள் அரசாங்க மொழிகளாக இருக்கின்றன. Bokmål and Nynorsk. ஆனாலும் Bokmål தான் அதிகளவு பாவனையில் உள்ளது. பொதுவாக வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுவதும் இதுதான். தற்போது Nynorsk இன் பாவனையும் அதிகரித்து வருகின்றது. ஆனால் பேச்சு வழக்கு இடத்துக்கு இடம் பெரிய வேறு பாட்டைக் கொண்டிருக்கின்றது. அதனால் மக்கள் பேசும்போது புரிந்து கொள்வதில் பல நேரங்களில் தடுமாற்றம் இருக்கின்றது.

இது விடயமாக நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நான் இங்குள்ள பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலமது. செய்முறை வகுப்புக்களுக்கு தவறாமல் போகும் நான், theory வகுப்புக்கு போக சோம்பல்படுவேன். அதுவும் காலை வேளையில் இருந்தால் கேட்கவே வேண்டாம். இந்த குளிரில் எழுந்து போய் என்ன செய்வது என்று விட்டு விடுவேன். ஒரு சமயம் நோர்வேஜிய மொழியில் ஒருவர் பாடம் நடத்திக் கோண்டிருந்தார். அவர் பேசியது எதுவுமே (ஒரு வரி கூட) எனக்கு புரியவில்லை. பாடம் முடிந்த பின்னர் அருகில் இருந்த நோர்வேஜிய மாணவனிடம் எனக்கு எதுவுமே புரியவில்லை என்று கவலையுடன் கூறினேன். அவன் சொன்னான் “கவலை வேண்டாம். எனக்கும்தான் புரியவில்லை. காரணம் அவர் நோர்வேயின் அதி வடக்கில் ஒரு இடத்தில் இருந்து வந்து, அங்கே பேசப்படும் பேச்சு வழக்கில் பேசுகின்றார்”. எனக்கோ பெரிய திருப்தி. :)

நோர்வேஜிய மொழிக்கும், ஸ்வீடன், டென்மார்க் மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாசிக்கும்போதோ, அல்லது அவர்கள் பேசும்போதோ ஓரளவுக்கு அவற்றை புரிந்து கொள்ள முடியும். இது சம்பந்தமாகவும் ஒரு அனுபவம். ஒரு தடவை பயிற்சி வகுப்பொன்றில், என்னைப் போலவே ஒரு வெளி நாட்டவர் (ஈரான்) என்னுடைய குழுவில் இணைந்திருந்தார். அவர் மிக விரைவாக பேசிக் கொண்டு போனார். அவரிடம் நோர்வே வந்து எவ்வளவு காலம் என்று கேட்டேன். அவர் மூன்று மாதங்கள் என்றார். நான் வந்து ஒன்றரை வருடத்துக்கும் மேலாகி விட்டிருந்தது. எனவே நான் அவரிடம் “மூன்று மாதத்திலேயே நீங்கள் நன்றாக நோர்வேஜிய மொழியை பேசுகின்றீர்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர் “நான் பேசுவது நோர்வேஜிய மொழியல்ல, ஸ்விடிஷ் மொழி. நான் பல வருடங்களாக ஸ்வீடனில்தான் வசிக்கின்றேன்” என்றார். மொத்தத்தில் எனக்கு நோர்வேஜிய மொழியும் தெரியவில்லை, ஸ்வீடிஷ் மொழியும் தெரியவில்லை :) . அனேகமாக இங்கிருக்கும் ஸ்வீடிஷ் மக்கள் நோர்வீஜிய மக்களுடம் பேசும்போது, தங்கள் சொந்த மொழியிலேயே பேசுவார்கள், இவர்களும் புரிந்து கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளின் வேறு பட்ட மொழிகளிலும் கூட பல சொற்கள் ஒரே மாதிரி இருப்பதைப் பார்க்கலாம். சில சொற்கள் ஒரே எழுத்துக்களைக் கொண்டிருந்தாலும் உச்சரிப்பு விதத்தில் வேறுபாட்டை கொண்டிருக்கின்றன.

இந்த இரு மொழிகள் தவிர்ந்த இன்னுமொரு மொழியும் நோர்வேயில் உள்ளது. Sami languages என்றழைக்கப்படுகின்றது. அந்த மொழியை பேசுபவர்கள் அதிகமாக நோர்வேயின் வட பகுதியில் வசிக்கும் பழங்குடியினர். பழைய வரலாற்றுடன் தொடர்புடையவர்களாக கருத்தப்படும் இவர்களுக்கு தனிப்பட்ட கலை கலாச்சார வடிவங்கள் இருக்கின்றன. அந்த மொழியும் அரசாங்க மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் தங்கள் மொழியில் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளும் உரிமையும், அங்கீகாரமும் அளிக்கப்பட்டு இருக்கின்றது.

சில ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல், நோர்வேஜிய மக்கள் வெளி நாட்டவருடன் ஆங்கிலத்தில் உரையாடுவதில் தயக்கம் காட்டுவதில்லை. அதனால் ஆங்கிலம் தெரிந்திருந்தாலே போதுமானது.

இங்கே முக்கியமாக கற்பிக்கப்படும் வெளிநாட்டு மொழிகள் ஆங்கிலம், ஜேர்மனிய மொழி, French மொழி. இந்த மூன்று மொழிகளிலும், அத்துடன் டனிஷ் (Danish), ஸ்வீடிஷ் (Swedish) ஆகிய இரு ஸ்கண்டினேவிய மொழிகளிலும் மக்கள் தொடர்புகளை ஏற்படுத்தவும், எந்த பாடத்துக்கான பரீட்சைகளையும் அந்த மொழிகளில் எடுப்பதற்கும் அனுமதி அளிக்கப்படுகின்றார்கள்.

அது மட்டுமல்ல, எந்த ஒரு மாணவரும், தனது மேல்நிலைப்பள்ளி படிப்பின் இறுதியில் தனது தாய்மொழியையும் ஒரு பாடமாக எடுக்க அனுமதிக்கப் படுகின்றார். அதற்குரிய புள்ளிகள் அவரது மேல் படிப்பு சம்பந்தமான தேவையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றது. சில நகரங்களில், பாடசாலைகளில் அனைத்து மாணவர்களுக்கும் தாய்மொழி தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக, அவர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில், பிரத்தியேக வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அதற்காக குறிப்பிட்ட மொழிகளில், குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.

மதம்

Norse or Scandinavian mythology எனப்படும் ஒரு பழங்கால மதவழியை ஆரம்பத்தில் நோர்வேஜிய மக்கள் பின்பற்றி வந்தார்கள். பின்னர் அனேகமானோர் கிறிஸ்துவர்களாக ஆனார்கள். ஆனாலும் பலரும் மதத்தில் அதிகமான ஈடுபாடு வைத்திருப்பதில்லை என்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. தேவாலயத்துக்கு முறையாக போகின்றவர்கள் மிகவும் அரிது. Baptism, Confirmation (தமிழ் சொற்கள் தெரியவில்லை), திருமணம், இறப்பு போன்ற தருணங்களிலேயே மதச் சடங்குகள் நடை முறைப் படுத்தப் படுகின்றன. எல்லோரும் இதை கைப்பற்றுவதுமில்லை. அனேகமானோருக்கு திருமணம் பதிவு செய்யும் அலுவலகத்திலேயே முடிந்து விடும். வெவ்வேறு வகையான கிறிஸ்தவ அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. அதற்கு அடுத்தபடியாக இஸ்லாம் மதம் (1.5 %) இருக்கின்றது. அதற்கும் அடுத்த நிலையில் இந்து மதத்தினர் இருக்கின்றார்கள். புத்த மதமும், இன்னும் சில மதங்களிலும் ஈடுபாடு கொண்ட சிறிய சனத்தொகையும் இருக்கின்றது. சிறிய அமைப்புக்களாக இருந்தாலும், எல்லா மதத்தினருக்கும் சகல, உரிமையும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

முடிவு

இத்துடன் நோர்வே பற்றிய எழுத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று எண்ணுகின்றேன். :)

வடுவூர் குமார் சிங்கப்பூரில் இருக்கிறார் என்று நினைக்கின்றேன். அதனால் அவரை சிங்கப்பூர் பற்றி எழுத அழைக்கின்றேன். இந்தியா பற்றியும் யாராவது எழுதலாமே. அதற்கு பொன்ஸ் ஐ அழைக்கலாம் என்று பார்க்கின்றேன். :) எனது இந்த ‘நாடு நல்ல நாடு’ பதிவை தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்ட களத்து மேடு எந்த நாட்டில் இருக்கின்றார் என்று தெரிந்தால், அவரையும் அவர் வாழும் நாட்டைப்பற்றி எழுத அழைக்கலாம். :)

நிறைவு

Related posts

Comments (0)

வடுவூர் குமார்May 14th, 2007 at 8:33 am

ஏங்க புரியுதா?புரியலையா? என்று கேள்வி கேட்காமல் பாடம் நடத்துகிற பள்ளியில் படிக்க பயமாக இல்லை?
என்னவோ போங்க! நல்லா இருந்தா சரி.
என்னை சிங்கையைப் பற்றி எழுத கூப்பிட்டதத்ற்கு நன்றி.
என்னுடைய பழைய பதிவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொடுத்துள்ளேன்.

கலைMay 14th, 2007 at 9:08 am

நல்லா சொன்னீங்க. நீங்க வேற, புரியுதா, புரியலையான்னு கேட்டு, நமக்கு நோர்வேஜிய மொழியில் சொல்லி புரிய வைச்சு, பாடம் நடத்தி முடிக்கிறதுன்னா, அது நடக்கிற காரியமா? :) ஏதோ நம்ம நல்ல காலம், அவங்க கொடுக்கிற syllabus books எல்லாம் ஆங்கிலப் புத்தகமா இருக்கிறதுனால நம்ம படிப்பு ஓடிச்சு. ஏதாவது சந்தேகம் இருந்தா, அப்புறமா ஆங்கிலத்தில் கேட்டு தெளிவு படுத்திக்க வேண்டியதுதான். :)

Scholarship programs for foreign students எல்லாம் ஆங்கிலத்தில்தான். நமக்கும் சில பாடங்கள் ஆங்கிலத்தில் வந்திருக்கு. :)

மலைநாடான்May 14th, 2007 at 10:08 am

கலை!
கையெழுத்துப் போடலைன்னா நாமளும் படிஞ்சோம் என்கிறத நம்பமாட்டீங்க போல :) )

அருமையான தொடர். தொடங்கிய வேகத்தில் எழுதி முடித்திருக்கிறீர்கள்.
நமக்கு இது ஆகிற காரியமா..ம்?

கலைMay 14th, 2007 at 11:08 am

அதெல்லாம் இல்லை மலைநாடான், நானே பலருடைய பதிவு வாசிச்சிட்டு கையெழுத்து போடாமல் போற ஆள்தான். :)

நான் ஒரு ஆர்வத்துடன் எதையும் ஆரம்பித்தால் முடித்து விடுவேன். முடிக்கும் வரை நிம்மதி இருக்காது. :)

அல்ப்ஸ் மலைச் சாரலின் அடுத்த பாகத்துக்கு போங்கோ.

ரவிசங்கர்May 14th, 2007 at 1:38 pm

ஆஹா..தொடர்வினை தொடரும் போல இருக்கே..நல்லது.

நோர்வே ஏன் இலங்கையின் அமைதி முயற்சிகளில் தமிழரின் நிலைப்பாட்டின் தேவையை உணர வேண்டும் என்பதற்கு நோர்வேயின் வரலாற்றைச் சுட்டிக் காட்டி அண்டன் பாலசிங்கம் அந்நாட்டுத் தலைவர்களோடு பேசியதாகப் படித்தேன். அது தான் கேட்டேன். விவரங்களைத் தேடிப் பார்க்கிறேன்.

கூகுளில் நோர்வே என்று தேடினால் உங்கள் வலைப்பதிவு வருகிறது :) நல்ல ஒரு களஞ்சியக் கட்டுரை போலவே எழுதிட்டீங்க.. விக்கிபீடியா, என் பதிவு இரண்டுல இருந்தும் எல்லா பாகங்களையும் இணைச்சுட்டேன்.

அடிக்கடி உங்கள ஏதாச்சும் நல்ல விதமா பாதிச்சு நீங்க தொடர்ந்து எழுதணும்னு நோர்வே முருகன் கிட்ட வேண்டிக்கிறேன் :)

இங்கயும் 17, 18ஆம் நாள் விடுமுறை தான்!

kadaikoditamilanMay 14th, 2007 at 1:38 pm

Mihavum Nanadraga irunthathu. Atharkull mudithuviteergalae.

பொன்ஸ்~~PoornaMay 14th, 2007 at 2:09 pm

//Mihavum Nanadraga irunthathu. Atharkull mudithuviteergalae. //
ஆமாம்.. தொடர்ந்து எழுதிருக்கலாம்.. இந்தக் கடைசி பதிவு ரொம்ப அவசரத்தில் எழுதியது போல் இருந்தது.. பிரித்து இன்னும் கொஞ்சம் விரித்துச் சொல்லிருக்கலாம்..

இந்தியாவைப் பத்தி பொன்ஸா?!! பொன்ஸுங்கிறது யாரு? ;)

DeivaMay 14th, 2007 at 2:44 pm

Do u have any links or URLs for immigration to Norway. It would be helpful if you can post the link. Thanks in advance

கலைMay 14th, 2007 at 2:45 pm

Deiva! Here is the link. http://www.udi.no/default.aspx?id=2112

கலைMay 14th, 2007 at 2:49 pm

ரவி! நோர்வே முருகன் என்று சொன்னதும் எனக்கு நினைவுக்கு வருவது. கனடாவில் இருந்து நோர்வேக்கு வந்து சென்ற ஒரு வயதானவர் சொன்னது. “இங்கதான் நல்ல மலையள் எல்லாம் இருக்குதே. பேசாம ஒரு முருகன் கோவிலைக் கட்டி வைச்சால், நல்லா உழைக்கலாம்.” அவர் நகைச்சுவைக்காக சொல்கின்றார் என்றுதான் முதலில் நினைத்தேன். அவர் தொடர்ந்து பேசியதில் உண்மையாகவே சொன்னார் என்று புரிந்து நொந்து போனேன். காசு உழைக்க கோவில் கட்டட்டாம். ம்ம்ம்

கலைMay 14th, 2007 at 2:51 pm

கடைகோடித் தமிழன்! தொடங்கி விட்டேன். எப்படியும் எழுதி முடித்து விட வேண்டும் என்று நானே ஒரு மாதிரி எழுதி முடித்து விட்டு, நிம்மதிப் பெரு மூச்சு விட்டேன். நீங்களானால் இன்னும் எழுதுவது பற்றி சொல்கின்றீர்கள். :)

கலைMay 14th, 2007 at 2:51 pm

பொன்ஸ்! வேறு எந்த பொன்ஸ் உம் இல்லை. இந்தியாவில் இருக்கும் நீங்களேதான். வேறு யாருக்கு இப்படி பெயர் இருக்கும்? :)

ரவிசங்கர்May 15th, 2007 at 7:24 am

காசு உழைக்கிறதுன்னா காசு சேர்க்கிறதா

கலைMay 15th, 2007 at 7:26 am

காசு உழைக்கிறதென்றால், earning money :)

ரவிசங்கர்May 15th, 2007 at 11:13 am

ஓ..அவர் சொன்னது ஒன்னும் தப்பில்லையே :) உலகம் தெரிஞ்சவர் ! :)

து. சாரங்கன் / SaruJune 9th, 2007 at 7:45 am

கலையக்கா, நீங்க “வீக்கிங் காலம்” என்று சொல்வது “வைக்கிங்” காலத்தைத்தானே.

நன்றாக எழுதியுள்ளீர்கள். நோர்வேயையும் என் “சுற்றுலா செல்ல வேண்டிய நாடுகள்” பட்டியலில் சேர்த்திட்டேன்.

மலைநாடான்June 9th, 2007 at 8:18 am

//இந்தியாவைப் பத்தி பொன்ஸா?!! பொன்ஸுங்கிறது யாரு? ;) //

என்ன இப்பிடிக் கேட்டிட்டீங்க. காந்தியின் தண்டியாத்திரையில் ஆர்வமுடன் கலந்த ஒரு புரட்சிகரப் பெண் அல்லவா? :) )

கலைJune 11th, 2007 at 8:55 am

சாரங்கன்! ஆம், வீக்கிங், வைக்கிங் (Viking) எல்லாம் ஒன்றுதான் :) . கட்டாயம் நோர்வேயை வந்து பாருங்கள். அப்படியே எங்களிடமும் வந்து போங்க.

மலைநாடான்! உண்மையிலேயே பொன்ஸ் என்று ஒரு பெயர் இருந்திருக்கா?

Leave a comment

Your comment