வன்முறைக்கு எதிர்ப்பு!

Posted On ஜனவரி 10, 2016

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம்

Comments Dropped leave a response

எப்பொழுதோ எழுதப்பட்ட இந்தப் பதிவு draft இல் இருந்தது. அதனை தற்போது பதிவிடுகின்றேன்.

வன்முறைக்கு எதிர்ப்பு

வன்முறைக்கு எதிராக மகாத்மா காந்தியின் பேரனான டாக்டர் அருண் காந்தியும், அவரது மனவியாரும் இணைந்து எம்.கே.காந்தி நிறுவனத்தை (M.K.Gandhi Institute for nonviolence) 1991 இலிருந்து நடாத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, வன்முறைக்கு எதிராக விரிவுரைகள் ஆற்றி வருகிறார்கள். இந் நிறுவனத்தின் கல்வித்திட்டமானது அபிப்பிராய பேதங்களை தடுத்தல், கோபத்தை அடக்கியாளல், நல்ல உறவுகளை, சமூகத்தை கட்டியெழுப்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டது. உள்ளூர் மட்டத்திலும், தேச மட்டத்திலும், உலக மட்டத்திலும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், நடைமுறைப்படுத்துவதுமே இந் நிறுவனத்தின் முக்கியமான நோக்கமாகும். Puerto Rico பல்கலைக்கழகத்தில் டாக்டர் அருண் காந்தி வழங்கிய விரிவுரை ஒன்றில் வன்முறையற்ற, முரட்டுத்தனமற்ற, கொடூரமற்ற, பலாத்காரமற்ற பிள்ளை பராமரிப்பு (non-violent parenting) பற்றி பேசும்போது, அவர் குறிப்பிட்டிருந்த விடயமொன்றை அண்மையில் நண்பரொருவர் மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார். அதை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். டாக்டர் அருண் காந்தி அவர்கள் அவரது பதினாறாவது வயதில், தனது பெற்றோருடனும், இரு சகோதரிகளுடனும் தென்னாபிரிக்காவில் Durban என்ற இடத்தில் வசித்து வந்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை அந்த விரிவுரையில் நினைவு கூர்ந்துள்ளார். அந்த Durban என்ற இடம் ஒரு கிராமப்புறமாகவும், அக்கம்பக்கத்தார் என்று சொல்லிக் கொள்ள அதிகமானோர் இல்லாத ஒரு இடமாகவும் இருந்ததால், தானும், தனது சகோதரிகளும், 18 மைல் தொலைவிலுள்ள நகரத்திற்கு செல்ல ஏற்படும் சந்தர்ப்பங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி இருப்பார்களாம். ஒரு முறை அவரது தந்தையார் ஒரு முழுநாள் கூட்டத்திற்காக நகரத்திற்கு செல்ல வேண்டி இருந்தபோது, அவரிடம் தன்னை காரில் நகரத்திற்கு அழைத்துச் செல்லும்படி கேட்டாராம். அத்துடன் தாயாரும் அங்கு வாங்கி வர வேண்டிய மளிகைபொருட்களுக்கு ஒரு துண்டை கொடுத்தாராம். அத்துடன் நகரத்தில் முடிக்க வேண்டிய சிறு சிறு வேலைகள் பற்றியும் சொன்னார்களாம். அதில் ஒன்று காரை பழுது பார்த்தலுமாகும். அவரும் நண்பர்களை சந்திக்கலாம் என்ற ஆவலிலும், நகரத்திற்கு செல்லும் உற்சாகத்திலும் சென்றுள்ளார். தந்தையார் கூட்டம் நடக்குமிடத்தில் இறங்கிக் கொண்டு, தன்னை 5 மணிக்கு வந்து ஏற்றிச் செல்லும்படி கூறி இருக்கிறார். பின்னர் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு இவர் நண்பர்களுடன், ஒரு ஆங்கிலப்படத்திற்கு சென்றிருக்கிறார். படத்தில் மூழ்கிப்போய் விட்டதால் நேரத்தை தவற விட்டுவிட்டாராம். அவர் நினைவுக்கு வந்து கார் திருத்துமிடம் போய் காரை எடுத்துக் கொண்டு தந்தையாரிடம் சென்றபோது நேரம் 6 மணி ஆகி விட்டதாம். அப்போது தகப்பனார் தாமதமாக வந்ததற்கு காரணம் கேட்டபோது, மேலைநாட்டு படம் பார்த்து வருகிறேன் என்ற சொல்லத் தயக்கமாக இருந்ததால், கார் திருத்துமிடத்தில் அவர்கள் தாமதமாகத்தான் தந்தார்கள் என்று கூறி இருக்கின்றார். தகப்பனார் கார் திருத்துமிடத்திற்கு ஏற்கனவே தொலைபேசியில் அழைத்துப் பார்த்திருந்த விடயம் இவர் அறிந்திருக்கவில்லையாம். அப்போது தகப்பனார் சொன்னாராம், உண்மையில் தாமதத்திற்கு காரணத்தை என்னிடம் சொல்ல நீ தயங்கும்படி, அல்லது அதற்காக ஒரு பொய்யை சொல்லும்படி நான் உன்னை வளர்த்து விட்டேன். அப்படியானால் நான் உன்னை வளர்த்த முறையில் எங்கோ தவறு நடந்துள்ளது. அதற்காக, இன்று இந்த 18 மைலும் அதை யோசித்த படியே நடந்து வருகிறேன். நீ காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டாராம். அந்த இருட்டிலும், அந்த பாதையிலும் அவர் ஐந்தரை மணித்தியாலம் நடந்து வர விட்டுவிட்டு போக முடியாமல் இருந்ததால் அவருக்குப் பின்னால் காரை மெதுவாக ஓட்டியபடி, தான் சொன்ன அவசியமற்ற பொய்யை நினைத்த படியே போனாராம். அன்றே எந்த பொய்யும் சொல்லக் கூடாது என்று அவர் முடிவு எடுத்தாராம். வேறு விதமான வன்முறையுடன் கூடிய தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அந்த தண்டனையை ஏற்றுக் கொண்டு, அதன் வலி மறைந்ததும், அந்த நிகழ்ச்சியையும் மறந்திருக்கக் கூடும், தொடர்ந்தும் அதே மாதிரியான பொய்களும் சொல்லி இருக்கவும் கூடும். ஆனால் இந்த தனித்தன்மையுடைய, சக்தி மிக்க, வன்முறையற்ற முறை தன்னை ஒரு நல்ல வழிக்கு திருப்ப முடிந்தது என்று கூறியுள்ளார். இதுவே வன்முறையற்ற ஒரு செயற்பாட்டின் பலம் பொருந்திய சக்தி என்கிறார் டாக்டர் அருண் காந்தி அவர்கள்.

பின்னூட்டமொன்றை இடுக