மன அழுத்தமா?

மன அழுத்தத்தை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்!

இன்றைய அவசர உலகத்தில், இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், மன அழுத்தம் என்பது சாதாரண விடயமாகிக் கொண்டு வருகிறது. நமது தேகத்தின் நிலை (posture), பழக்க வழக்கங்கள் (habits), எண்ணங்கள் (thoughts), நடத்தை (behavior) போன்றவற்றில் ஏற்படுத்தும் மாற்றங்களால் மன அழுத்தத்தை தொடர்ந்து நீண்ட காலத்தில் குறைக்க முடியும். இங்கே மன அழுத்தத்தை விரைவாக குறைப்பதற்கான எட்டு எளிய முறைகள் தரப்பட்டு இருக்கின்றன.

1. கோபத்தை கட்டுப்படுத்துதல்!

அற்பமான, முக்கியத்துவமில்லாத, மிகச் சாதாரணமான விடயத்தையிட்டு சில சமயம் நமக்கு கோபம் வருவதுண்டு. அந்த கோபம் அவசியமற்றது என்பது புரிந்தே இருந்தாலும் நாம் அந்த கோபத்தை கட்டுப்படுத்தாமல் சில சமயங்களில் வெளிப்படுத்துகிறோம். அப்படி சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, நாம் கோபப்பட்டு நமது சக்தியை விரயம் செய்யும் அளவுக்கு அந்த விடயம் தகுதியற்றது என்று மனதிற்கு உணரவைத்து, அந்த கோபத்தை வர விடாமல் தடுங்கள். சக்திவாய்ந்த, கோபத்தை அடக்கியாளும் முயற்சி மன அழுத்தத்தை குறைப்பதற்கு மிகச் சிறந்த, உண்மையான வழியாகும்.

2. சுவாசம்!

மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுத்து விடுவது மன அழுத்தத்தை குறைக்கும். உங்களது மன அழுத்தம் அதிகரிக்கப்போகும் அடுத்த சந்தர்ப்பத்தில், மிக ஆழமாக மூன்று தடவைகள் மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக மூச்சை வெளியேற்றுங்கள். உங்களுக்கு சில நிமிடங்கள் கிடைக்குமாயின், இந்த சுவாசிக்கும் பயிற்சியை தியானம் போல் செய்து பாருங்கள்.

3. மெதுவாக பேசுங்கள்!

மன அழுத்தம் ஏற்படும்போது, நாம் மிக விரைவாகவும், சத்தமாகவும் பேச ஆரம்பிக்கிறோம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுபோல் தோன்றினால், உடனே உங்கள் பேச்சை வழமையை விட மெதுவாக்கிக் கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பிப்பதுடன், மன அழுத்தத்தை தரும் அந்த சூழ்நிலையை நியாயமாகவும், கட்டுப்பாட்டுடனும் எதிர்கொள்ளத் தயாராவதை உணர்வீர்கள்.

4. நேரத்தை பயன்தரும் வகையில் கையாளுதல்!

நீங்கள் ஒத்திப்போட்டு வரும் வேலைகளில் ஏதாவது ஒரு வேலையை தெரிவு செய்து உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். உங்களை இழுத்தடித்து வந்த பொறுப்புக்களில் ஒன்றையேனும் நிறைவேற்றிய திருப்தி, உங்களுக்கு புதிய சக்தியையும் உற்சாகத்தையும் தருவதுடன், உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.

5. சுத்தமான காற்றை சுவாசியுங்கள்!


ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களேனும் வெளியே வந்து சுத்தமான காற்றை சுவாசியுங்கள்.

6. பசி, உலர்வை தவிருங்கள்!

நிறைய திரவ ஆகாரத்தை உட்கொள்வதனால் உலர்வை தவிர்ப்பதுடன், நேரத்துக்கு சிறிய அளவிலேனும் உணவருந்துவதன் மூலம் பசியைத் தவிருங்கள். பசியும், உலர் நிலையும் நீங்கள் உணர்வதற்கு முன்னரே ஒரு ஆக்கிரமிப்பு மனோநிலையையும், மனவிசாரம், கவலையையும் தூண்டும் சக்தி உள்ளவையாக கருதப்படுகிறது.

7. தேகநிலை சோதிப்பு (quick posture check)!

இடையிடையே விரைவான ஒரு தேகநிலை சோதிப்பை மேற்கொள்ளுங்கள். தலையையும், தோள்களையும் நேராக நிலை நிறுத்தி, வளைந்திருக்கும், மந்தமான நிலையை தவிருங்கள். வளைந்த நிலையில் தசைகளில் ஏற்படும் இழுவிசை அல்லது இறுக்கமானது மன அழுத்தத்தை கூட்டுகிறது.

8. நாளின் முடிவில் உற்சாகமேற்படுத்தல்!

ஒவ்வொரு நாளின் முடிவிலும், உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய எதையாவது ஒன்றையாவது, சில நிமிடங்களாவது செய்யுங்கள். எல்லா சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, சில நிமிட நேர ஓய்வான குளியல், அல்லது அரை மணி நேர அமைதியான வாசிப்பு, அல்லது கண்ணை மூடியபடி சில நிமிடங்களேனும் அமைதியாக இசையை ரசித்தல்… இப்படி எதையாவது செய்யுங்கள். அந்த நேரத்தில் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளையோ, அல்லது அன்று நடந்து முடிந்த விடயங்களைப் பற்றியோ யோசிக்காதீர்கள். உங்கள் வேலை பற்றியோ, வீட்டில் செய்ய இருக்கும் வேலைகள் பற்றியோ, குடும்ப பிரச்சனைகள் பற்றியோ, எதைப் பற்றியுமே அந்த சில நிமிடங்களாவது நினைப்பதை தவிர்த்து விடுங்கள்.

அப்படி செய்வீர்களேயானால், அழுத்தம் நிறைந்த அடுத்த நாளைச் சந்திக்க உற்சாகமாக தயாராகி விடுவீர்கள்.

Related posts

Comments (4)

குளோபன்February 26th, 2009 at 10:50 pm

உங்களது பதிவுகள் நன்றாக இருக்கிறது. பதிவுப் பக்கமும் எளிமையாக இருக்கிறது. ஆனால் பக்கங்கள், அண்மைய மறுமொழிகள், பகுப்புகள், பழையவை போன்றவை கீழே சென்றுவிடுகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் முகப்புப் பக்கத்தின் மேலேயே இருப்பது போன்ற டெம்ப்ளட்டை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும்.

-குளோபன்

NaseemMarch 8th, 2009 at 12:54 am

நல்ல அருமையான கருத்துகள்…மனதை தைரியப்படுத்த சில வழிகள் கொடுக்கவும்.

KannanSeptember 30th, 2009 at 1:43 am

மிகவும் பிரமாதம்

januOctober 26th, 2009 at 5:19 am

hai everybody…i’m janu…now i’m in very critical stage..i cant live any more like that i’m thinking….i loved 1 guy so alot…but now he left me..i cant in normal…please help me.

Leave a comment

Your comment