வன்முறைக்கு எதிர்ப்பு!

Posted On ஜனவரி 10, 2016

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம்

Comments Dropped leave a response

எப்பொழுதோ எழுதப்பட்ட இந்தப் பதிவு draft இல் இருந்தது. அதனை தற்போது பதிவிடுகின்றேன்.

வன்முறைக்கு எதிர்ப்பு

வன்முறைக்கு எதிராக மகாத்மா காந்தியின் பேரனான டாக்டர் அருண் காந்தியும், அவரது மனவியாரும் இணைந்து எம்.கே.காந்தி நிறுவனத்தை (M.K.Gandhi Institute for nonviolence) 1991 இலிருந்து நடாத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, வன்முறைக்கு எதிராக விரிவுரைகள் ஆற்றி வருகிறார்கள். இந் நிறுவனத்தின் கல்வித்திட்டமானது அபிப்பிராய பேதங்களை தடுத்தல், கோபத்தை அடக்கியாளல், நல்ல உறவுகளை, சமூகத்தை கட்டியெழுப்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டது. உள்ளூர் மட்டத்திலும், தேச மட்டத்திலும், உலக மட்டத்திலும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், நடைமுறைப்படுத்துவதுமே இந் நிறுவனத்தின் முக்கியமான நோக்கமாகும். Puerto Rico பல்கலைக்கழகத்தில் டாக்டர் அருண் காந்தி வழங்கிய விரிவுரை ஒன்றில் வன்முறையற்ற, முரட்டுத்தனமற்ற, கொடூரமற்ற, பலாத்காரமற்ற பிள்ளை பராமரிப்பு (non-violent parenting) பற்றி பேசும்போது, அவர் குறிப்பிட்டிருந்த விடயமொன்றை அண்மையில் நண்பரொருவர் மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார். அதை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். டாக்டர் அருண் காந்தி அவர்கள் அவரது பதினாறாவது வயதில், தனது பெற்றோருடனும், இரு சகோதரிகளுடனும் தென்னாபிரிக்காவில் Durban என்ற இடத்தில் வசித்து வந்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை அந்த விரிவுரையில் நினைவு கூர்ந்துள்ளார். அந்த Durban என்ற இடம் ஒரு கிராமப்புறமாகவும், அக்கம்பக்கத்தார் என்று சொல்லிக் கொள்ள அதிகமானோர் இல்லாத ஒரு இடமாகவும் இருந்ததால், தானும், தனது சகோதரிகளும், 18 மைல் தொலைவிலுள்ள நகரத்திற்கு செல்ல ஏற்படும் சந்தர்ப்பங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி இருப்பார்களாம். ஒரு முறை அவரது தந்தையார் ஒரு முழுநாள் கூட்டத்திற்காக நகரத்திற்கு செல்ல வேண்டி இருந்தபோது, அவரிடம் தன்னை காரில் நகரத்திற்கு அழைத்துச் செல்லும்படி கேட்டாராம். அத்துடன் தாயாரும் அங்கு வாங்கி வர வேண்டிய மளிகைபொருட்களுக்கு ஒரு துண்டை கொடுத்தாராம். அத்துடன் நகரத்தில் முடிக்க வேண்டிய சிறு சிறு வேலைகள் பற்றியும் சொன்னார்களாம். அதில் ஒன்று காரை பழுது பார்த்தலுமாகும். அவரும் நண்பர்களை சந்திக்கலாம் என்ற ஆவலிலும், நகரத்திற்கு செல்லும் உற்சாகத்திலும் சென்றுள்ளார். தந்தையார் கூட்டம் நடக்குமிடத்தில் இறங்கிக் கொண்டு, தன்னை 5 மணிக்கு வந்து ஏற்றிச் செல்லும்படி கூறி இருக்கிறார். பின்னர் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு இவர் நண்பர்களுடன், ஒரு ஆங்கிலப்படத்திற்கு சென்றிருக்கிறார். படத்தில் மூழ்கிப்போய் விட்டதால் நேரத்தை தவற விட்டுவிட்டாராம். அவர் நினைவுக்கு வந்து கார் திருத்துமிடம் போய் காரை எடுத்துக் கொண்டு தந்தையாரிடம் சென்றபோது நேரம் 6 மணி ஆகி விட்டதாம். அப்போது தகப்பனார் தாமதமாக வந்ததற்கு காரணம் கேட்டபோது, மேலைநாட்டு படம் பார்த்து வருகிறேன் என்ற சொல்லத் தயக்கமாக இருந்ததால், கார் திருத்துமிடத்தில் அவர்கள் தாமதமாகத்தான் தந்தார்கள் என்று கூறி இருக்கின்றார். தகப்பனார் கார் திருத்துமிடத்திற்கு ஏற்கனவே தொலைபேசியில் அழைத்துப் பார்த்திருந்த விடயம் இவர் அறிந்திருக்கவில்லையாம். அப்போது தகப்பனார் சொன்னாராம், உண்மையில் தாமதத்திற்கு காரணத்தை என்னிடம் சொல்ல நீ தயங்கும்படி, அல்லது அதற்காக ஒரு பொய்யை சொல்லும்படி நான் உன்னை வளர்த்து விட்டேன். அப்படியானால் நான் உன்னை வளர்த்த முறையில் எங்கோ தவறு நடந்துள்ளது. அதற்காக, இன்று இந்த 18 மைலும் அதை யோசித்த படியே நடந்து வருகிறேன். நீ காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டாராம். அந்த இருட்டிலும், அந்த பாதையிலும் அவர் ஐந்தரை மணித்தியாலம் நடந்து வர விட்டுவிட்டு போக முடியாமல் இருந்ததால் அவருக்குப் பின்னால் காரை மெதுவாக ஓட்டியபடி, தான் சொன்ன அவசியமற்ற பொய்யை நினைத்த படியே போனாராம். அன்றே எந்த பொய்யும் சொல்லக் கூடாது என்று அவர் முடிவு எடுத்தாராம். வேறு விதமான வன்முறையுடன் கூடிய தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அந்த தண்டனையை ஏற்றுக் கொண்டு, அதன் வலி மறைந்ததும், அந்த நிகழ்ச்சியையும் மறந்திருக்கக் கூடும், தொடர்ந்தும் அதே மாதிரியான பொய்களும் சொல்லி இருக்கவும் கூடும். ஆனால் இந்த தனித்தன்மையுடைய, சக்தி மிக்க, வன்முறையற்ற முறை தன்னை ஒரு நல்ல வழிக்கு திருப்ப முடிந்தது என்று கூறியுள்ளார். இதுவே வன்முறையற்ற ஒரு செயற்பாட்டின் பலம் பொருந்திய சக்தி என்கிறார் டாக்டர் அருண் காந்தி அவர்கள்.

நீண்ட நாட்களின் பின்னர்!

Posted On ஏப்ரல் 6, 2013

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள், சமூகம், ரசித்தவை
குறிச்சொற்கள்: , , ,

Comments Dropped leave a response

நீண்ட நாட்களின் பின்னர்

இன்று சனிக்கிழமை. ஆனால் வேலை செய்யவென்று வேலைக்கான இடத்திற்கு வந்தேன். மகளுக்கு இன்று சங்கீதம் சோதனை. அவளைக் கூட்டிக்கொண்டு போய் சோதனைக்கான இடத்தில் விட்டுவிட்டு, கொஞ்சம் வேலை செய்யலாமே என்று வேலைத்தளம் வந்தேன். கடந்த வருடம் புதிதாக ஒரு project இல் வேலை செய்ய ஆரம்பித்தது முதல், நினைக்கிற நாளில் வேலை செய்து நினைக்கின்ற நாளில் விடுமுறை எடுக்கும் சுதந்திரம் கிடைத்தது. அதனால், சனியோ, ஞாயிறோ எனக்கு வசதியான நேரத்தில் வேலை செய்துவிட்டு, பாடசாலை விடுமுறையை ஒட்டி, எனக்குத் தேவையான நாட்களில் விடுமுறை எடுத்துக்கொண்டு, குடும்பத்துடன் பல இடங்களுக்கும் பயணம் செய்ய முடிகின்றது. அதுசரி, வேலை செய்யவென்று வந்துவிட்டு, இங்கே வலைப்பதிவில் என்ன வேலை? 🙂 சும்மாதான். நீண்ட நாட்களாக எனது வலைப்பதிவு, வெறும் வெளி இணைப்புக்கள் கொடுக்கும் இடமாகவே உள்ளதே. இப்படியே விட்டால், எனது வலைப்பதிவு என்னுடையதுதானா என்ற சந்தேகம் எனக்கே வந்து விடுமோ என்றுதான், இன்று எதையாவது இங்கே எழுதலாமே என்று ஒரு எண்ணம் வேலைத்தளம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது வந்தது. அதனால்தான் இந்தப் பதிவு.

கைத்தொலைபேசியில் ரேடியோ

வேலைத்தளம் மிகவும் அமைதியாக இருக்கின்றது. என்னைப்போல் வாரவிடுமுறையில் ஆய்வகத்தில் வேலை செய்ய (அல்லது செய்யும் எண்ணத்துடன் வந்த, ஹி ஹி)  வந்திருக்கும் ஓரிருவரைத் தவிர, அமைதியாகவே இருக்கின்றது. அதனால், தமிழ் ரேடியோவைப் போட்டுக் கேட்டுக்கொண்டே, எனது வேலையை (அதாவது வலைப்பதிவில் இடுகை இடும் வேலையை) தொடர்கின்றேன். எனது கைத்தொலைபேசியில் பல இணைய ரேடியோ நிகழ்ச்சிகளும் எடுத்து விட்டிருக்கின்றேன். எனவே கைத்தொலைபேசிக்கு இணைய இணைப்பைக் கொடுத்துவிட்டு ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். சரி இன்றைக்கு ATBC கேட்கலாம் என்று போட்டேன். ஆனால் அது இன்றைக்கு வரவில்லை. எனவே CTBC போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

மகாதேவா ஆச்சிரம் சிறுவர் இல்லம்

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்குப் போய் குடும்ப உறவுகளைப் பார்த்து வருவதுடன், உதவி தேவைப்படுபவர்களுக்கு, எம்மாலான உதவிகளைச் செய்து வருவோம். அப்படி கடந்த ஆண்டில் சென்றபோது நாம் சென்ற இடம் மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்லம். தயவுசெய்து இந்த இணைப்புக்குச் சென்று, அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையைப் பார்த்துவிட்டு, முடிந்த அளவில் அவர்களுக்கு உதவுமாறு இந்த இடுகையைப் பார்க்கும் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன். ஒவ்வொருவரும் நேரடியாகவே அவர்களைத் தொடர்பு கொண்டு உதவ முடியும். கடந்த ஆண்டில் அவர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்தது (நாம் கடந்த ஆண்டில் அவர்களிடம் சென்று வந்ததால் அவர்களிடம் எமது வீட்டு விலாசம் இருந்தது). அதில் அரசாங்கம் தங்களுக்கு மின்சார வசதியை இலவசமாகத் தருவதாகச் சொல்லியிருந்ததாகவும், ஆனால் தற்போது இல்லையென்று விட்டார்கள் என்றும், அதனால் தாங்கள் சூரியவலுவைப் பெற்று, மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு உதவி தேவையென்றும் எழுதியிருந்தார்கள். அதற்கு எம்மாலான உதவியைச் செய்வதுடன், நண்பர்களிடமும் கூறுமாறு கேட்டிருந்தார்கள். நான் எனதுமின்னஞ்சல் தொடர்பில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் இது தொடர்பாய் மடலிட்டிருந்தேன். நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு தயவு செய்து இதனை அறிவியுங்கள். எவரை நம்பி உதவுவது என்ற பிரச்சனை இன்றி, ஒவ்வொருவரும் தாங்களாகவே அவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு உதவலாம். அவர்களது இணையப் பக்கத்தில் தேவையான அனைத்து தொடர்புக்கான தகவல்களும் உள்ளன. தமிழ்விக்கிப்பீடியாவிலும் மகாதேவா சிறுவர் இல்லம் என்று  ஒரு கட்டுரை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேயிருக்கின்றேன். யாராவது இதனை வாசிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்களும் இதனைத் தொடங்கலாம்.

பயணங்கள் முடிவதில்லை

நோய் நிர்ணயத்துக்கான வழமையான சோதனை வேலையில் (Routine work of Diagnostic testing) இருந்து புதிதாக  புற்றுநோய் தொடர்பான ஒரு Project இல் வேலை செய்ய ஆரம்பித்ததில் இருந்து வேறு வேலைகளுக்கான நேரம் குறைந்து போனது. முக்கியமாக நான் மிகவும் விரும்பிச் செய்துவந்த தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பு குறைந்து போனது :(. விடுமுறை கிடைக்கும்போதெல்லாம், குடும்பத்துடன் எங்காவது வெளிநாட்டுப் பயணங்கள் செய்கின்றோம். அதனால் வீட்டில் இருக்கும்போது கணினியில் செய்ய வேண்டிய வேலைகள் செய்யப்படாமல் போய்விடுகின்றது. இந்தப் பயணங்கள் பற்றி, அங்கே பார்த்த அழகான இடங்கள்பற்றி, சந்தித்த adventurous experiences, பொழுதுபோக்கு அம்சங்கள் பற்றியெல்லாம் பல தனிப்பதிவுகள் போட வேண்டும். ஒவ்வொருமுறை பயணம் முடிந்து வரும்போதும், அவைபற்றி எழுதி, படங்கள் இணைக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் பொறுமையாக இருந்து அதனைச் செய்ய நேரம் கிடைப்பதில்லை. கடந்துபோன இரு ஆண்டுகளில்தான் எத்தனை பயணங்கள். அவற்றில் சில உறவுகளின் சுக துக்கங்களில் பங்கேற்பதற்கான பயணங்கள். ஏனையவை குடும்பத்துடன் உலகின் பல பகுதிகளையும் பார்த்து வருவதற்கான பயணங்கள். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள்.

இசையும் நினைவுத்திறனும்

காரில் போகும்போது கேட்பதற்காக பாடல்கள் சேகரித்துக் கொண்டிருந்தேன். போன ஆண்டு வாங்கிய புதிய காரில் USB யில் பாடல்கள் போடும் வசதி இருந்ததால், எல்லாப் பாடல்களையும் ஒரே இடத்தில் சேர்க்கலாமே என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். கடந்த கிழமை Easter holiday க்கு ஜேர்மனியில் இருக்கும் சகோதரி வீட்டிற்குப் போயிருந்தோம். அங்கே குளிராக இருந்ததனால், அதிகமாக எங்கும் வெளியே செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து, கதைத்து, சிரித்து, சமைத்துச் சாப்பிட்டு, சேர்ந்திருந்து படங்கள் பார்த்து, விளையாடி பொழுதைக் கழித்தோம். அத்துடன் எனது பாடல் சேகரிக்கும் வேலையையும் பார்த்தேன். USB யில் 800 பாடல்களுக்கும் மேல் சேர்த்து விட்டேன். இது ஒரு கதம்பம். எல்லா வகையான பாடல்களும் இருக்கின்றன.தமிழ்ப் பாடல்களில் மிகப் பழையவை, இடைக்காலப் பாடல்கள், புதியவை எல்லாம் அடங்கும். மேலும் இவற்றில் மிகப் பிடித்த சில ஆங்கில, மலையாள, தெலுங்கு, இந்திப் பாடல்களும் அடக்கம். ஆங்கில கார்ட்டூன் படங்களில் வரும் சில நல்ல பாடல்களும் கூட சேர்த்துள்ளேன். காரில் குடும்பமாகப் போகும்போது, எல்லோரின் தேவையையும் பூர்த்தி செய்வதற்காக இந்த கதம்பமாலை செய்தேன். இல்லாவிட்டால், ‘எனக்கு புதுப்பாட்டைப் போடுங்கோ, இல்லையில்லை எனக்கு பழைய பாட்டைப் போடுங்கோ, இல்லை ஆங்கிலப் பாட்டைப் போடுங்கோ’ என்று ஒவ்வொருவரும் கேட்கின்றார்கள். இப்போ அப்படி யாராவது கேட்டால், ‘பொறுத்துக் கொள்ளுங்கோ! அடுத்து அதுவும் வரும்’ என்று சொல்லி விடுகின்றேன். எப்படி இருக்கு இந்த ஐடியா? 🙂 எனக்கு பாடல்கள் சேகரித்து முடித்துவிட்டு எண்ணிக்கை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இந்த 800 இல் அடங்கியவற்றை விட இன்னும் எத்தனையோ பாடல்கள் எனக்குத் தெரியும். இத்தனை பாடல்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா என்ன என்பதுதான் ஆச்சரியத்துக்குக் காரணம். எனது நினைவுத் திறனை நானே மெச்சிக் கொண்ட நேரமிது :).

சுருங்கிய உலகம்

அண்மையில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் ஒரு விடயம் “உலகம் எத்தனை சுருங்கி விட்டது” என்பதுதான். உலகின் எந்தப் பகுதியில் இருப்பவரிடமும் உடனடியாக தொடர்பு கொள்ள முடிகின்றது. ஊரில் எங்கள் சின்ன கிராமத்தில் கூட இணைய வசதி வந்து விட்டதால், அப்பா, அம்மாவுடன் skype இல் பார்த்துப் பேசும் வசதி. தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் குறைந்து விட்டதால், நினைத்தவுடன் எவருடனும் (அதிகம் யோசிக்காமல்) பேச முடிகின்றது. தவிர கைத்தொலைபேசியில் WhatsApp, Viber, Tango, Skype, Snapchat என்று வெவ்வேறு இலவச தொடர்பாடல் வசதிகள். Latest ஆ நான் தொடர்பாடலுக்குப் பயன்படுத்துவது Snapchat. எதுவும் எழுதாமலே, ஒரு படம் மூலமே விசயத்தை இன்னொருவருக்குச் சொல்லிவிட முடிகின்றது. தட்டச்சு செய்யும் வேலை மிச்சம் :). இப்போவெல்லாம் கைத்தொலைபேசியிலேயே எத்தனை விடயங்கள் முடிந்து விடுகின்றது. ஒலி, ஒளித் தொடர்பாடல்கள், இணையப் பார்வை, விளையாட்டு (நான் விரும்பி விளையாடுவது Wordfeud, Chess, Draw free, Unblock me), facebook, twitter, messenger, bank வேலைகள், Notes and reminders, alarm etc etc. அது மட்டுமா, தொழில்நுட்ப வளர்ச்சியினால், எங்கிருந்தாலும், நினைத்தவுடன் கைத்தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். முன்பெல்லாம் “வீட்டுக்குப் போய் போன் செய்ய வேண்டும்” என்று நினைப்போம். இப்போ அப்படியா என்ன? வேலையில் இருக்கின்றீர்களா? No problem. கார் ஓட்டிச் சென்று கொண்டிருக்கின்றீர்களா? No problem. காரில் போகும்போது, கைத்தொலைபேசியைத் தொடக்கூடத் தேவையில்லை. இருக்கவே இருக்கு Blue tooth and mike வசதி. வெளியே எங்காவது நின்றாலோ, வேலைத் தளத்தில் இருக்கும்போதோ கூட இலவச Wi-Fi பல இடங்களில். இலவச தொடர்பாடல் வசதிகள் கைத்தொலை பேசிகளில்.

கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் 🙂

ஒன்று சொல்ல மறந்து விட்டேன். முன்பொரு தடவை நான் எழுதிய எனது ஆசிரியர் என்ற இந்தப் பதிவில் குறிப்பிட்ட எனது ஆசிரியரைக் கண்டு பிடித்துவிட்டேன். அவரின் சொந்த இடம் மானிப்பாய் என்று எனது நினைவில் இருந்தது. அதனை அம்மாவிடம் சொல்லியிருந்தேன். அம்மாதான் மானிப்பாயில் தொடர்புள்ளவர்கள் மூலம் விசாரித்து, அவரது தொலைபேசி எண்ணை எடுத்துத் தந்தார். அதன்பின்னர் தொடர்புகொண்டு அவருடன் கதைத்தேன். இரு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சென்றபோது நேரில் சந்திக்க முடிந்தது. அதே பழைய அன்புடன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வேலையில் ஓய்வெடுத்த பின்னர், பல சமூகத் தொண்டுகளில் ஈடுபட்டு வருகின்றார். எனது வகுப்பில் என்னுடன் படித்த ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டுக் கேட்டார். சிலருடன் தொடர்பிலும் இருக்கின்றார். அவர் கேட்கும்போதுதான் எனக்கே சிலருடைய பெயர் நினைவுக்கு வந்தது. இப்படி பெயர்கள் கூட மறந்து விட்டோமே என்று வெட்கமாகவும் இருந்தது. அவருடைய நினைவுத் திறனையும், மாணவர்கள்மேல் அவர் தற்போதும் வைத்திருக்கும் அதே அன்பையும் பார்க்கையில் மகிழ்ச்சியாகவும், சரியான ஒருவரைத்தான் தேடிச் சந்தித்திருக்கின்றோம் என்று மகிழ்வாகவும் இருந்தது.

ஆசிரியரைக் கண்டு பிடித்ததுபற்றி சொல்கையில் இன்னொன்றும் சொல்லத் தோன்றுகின்றது. மிக அண்மையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாகத் தொடர்பு விட்டுப் போயிருந்த ஒரு நெருங்கிய சினேகிதியையும் கண்டு பிடித்திருக்கின்றேன். அவளிருப்பது அமெரிக்காவில். ஏதோ ஒரு கட்டத்தில் நாமும் வீடு மாற, அதே நேரத்தில் அவர்களும் வீடு மாற, தொடர்பு தொலைந்து போனது. இலங்கை சென்ற அவளது கணவர் தற்செயலாக அங்கே எனது சகோதரியைச் சந்தித்ததால் மீண்டும் தொடர்பு துளிர் விட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

எனது உயிர்ப்பு

இன்று இங்கே வரும்போது, எனது இந்த உயிர்ப்பு பக்கம் Google search இல் எங்கே இருக்கின்றது என்று பார்த்தேன். அடடா 8 ஆவதாக வருகின்றதே. இது எனக்கு மட்டும்தான் வருகின்றதா, அல்லது எல்லோருக்கும் வருமா? 🙂

சரி சரி, இனி கொஞ்சம் எனது வேலையைப் பார்த்து விட்டு மகளைக் கூட்டிச் செல்ல போக வேண்டும். வணக்கம்.

மகளிர் தினம்!

Posted On மார்ச் 8, 2013

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம்

Comments Dropped leave a response

இன்று அனைத்துலக மகளிர் தினம். எனது தோழி ஒருத்தி குறிப்பிட்ட இந்தக் கட்டுரையை என்னுடன் பகிர்ந்து கொண்டாள். இந்த நாளில் அனைவருடனும் இக்கட்டுரையைப் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தில் இந்த இடுகை.

http://www.bbc.co.uk/news/world-21661744

விரைவில் எனது சமீபத்திய பயணங்கள்பற்றி ஒரு இடுகை பதிவு செய்யும் எண்ணம் உள்ளது.

தமிழ் விக்கி ஊடகப்போட்டி!

Posted On நவம்பர் 14, 2011

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம்

Comments Dropped leave a response

போட்டி பற்றிய விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.

 

 

http://upload.wikimedia.org/wikipedia/ta/e/ef/OnePageContestGuideUpdated.jpg

கவிதையும், கட்டகாடும்!

Posted On ஒக்ரோபர் 23, 2011

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம்

Comments Dropped leave a response

பல நாட்கள் முன்னர், ஏதோ ஒரு TV Channel இல் டைரக்டர் பார்த்தீபனிடம், “உங்களுக்குப் பிடித்த ஒரு கவிதை சொல்லுங்க” என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்ன கவிதை…… (என்னுடைய வார்த்தைகள் சிலவேளை மாறியிருக்கலாம். ஆனால் கவிதையின் அர்த்தம் கீழுள்ள மாதிரித்தான் இருந்தது).

“சுற்றி இத்தனை முட்களிருந்தும்,

பூக்கள் எப்படி இத்தனை அழகாக சிரிக்கின்றன”.

எனக்கு இதனைக் கேட்ட மறுகணம், சில மாதம் முன்னர் நான் சந்தித்த கட்டக்காட்டைச் சேர்ந்த மனிதர்கள் நினைவுக்கு வந்தார்கள். போரின் அகோரத்தை நேரில் சந்தித்து, அதனால் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தையும் கடந்து வந்து, எதிர்கால வாழ்க்கையின் நிச்சயமில்லா தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவர்கள் முகத்தில் தெரிந்த வெகுளித்தனமான சிரிப்பு, புன்னகை, உபசரிக்கும் பண்பு…… ம்ம்ம்ம்ம்.

போரின் பின்னர் இத்தனை காலமும் முகாமில் தங்கியிருந்த அவர்களை, திடீரென வந்த தேர்தலுக்கு முன்னால் மீளக் குடியமர்த்தியுள்ளார்கள். கட்டக்காடு என்ற இடம், இலங்கையின் முக்கிய நிலப்பரப்பை யாழ் குடாநாட்டுடன் இணைக்கும் கழுத்துப் பகுதில், கண்டிவீதியில் இருக்கும் இயக்கச்சி சந்தியிலிருந்து இந்தியப் பெருங்கடலை நோக்கிச் செல்லும் பாதையின் முடிவில் கடலுக்கு அண்மையாக இருக்கும் இடம். தமது சொந்த இடத்துக்கு வந்து விட்டாலும், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அங்கே இருக்கின்றார்கள். ஆனாலும், முகத்தில் சிரிப்பு இருக்கின்றது. எப்படி முடிகின்றது என்று எண்ணி ஆச்சரியப்பட்டேன்.

மரத்தின் கீழ் ஒரு கூடாரம், சில சட்டி, பானைகள், சில துணிமணிகள், அங்கேயே இருந்த சில ஆடுகள், குட்டிகள். இவ்வளவுதான். ஒரு சிலர் சிலரின் உதவி பெற்று சிறு குடிசைகள் போட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள். மலசலகூடம், குடி தண்ணீர் வசதிகள்கூட இல்லாமலும் இருக்கின்றார்கள்.

This slideshow requires JavaScript.

இதில் தொடர்பற்ற ஒரு கிளைக்கதை. இங்கே எழுதக் காரணம், கட்டக்காடு போகும்போது நிகழ்ந்த நிகழ்ச்சி என்பதுதான். போகும் வழியில் ஒரு சின்ன பெட்டிக்கடை. கடைக்காரரும் கொஞ்சம் ஏழ்மையில் இருக்கக் கூடியவர்தான் எனத் தெரிந்தது. ஏதோ பொருள் ஒன்று வாங்கி விட்டு, மிகுதி சில்லறை இல்லை என்றதும், தன்னிடம் இருந்த தர வேண்டிய பணத்தை விட அதிக பெறுமதியான தாள் ஒன்றை எடுத்து, “என்னிடம் சில்லறை இல்லை. இதை எடுத்துச் செல்லுங்கள்” என்று நீட்டுகின்றார். நாங்களே, “இல்லை, அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்ல வேண்டி இருந்தது. பணம் அதிகம் இருப்பவர்களுக்குத்தான் அதை கொடுக்க மனம் வருவதில்லைப் போலும். இல்லாதவர்கள் கொடுக்க தயங்க மாட்டார்கள் போலும் எனத் தோன்றியது. சில (அல்லது பல), கொஞ்சம் பெரிய கடைகளில்கூட சில்லறை இல்லையென்று சொல்லி, தேவையா, தேவையில்லையா என்ற கேள்வியே இன்றி, சின்ன இனிப்பு போன்ற எதையாவது தூக்கிக் கொடுப்பார்கள்.

நான் வித்யா – லிவிங் ஸ்மைல்!

Posted On மார்ச் 24, 2010

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம், நூல், ரசித்தவை

Comments Dropped 3 responses

லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய ‘நான் சரவணன் வித்யா’ வாசித்தேன். வாசிக்கும்போது தோன்றியது.

எத்தனை விதமான வலிகள், வேதனைகள், இரணங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்தாலும், பல பிரச்சனைகள் பொதுவானவையாக இருப்பதால், அவை காட்சிப்படுத்தப்படும்போது நாம் அந்த வலியை உணரா விட்டாலும், அனுபவிக்காவிட்டாலும், புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் திருநங்கைகளின் வலிகளும் வேதனைகளும் அத்தனை தெளிவாக எழுதப்படவோ, பேசப்படவோ, காட்சிப்படுத்தப்படவோ இல்லையாதலால், பலரும் அதை புரிந்து கொள்வதில்லை. வலிகளை புரிந்து கொள்ளாமல், கேலி, கிண்டல்களால் மேலும் மேலும் காயப்படுத்துகிறார்கள். அவர்களையும் சரிவரப் புரிந்து கொள்ளும் காலம் வர வேண்டும்.

ஆசிரியர் மன்னிப்பு கேட்டார்!

Posted On திசெம்பர் 16, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது குழந்தை, சமூகம், நோர்வே

Comments Dropped 7 responses

மகளின் பாடசாலையில் ஆசிரியர்களுடன் பெற்றோர் கலந்துரையாடுவதற்கென ஒதுக்கப்பட்ட நாட்கள் வந்தன. மகளின் 4 ஆசிரியர்களுடன் நேரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் மகளைப் பற்றி நன்றாகக் கூறக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

நம் குழந்தைகளைப் பற்றி எமக்கு தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் சொல்லக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான். உங்கள் மகள் பாடம் நன்றாகச் செய்கின்றாள், ஏனைய குழந்தைகளுடன் மிகவும் அன்பாகவும், எல்லார்மேலும் அக்கறையாகவும் நடந்து கொள்கிறாள், உங்கள் மகள் நல்ல தைரியசாலி என்று கேட்க யாருக்குத்தான் மகிழ்ச்சி இல்லாமல் போகும்?

ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய தலைப்பில் எல்லாப் பாடங்களையும் தொடர்புபடுத்தி சொல்லித் தருகிறார்கள். இந்த தடவை வானியல்பற்றி, மகளுக்கு மிகவும் பிடித்தமான பகுதி. அவர்களுக்கு இருக்கும் பாடங்களின் பெயர்கள் நமக்கு இருந்தவை போலில்லை :). ஒரு பாடம் IT & DT (Information Technolgy and Design Technology).

முதலில் சந்தித்தது IT & DT ஆசிரியை. கண்டதுமே, அவர் பாடத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், ”போன ஆண்டு நாடகக் குழுவில் உங்கள் மகள் மிக நன்றாகச் செய்தாள். இந்த முறையும் அவள் கட்டாயம் வர வேண்டும்” என்று கூறி, பழைய படங்கள் எல்லாம் காட்டினார்.

கடைசியில் சந்தித்தது மகளின் ஆங்கில ஆசிரியை. அவரே வகுப்பாசிரியரும் என்பதால் நீண்ட நேரம் பேச்சு ஓடியது. அவருக்கு பேசுவது கைவந்த கலைபோலும். நிறைய பேசினார். தனது வீட்டுக் கதை, தனது மகன்களின் கதை, மகன் புகைப்பிடிக்க ஆரம்பித்த கதை, அதை நிறுத்தியது எப்படி என்ற கதை என்று எல்லாம் பேசினார் :). வகுப்பிலும் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருப்பாரோ என்ற எண்ணம் உள்ளே ஓடியது. ஆனால் அவர் பேசுவது அனைத்தும் மிகவும் சுவாரசியமாகவே இருந்தது. மகள் வகுப்பில் எப்படி இருக்கிறாள் என்பதுபற்றிய பேச்சு வந்தபோது, ‘சில சமயங்களில், வகுப்பில் அவதானம் குறைகின்றது’ என்று கூறி, ‘ஆனால் அதில் ஒரு பகுதி தவறு என்னுடையதுதான். நான்தான் அதைச் சரி செய்ய வேண்டும்’ என்றார். இப்படி எங்கள் நாட்டில் எந்த ஒரு ஆசிரியராவது சொல்வாரா தெரியவில்லை. மேலும் மகளின் ‘helping mind and caring personality’ தான் மற்றைய காரணம் என்றார். யாராவது உதவி கேட்டால், ‘என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்றோ, ‘இப்போது சொல்ல முடியாது’ என்றோ உங்கள் மகளால் சொல்லவே முடியாது. அதனால் சில சமயம் வகுப்பில் மற்றவர்களுக்கு உதவப் போவதால், அவளுடைய அவதானம் குறைகின்றது என்றார்.

அப்போது மகளும் கூடவே இருந்தாள். திடீரென்று மகளிடம், ”என்னை மன்னித்து விடு. சில சமயம் சரியாக யோசிக்காமல் உன்மேல் தவறு சொல்லி விடுகிறேன்” என்றார். எனக்கோ ஆச்சரியம். நம் நாட்டில் இப்படி குழந்தைகளிடம், எந்த ஆசிரியராவது மன்னிப்பு கேட்பார்களா என்று எண்ணிப் பார்த்தேன்.

அண்மையில் மகளுடைய வகுப்பில் கொடுக்கப்பட்ட ஒரு assignment (இதுக்கு தமிழ் என்ன) அவரவர் நாட்டிலுள்ள, அல்லது கலாச்சாரத்திலுள்ள அல்லது மொழியிலுள்ள ஏதாவது ஒரு விடயத்தை அல்லது கதையை எடுத்து, அதை அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வகையில் செய்து காட்ட வேண்டும். மகள் அன்று வந்து தன்னிடம் உள்ள ‘தெனாலிராமன்’ என்ற தமிழ் கதைப் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்ட ஒருகதையை வாசித்துக் காட்டச் சொன்னாள். பின்னர் அந்தக் கதையை தன் நண்பர்களைச் சேர்த்து ஒரு நாடகமாக மாற்றி வகுப்பில் செய்து காட்டப் போவதாகச் சொன்னாள். வசனம், இயக்கம் மகள்தான் :). Script எல்லாம் தானே தயாரித்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு போய் கொடுத்தாள். அதை வகுப்பில் செய்வதற்கு முதல், எல்லோருமாக செய்து பார்க்கும்படி சொன்னேன். அவளும் சரி என்றாள். பின்னர் ”எல்லாரையும் beg பண்ணிக் கேட்டும் அவையள் practice க்கு வரேல்லை”. ஏனென்றால் அவள் கேட்டது விளையாடப் போகும் நேரமாம் :). பிறகு ஆசிரியை செய்து பார்க்க கொஞ்ச நேரம் ஒதுக்கிக் கொடுத்து, பின்னர் செய்தார்களாம். மிகவும் நன்றாகச் செய்ததாக ஆசிரியை கூறினார். ”அது மட்டுமில்லை, உங்கள் மகள் மிகவும் தைரியசாலிதான். வகுப்பிலே, என்னாலேயே கட்டுப்படுத்த முடியாத இரண்டு பையன்களை தனது நாடகத்துக்கு தெரிவு செய்து, அவர்களை நன்றாக நடிக்கவும் வைத்து விட்டாள்” என்று. மகிழ்ச்சியாக இருந்தது.

குட்டி இளவரசன்!

Posted On நவம்பர் 30, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது குழந்தை, சமூகம், நூல், ரசித்தவை

Comments Dropped leave a response

‘The Little Prince’ புத்தகம் வாசித்தேன். மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேணும் என்று சொல்லிவிட்டு, சும்மா இருக்காம, நான் வாசிக்கத் தொடங்கினதே பெரிய விசயம். கதை என்னவோ சிறுவர்களுக்கான கதை போல இருந்தாலும், மிகப் பெரிய விசயங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பெரிய விசயங்களை மிகவும் எளிமையாக சொல்லியிருக்கு. சின்ன சின்னதாய் வரையப்பட்ட படங்களுடன் கதை அழகாக பயணிக்கிறது.
The little Prince கதையில, கதையைச் சொல்பவர், தான் 6 வயதில் ஒரு படம் வரைந்ததாகவும், அந்தப் படம் பெரியவர்களுக்குப் புரியவில்லை என்றும் சொல்லிவிட்டு, பெரியவர்களுக்கு எதுவும் இலகுவாக புரியாதென்றும், அவர்களுக்குப் புரியுற மாதிரி எதையும் செய்யுறது இலகுவான காரியமில்லை என்றும் சொல்கிறார். பெரியவர்களுக்கு புரிய வைக்கிறதென்றால், பெரிய விளக்கங்கள் எல்லாம் கொடுக்க வேணுமாம் :). மகள் சில விசயங்களை எனக்கு சொல்ல முயற்சித்துவிட்டு, “என்ன நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கேல்லையா” என்று பொறுமையிழந்து கேட்பதுதான் எனக்கு நினைவில் வந்தது.
ஆறு வயதில தான் வரைந்த படத்தை ஒருவரும் பொருட்படுத்தாமல் விட்டதால, தான் பெரிய ஒரு ஓவியராக வரும் ஆசையை, தனக்கு மிகப் பிடித்த தொழிலை தான் துறந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். பிறகு பெரியவர்களுக்குப் பிடித்த மாதிரி நான் ஒரு விமான ஓட்டியாக ஆகிவிட்டேன் என்கிறார். இந்த இடத்தில மகள் முதன் முதலில் வரைந்த படத்தை மிகவும் கவனமாக வைத்திருந்து, இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவளுடைய பாடசாலை வேலைக்காக, ‘Time line of my life’ செய்வதற்கு கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு முதலும் வரைந்திருந்தாலும் (அல்லது கிறுக்கியிருந்தாலும்), இன்னதுதான் என்று சொல்லி வரைந்த முதல் படங்கள் இவைதான்.

இது ஒரு மரமாம்.

இது ஒரு பெண்மணியின் முகமாம்.
அது மட்டுமில்லை, The Little Prince கதையில அவர் மேலும் சொல்கிறார், பெரியவர்களுக்கு எதையும் எண்களுடன் சேர்த்துத்தான் யோசிக்கத் தெரிகிறதாம். அதுக்கு ஒரு உதாரணமும் சொல்கிறார். ஒரு புதிய நண்பனைப் பற்றி பெரியவர்களிடம் சொன்னால், “அவனது குரல் எப்படி இருக்கும்? அவனுக்கு என்ன விளையாட்டுகள் பிடிக்கும்? அவன் வண்ணத்துப் பூச்சிகள் சேகரிக்கிறானா?” என்றெல்லாம் கேட்பதை விடுத்து, “அவனுக்கு எத்தனை வயது? அவனுக்கு எத்தனை சகோதரர்கள்? அவனது அப்பா எவ்வளவு உழைக்கிறார்?” என்று ஏதாவது எண்களுடன் தொடர்பாகவே பேசிகிறார்களாம். பலர் பேசும்போது இதை உண்மையிலேயே இலகுவாக அவதானிக்க முடியும். வெறும் எண்களையே அவர்கள் மனம் சிந்திக்கிறது. அப்படி பலரும் பேசுவதுடன் நின்று விடாமல், எண்களை நோக்கியே தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றார்கள். குழந்தைகள் உலகம் தனித்துவமானது. எத்தனை எளிமையானது. பெரியவர்களானதும் எப்படி நாமும் குழந்தைகளாக இருந்தோம் என்பது மறந்து போகிறது.
ஒருவர் எத்தனை பெரிய காரியத்தைச் செய்தாலும் சூழலுக்கேற்ற அவரது நடை, உடை, பாவனை முக்கியம் என்பதை, 1909 இல் B-612 என்ற சிறுகோளை கண்டுபிடித்த ஒரு துருக்கி வானியலாளரின் அறிக்கையை, அவர் துருக்கி ஆடையில் சென்று வெளியிட்டபோது முதலில் ஏற்றுக் கொள்ளாதவர்கள், பின்னர் நாகரீகமான உடையில் சென்று வெளியிட்டபோது, அதே அறிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார்.

கதையைச் சொல்பவர் விமான ஓட்டியாக இருக்கையில் ஒரு விபத்தில், யாருமற்ற ஒரு பாலைவனத்தில் தனியாக இருக்க வேண்டி வரும் சூழலில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே அவர் மிகச் சிறிய உருவத்தில் ஒரு குட்டி இளவரசனை சந்திப்பதாகவும், அந்தக் குட்டி இளவரசன் ஒரு குட்டியூண்டு கிரகத்தில் இருந்து வந்தவனாகவும், அந்த குட்டி இளவரசனும், கதை சொல்பவரும் சேர்ந்து செலவளிக்கும் நாட்களிலும், அந்த இளவரசன் சொல்லும் அனுபவங்களையும் வைத்தே கதையும் போகின்றது.
அந்த குட்டி இளவரசன் இவரிடம் ஆடு வரைந்து தரச் சொல்லிக் கேட்கிறார். முதலில் ஒவ்வொரு குறை சொல்லிய பின்னர், ஒரு பெட்டியை மட்டும் வரைந்து, அதனுள் ஆடு இருப்பதாகச் சொல்ல, அது இளவரசனுக்கு பிடித்துப் போவதுடன், புரியவும் செய்வது அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. பெரியவர்களுக்குப் போல் விளக்கம் கொடுக்கத் தேவையில்லாமல் இருப்பதுவே காரணம்.

அந்த குட்டி இளவரசன் கேள்விகளுக்கு சரியாக பதில் கொடுக்காவிட்டாலும், அவன் கூறும் விசயங்களில் இருந்து விமான ஓட்டி சிறிது சிறிதாய் அவனது கோளைப் பற்றியும், அவனது வாழ்க்கை பற்றியும் புரிந்து கொள்கிறார். குட்டி இளவரசன் ஒரு பூவை தனது இடத்தில் வளர்த்து வந்ததையும், அதனை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டதையும், ஆனால் அந்த பூ சொன்ன சில வார்த்தைகள் அவனது மனதை சிறிதாய் காயப்படுத்தியதையும் புரிந்து கொள்கிறார். ஆனாலும் அவர் வரைந்து கொடுக்கும் ஆடு ஒருவேளை தனது பூவை உணவாக எடுத்துக் கொள்ளுமோ என்று இளவரசன் பயப்படுகின்றான். அதனால் ஆட்டுக்கு வாய்க்கட்டு ஒன்றையும், அத்துடன் பூவைச் சுற்றி வேலியும் வரைவதன் மூலம் பூவை பாதுகாக்க உதவுவதாக விமான ஓட்டி இளவரசனுக்கு உறுதி அளிக்கிறார்.
அந்த குட்டி இளவரசன் பூமிக்கு வந்து இவரைச் சந்திக்க முன்னர் வெவ்வேறு கிரகங்களுக்குப் போய் வந்த அனுபவங்களில் பல்வேறுபட்ட மனிதர்களின் இயல்புகளை கதை காட்டுகின்றது.

முதலாவது கிரகத்தில், தன்னைத் தவிர வேறெவரும் இல்லாத கிரகத்தை ஆட்சி செய்ய நினைக்கும் ஒரு அரசன். அரசனின் கட்டளைகள் விசித்திரமானவை. ஒருவரால் எதை செய்ய முடியுமோ, அதை மட்டுமே கட்டளையாகப் பிறப்பிக்கும் அபூர்வ, புரிந்துணர்வுள்ள அரசன். இந்த குட்டி இளவரசன் எதை செய்ய விருப்பமில்லை என்றாலும், அதுபற்றிய தனது கட்டளையை மீளப் பெறும் அந்த அரசன், குட்டி இளவரசன் செய்ய விரும்புவதை மட்டுமே கட்டளையாக சொல்கிறான். அந்த அரசன் சொல்லும் முக்கியமான ஒரு விசயம் ‘எவருக்கும் இன்னொருவருக்கான நியாயம் சொல்வது இலகுவானதாகவும், தனக்கான நியாயத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமானதாகவும் இருக்கிறது. எப்போது ஒருவனால் தன்னைத்தானே சரியாக எடைபோட /சீர்தூக்கிப் பார்க்க முடிகிறதோ, அப்போதே அவன் ஒரு உண்மையான அறிவுள்ள/விவேகமுள்ள மனிதனாகிறான்’. ஆனால் அரசனுக்கு தனது அதிகாரத்தை மற்றவர்மேல் செலுத்துவதில் அத்தனை விருப்பம். சிலருக்கு தன்னுடைய அதிகாரத்துக்கு கீழ் மற்றவர் இருப்பதில் அத்தனை விருப்பம். ஏன் குடும்ப அமைப்புக்களிலும் இதை நாம் பார்க்க முடிகிறதே. வெறும் அதிகாரம் செலுத்த உரிமை கொடுத்தாலே அவர்கள் சமாதானமாகி இருப்பார்கள். அந்தக் குட்டி இளவரசன் அந்த கிரகத்திலிருந்து புறப்பட ஆயத்தமாகும்போது, அரசன் அவனைத் தடுக்கிறான். மறுக்கும் இளவரசனிடம் “உன்னை இந்தக் கிரகத்தின் Ambassador ஆக்குகிறேன் என்கிறான். குட்டி இளவரசன் நினைக்கிறான் ‘இந்த பெரியவர்களே விசித்திரமானவர்கள்தான்’.

அகம்பாவம் அல்லது போலித் தற்பெருமை கொண்ட ஒரு மனிதனை அடுத்த கிரகத்தில் இளவரசன் சந்திக்கிறான். தன்னைப்பற்றி மற்றவர் புகழ்பாடுவது தவிர வேறெதையும் கேட்க அவனுக்கு ஆர்வமில்லை. இதுக்கு உதாரணமாக தற்போதைய பல அரசியல் தலைவர்கள் மனதில் வந்து போனார்கள். அந்த தற்பெருமைக்காரனைப் பார்த்து இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் நிச்சயமாய் விநோதமானவர்கள்தான்’.

அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். அவன் ஏன் குடிக்கிறான் என்று கேட்டால், தான் குடிப்பதையிட்டு வருந்துவதாயும், அந்த கவலையை மறக்க குடிப்பதாயும் கூறுகிறான். சிலபேர் குடிப்பதற்காகவே தமக்கு கவலையை /காரணத்தை உருவாக்கிக் கொள்வதை கண்டிருக்கிறேன். ஊரில் வாழ்ந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒரு குடிகாரன். தினமும் குடித்து விட்டு வந்து ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, மனைவிக்கு அடிப்பது. மனைவி தன் பெற்றோரிடம் போய் விட்டால், மறுநாள் அந்தக் கவலையில் குடிப்பதாகச் சொல்லி குடிப்பது. அல்லது தங்கைமாரிடம் ‘உங்களாலதான் அவள் போய்ட்டாள்’ என்று சொல்லி அடிப்பது. ‘சே என்ன மனிதன் இவன்’ என்று வெறுப்பாக இருக்கும். கவலையில் குடிக்கிறேன் என்பவர்களிடம் கேட்கத் தோன்றும், ‘குடித்த பின்னர் கவலையில்லாமல் இருக்கிறீர்களா’ என்று. குடித்துவிட்டு கவலையில் அரற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள். அந்தக் கிரகத்தை விட்டு வெளியேறும்போது, இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் சந்தேகமேயில்லாமல் மிக மிக விசித்திரமானவர்கள்தான்’.

அதற்கடுத்து குட்டி இளவரசன் செல்லும் கிரகத்தில் சந்திப்பது வணிகர் ஒருவரை. குட்டி இளவரசன் வந்ததைக் கூட நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல், ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் நட்சத்திரங்கள் தனக்கு சொந்தமானவை என்றும் அவற்றை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பதிலுமே பொழுதை கழிக்கிறார். குட்டி இளவரசனுடன் பேசக் கூட நேரமில்லாமல் நட்சத்திரம் எண்ணுகிறார். அவருக்கு சொந்தமான அந்த நட்சத்திரங்களை வைத்து அவர் என்ன செய்வார் என்றால் மேலும் நட்சத்திரங்கள் வாங்குவாராம். அவர் தனக்கு ‘முடிவுகளை அல்லது பலன்களைப் பற்றி (matters of consequence) மட்டுமே அக்கறை’ என்கிறார். பல பணம் சேர்க்க விரும்பும் பணக்காரர்கள் கதையும் இதுதானே? ஓடி ஓடி கோடிக்கணக்கில் சேர்க்கிறார்கள். பேசக் கூட நேரமில்லாமல் அப்படி சேர்ப்பதில்தான் என்ன பலன்? இளவரசன் அவரிடம் ”அதெப்படி நட்சத்திரங்கள் உனக்கு சொந்தமாகும்?” என்று கேட்பதற்கு அவர் கூறும் பதில் “யாருக்கும் சொந்தமில்லாத வைரத்தை நீ கண்டெடுத்தால், அது உனக்கு சொந்தமாகும். யாருக்கும் சொந்தமற்ற தீவை நீ கண்டு பிடித்தால் அது உனக்குச் சொந்தமாகும். எவருக்கும் வராத யோசனை உனக்கு வந்தால், அதற்கான உரிமை உனக்குத்தான். அதேபோல் நட்சத்திரங்களை உரிமையாக்கும் எண்ணம் எனக்கே முதலில் வந்ததால், நட்சத்திரங்கள் எனக்கே சொந்தமானவை’. எமக்கு பிடித்தவற்றை நமக்கே சொந்தமாக்கிக் கொள்ளவே விரும்புகிறோம். அங்கிருந்து புறப்படும் இளவரசன் தனக்குள் ‘பெரியவர்கள் மிக நிச்சயமாய் அசாதாரணமானவர்கள்தான்’ என்று நினைத்தபடி போகின்றான்.

இன்னொரு சிறுகோளில், கடமையே கண்ணாக இருக்கும் ஒரு விளக்குப் போட்டு அணைப்பவரை சந்திக்கிறான் குட்டி இளவரசன். ஆரம்பத்தில் அந்தக் கோள் மெதுவாகச் சுற்றியபோது இரவில் விளக்குப் போட்டு, காலையில் அணைத்துக் கொண்டிருந்த அவர், அந்தக் கோள் மிக விரைவாக சுற்ற ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து விளக்குப் போடுவதும், அணைப்பதுமாகவே இருக்கிறார். அந்த கோள் ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை முழுச்சுற்றை செய்வதால், அவருக்கு ஓய்வெடுக்கவே நேரமற்றுப் போகிறது. குட்டி இளவரசனுக்கு அவனே அபத்தமில்லாதவனாகத் தெரிகின்றான். காரணம் அவன் தன்னைப்பற்றி மட்டும் எண்ணாமல் வேறு விடயங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றான். எனக்கும்தான் அவனை மிகவும் பிடித்துப் போனது :). குட்டி இளவரசனுக்கு அவனுடன் நட்பாகி அங்கேயே தங்கி விட விருப்பமிருந்தாலும், அந்த கோள் மிகச் சிறியதாக, இரண்டு பேருக்கு இடமற்று இருப்பதால், தனது பயணத்தை தொடர்கின்றான்.

அதற்கும் அடுத்த கிரகத்தில் அவன் சந்தித்தது ஒரு புவியியல் ஆராய்ச்சியாளர். அவர் தனக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்று நம்புகிறார். ஆனால் ஒரே இடத்தில் இருந்தபடியே எல்லாவற்றையும் செய்யப் பார்க்கிறார். மற்றவர்களின் உழைப்பில் தான் பெயரைப் பெற்றுச் செல்ல விரும்பும் மனிதர்களை நினைவு படுத்தினார். சில ஆராய்ச்சியாளர்களும் இப்படி இருக்கிறார்கள். தமக்கு கீழ் வரும் மாணவர்களின் உழைப்பில் தாம் பெயரைத் தட்டிச் செல்வார்கள். சில அமைப்புக்கள், நிறுவனங்களின் பெரிய பொறுப்பில் இருப்பவர்களும் தாம் எதையுமே செய்யாமல், கீழ் உள்ளவர்களின் உழைப்பை தமதாக பிரகடனப்படுத்திக் கொள்வார்கள். அந்த புவியியலாளரே குட்டி இளவரசனுக்கு பூமிக்குப் போகும்படி அறிவுரை சொல்கின்றார்.
இறுதியில் பூமிக்கு வரும் அந்தக் குட்டி இளவரசன் முதலில் ஒரு பாம்பை சந்திக்கிறான். பாம்பிடம் மனிதர்கள் எங்கே என்று விசாரிக்க, பாம்பு அது பாலைவனமென்றும், மக்கள் அங்கே இல்லை என்றும், பூமி மிகப் பெரியது என்றும் கூறுகின்றது. அதன் பின்னர் ஒரு பூக்கன்றை கண்டு ‘மனிதர்கள் எங்கே?’ என்று விசாரிக்கிறான். அதற்கு பூக்கன்று, மனித இனம் அழிந்துகொண்டு போகும் இனமாக கூறுகின்றது. (ஒருவேளை எதிர்காலத்தை கற்பனையில் கண்டு எழுதியிருப்பாரோ?) மனிதர்களுக்கு வேர்கள் இல்லாமையால், அவர்கள் காற்றோடு எடுத்துச் செல்லப்படுவதாகவும், அதனால் அவர்களது வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாய் இருப்பதாகவும் அந்த பூக்கன்று சொல்கின்றது.
பின்னர் ஒரு மலையில் ஏறும் அந்தக் குட்டி இளவரசனுக்கு அவன் சொல்லும் வார்த்தைகளே எதிரொலியாக கேட்கின்றது. அப்போது அந்தக் குட்டி இளவரசன் ‘இந்தப் பூமி மிகவும் வரண்டதாகவும், அங்குள்ளவர்கள் கற்பனையற்றவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொள்கின்றான். பிறகு நெடுந்தூரம் நடந்து சென்று, குட்டி இளவரசன் ஒரு பெரிய ரோசாப்பூத் தோட்டத்தை அடைகின்றான். அப்போது தன்னுடைய கிரகத்தில் தனியாகத் தான் விட்டு வந்த பூவை நினைக்கிறான். அந்தப் பூவோ தான் மட்டுமே இந்த முழு பிரபஞ்சத்திலும் இந்த வகையிலுள்ள ஒரே ஒரு பூ எனக் கூறியிருந்தது. அவனும் தன்னிடம் தனித்துவமான ஒரு ஒரு பொருள் இருப்பதாக பெருமை கொண்டிருந்ததையும், ஆனால் அது ஒரு பொதுவான ரோசாதான் என்றும் எண்ணிக் கொள்கின்றான். அதேவேளை அந்த ரோசாவை தனியே விட்டு வந்ததை எண்ணி கவலையும் கொள்கின்றான்.
அதன் பின்னர் அவன் சந்திக்கும் ஒரு நரி அவனுக்கு பெரிய தத்துவத்தையே சொல்லிக் கொடுக்கிறது. நரி அவனை, தன்னுடன் நட்பாகும்படியும், மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையை இழந்து விட்டார்கள் என்றும், தயார் செய்யப்படும் பொருட்களை (ready-made) கடைகளில் வாங்குகின்றார்கள், ஆனால் நட்பை வாங்கும் கடைகள் இல்லாமையால் நட்பை மறந்து விட்டதாகவும் கூறுகின்றது. நட்பாவதற்கு எதையும் பேசாமல் இருப்பதே நல்லது என்றும், வார்த்தைகளே மனவேற்றுமைகளுக்கு காரணம் என்றும் அந்த நரி சொல்கின்றது. ஆனால் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அண்மித்து வருவதனால் நட்பாகலாம் என்று நரி சொல்வது போலவே, குட்டி இளவரசன் நரியுடன் நட்பாகின்றான். ஆனால் குட்டி இளவரசன் போக வேண்டிய நேரம் வரும்போது நரி நட்பை விட்டுப் பிரிவதை எண்ணி கவலை கொள்கின்றது. அப்போது, குட்டி இளவரசன் ”நான் உனக்கு எந்த கெடுதலும் செய்ய நினைக்கவில்லை. ஆனால், நீதான் என்னை நட்பு கொள்ளச் சொன்னாய்” என்று நரியிடம் சொல்கின்றான். நரியோ “ஆம், அது அப்படித்தான். நீ இப்போது அந்த ரோசாத் தோட்டத்துக்கு போய் வா” என்று சொல்கிறது. அங்கே போனபோதுதான் அவனுக்குப் புரிகிறது, ‘அங்கே ஆயிரக் கணக்கில் ரோசாக்கள் இருந்தாலும், அவனது ரோசா தனித்துவமானதுதான். காரணம் அந்த ரோசாமேல் அவன் கொண்டிருக்கும் பாசம். நரியிடம் நட்பு கொண்டதாலேயே, பார்க்கும் எல்லா நரிகளைப் போல அல்லாமல், குறிப்பிட்ட அந்த நரி தனித்துவமானது ஆகியதைப் போல’. அவன் மீண்டும் நரியிடம் வந்தபோது நரி ஒரு இரகசியத்தை சொல்வதாக சொல்கின்றது “இதயத்தால் மட்டுமே சரியாகப் பார்க்க முடியும். கண்களுக்கு முக்கியமானவை தெரியாது. மனிதர்கள் இந்த உண்மையை மறந்து விட்டார்கள். நீ உனது ரோசாவுக்காக செலவு செய்த நேரமே, அந்த ரோசா உனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லும். உனக்கு அந்த ரோசாவில் உள்ள அன்பினால், நீ அந்த ரோசாவுக்கு பொறுப்புள்ளவனாகின்றாய்”. நாங்கள் யார்மேல் உண்மையான அன்பைச் செலுத்துகிறோமோ, அவர்களே எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களாகவும், தனித்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பின்னர் ஒரு தொடர்வண்டி நிலையத்தை அடையும் அந்தக் குட்டி இளவரசன், ஒரு தொடர்வண்டியில் ஏராளமான மனிதர்கள் போவதைக் கண்டு ”இவர்கள் எங்கே அவசரமாகப் போகின்றார்கள்?” என்று அங்கிருப்பவரிடம் கேட்க, அவர் ”அது யாருக்கும் தெரியாது” என்று சொல்கின்றார். பின்னர் மறு புறமிருந்து ஒரு தொடர் வண்டி வர, ”போனவர்கள் ஏன் திரும்பி வருகின்றார்கள்?” என்று கேட்க, ”இவர்கள் வேறு மனிதர்கள்” என்று பதில் கிடைக்கிறது. ”ஏனப்படி” என்றதற்கு, “அவர்கள் தாம் இருக்குமிடத்தில் திருப்தி அடைவதில்லை” என்கின்றார். ‘இக்கரை மாட்டுக்கு, அக்கரை பச்சை’ :). அப்போது குட்டி இளவரசன் நினைக்கிறான், ‘குழந்தைகளுக்கு மட்டுமே தமக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும்’.
ஒரு வியாபாரி, தாகம் எடுப்பதைத் தவிர்க்க குழிகைகள் விற்பதைக் காண்கின்றான். ஏனிப்படி என்று கேட்டால், ”தாகம் தீர்க்க எடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி அந்த நேரத்தில் விரும்பியதைச் செய்யலாம்” என்று வியாபாரி சொல்கின்றார். அப்போது அந்த குட்டி இளவரசன் நினைக்கிறான், அப்படி தனக்கு அந்த நேரம் மிச்சப்படுமானால், ‘அந்த நேரத்தில் நன்னீர் கிடைக்கும் இடத்தை நோக்கி அமைதியாக நடந்து செல்லலாம்’ என்று. நாம் சில சமயம் (அல்லது பல சமயம்) நேரத்தை மிச்சம் பிடிப்பதற்கு ஏதேதோ செய்வோம். ஆனால் அந்த மிச்சம் பிடித்த நேரத்தில் உருப்படியாக எதையும் செய்வதில்லை.
இந்த அனுபவங்களைக் கேட்ட விமான ஓட்டி (கதையை சொல்ல ஆரம்பித்தவர்), குட்டி இளவரசனின் அனுபவங்கள் சுவாரசியமானவை என்கிறார். அந்த அனுபவங்கள் மூலம் நிறைய உண்மைகளை அந்த குட்டி இளவரசன் அவருக்குப் புரிய வைக்கிறான். சில சமயம் எல்லோரையும் ஒரே விதமாகப் பார்த்து, ஒரே விதமாக நட்புகொள்வது நல்லதுதான். இந்த கருத்து வந்த இடத்தை வாசித்தபோது என் செல்ல குட்டி மகள் ஒருநாள் என்னிடம் வந்து “அம்மா, ஒரு best friend இருக்கிறது நல்லதா? அல்லது எல்லாரோடயும் ஒரே மாதிரி friends ஆ இருக்கிறது நல்லதா?” என்று கேட்டது நினைவில் வந்தது. நான் அதற்கு பல விதமாய் யோசித்தேன். அதற்கு அவளே சொன்னாள் “நான் நினைக்கிறன் எல்லாரோடயும் friends ஆ ஒரே மாதிரி இருக்கிறதுதான் நல்லது. ஏனெண்டா நாங்கள் ஒராளோட மட்டும் best friend ஆ இருந்தால், அவ எங்கயாவது போய்ட்டால், கவலையா இருக்கும்தானே?”. நல்ல ஆழமாத்தான் யோசிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் எல்லோரிடமும், எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாதே? அதனால் இரண்டும்தான் சரியாகத் தெரிகிறது. என்னுடைய ஒரு நெருங்கிய தோழியை விட்டுப் பிரிந்து கவலைப்பட வேண்டி வந்த ஒரு தருணத்தில் நான் எடுத்த முடிவும் எனது மகளுடையதுதான் என்பதும் கூடவே நினைவு வந்தது. அதற்குப் பின்னர் எவருடனும் நெருங்கி அன்பு செலுத்துவதில்லை என்பதுதான் அந்த முடிவு. ஆனால் அதை என்னால் சரி வர செய்ய முடியவில்லை என்பதும் உண்மையே.
[சரி என்ரை கதையை விட்டுட்டு குட்டி இளவரசனின் கதையின் முடிவுக்கு வாறன் :).]
அந்தக் குட்டி இளவரசனைக் காண முடியாமல் போன ஒரு காலைப் பொழுதில் அந்த விமான ஓட்டி, அவன் தனது கோளுக்கு திரும்பிப் போய், தனது ரோசாவை கவனமாகப் பார்த்துக் கொள்வான் என்று தான் நம்புவதாகக் கதையை முடிக்கிறார்.

Matters of importance must be given the priority over the matters of consequence.

எனக்கு கதை மிகவும் பிடித்தது. கதை இணையத்தில் கிடைக்கிறது. The Little Prince (pdf file) ஐத் தரவிறக்கிப் படித்துப் பாருங்களேன்!

வாசிப்பு!

Posted On நவம்பர் 6, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள், சமூகம், நூல், ரசித்தவை

Comments Dropped leave a response

எனது வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. முன்பானால் ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மாட்ட்டேன். இப்போதோ நாட்கணக்கு, வாரக்கணக்கு, மாதக் கணக்கு என்று ஆகிறது :(. நேரமின்மை, அதிகரித்துள்ள பொறுப்புகள் விரும்பியபடி வாசிக்க முடியாமல் செய்கிறது.

பள்ளிக் காலத்தில், இன்னதுதான் என்றில்லாமல், கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிப்பேன். ஒரு மாமா வீட்டுக்குப் போக மிகவும் விருப்பம். போனால் அங்கேயே சில நாட்கள் தங்கித்தான் வீட்டுக்குத் திரும்புவேன். காரணம் அவரிடம் அளவு கணக்கில்லாமல் புத்தகங்கள் இருப்பதுதான். அவற்றை வாசிப்பது போதாதென்று, பொருட்கள் சுற்றி வரும் காகிதங்களையும் நான் எடுத்து வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அங்கிருக்கும் ஆச்சி சொல்லுவா, ”எனக்கு உன்னைப் பார்க்க பொறாமையாய் இருக்கு பிள்ளை” என்று. காரணம் அவவுக்கு வாசிக்க தெரியாது என்பதுதான்.

சரி, எதுக்கு இந்த முன்னோட்டம் இப்போ? திரு எழுதிய ‘திரை கடலோடியும் துயரம் தேடு’ வாசித்தேன். நிறைய தரவுகளுடன், ஆராய்ந்து புலம்பெயர் மக்களின் வாழ்வைப்பற்றி எழுதியிருக்கிறார். அதையெல்லாம் வாசித்தபோதுதான், மக்களின் எத்தனை பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாமல் வாழ்கிறோம் என்று இருந்தது. ஐரோப்பிய அரசாங்கங்கள் இத்தனை தூரம் எத்தனையோ புலம்பெயர் மக்களுக்கு துன்பம் கொடுக்கிறது என்பது ஓரளவு எதிர் பாராதது. நமக்கு அந்த துன்பங்கள் நேராமையால், இதை எதிர் பார்க்கவில்லை போலும்.

ஏன் மக்கள் புலம் பெயர்கிறார்கள் என்பதில் ஆரம்பித்து, இறுதியில் புலம்பெயர்கிறவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்ட திட்டங்கள், அறிவுரைகளுடன் முடித்திருக்கிறார்.

இனி மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.

குழந்தை வளர்ப்பு!

Posted On ஒக்ரோபர் 7, 2009

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது குழந்தை, சமூகம்

Comments Dropped 3 responses

இன்றைக்கு குழந்தை வளர்ப்புபற்றி ஒரு பேச்சு வந்தது.

ஒவ்வொரு குழந்தையும் வளர வளர பிரச்சனை கூடிக் கொண்டே போவதாக ஒருவர் குறைப்பட்டார். உண்மையில் பிள்ளைகளால் பிரச்சனை என்பதை விட, நாமே அதை பிரச்சனையாக உருவாக்கிக் கொள்கிறோமோ என்றுதான் எனக்குத் தோன்றியது.

”நாமெல்லாம் இப்படியா இருந்தோம். அப்பா, அம்மா சொல்வதெல்லாம் கேட்டு அப்படியே இருக்கவில்லையா” என்றார். நாம் வாழ்ந்த காலம், இடம், சூழ்நிலை எல்லாவற்றையும், தற்போதைய காலம், சூழல், இடத்துடன் எப்படி ஒப்பிட்டுப் பேச முடிகிறது. எத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது, குழந்தைகளில் இயற்கையாக இருக்கக் கூடிய வேறுபட்டை எப்படி உணர முடியாமல், ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.

வளர்ந்து வரும் குழந்தைகளை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை என்றும், அவர்களை இப்படிச் செய்யாதே, அப்படிச் செய்யாதே என்றால் கேட்கிறார்கள் இல்லை என்றும், அவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். நான் சொன்னேன், “இந்த புலம்பெயர் சூழலில், இது பெற்றோருக்கு மட்டுமே பிரச்சனையில்லை. பிள்ளைகளுக்கு அதை விட பிரச்சனை உண்டு. பெற்றோரை அனுசரித்துப் போவதா, அல்லது வேறு கலாச்சாரம் கொண்ட நண்பர்களை அனுசரித்துப் போவதா என்று அவர்கள் நிலையும் கடினம்தான், சிலவற்றை செய்தால் பெற்றோர் வெறுக்கிறார்கள், செய்யாவிட்டாலோ நண்பர்கள் ஒதுக்கி விடுகிறார்கள், எல்லாவற்றையும் சமநிலைப்படுத்தி செய்ய வேண்டிய கட்டாய சூழல் பிள்ளைகளுக்கு” என்று.

இப்போது வந்து Google Reader ஐ திறந்தால், முதலில் கண்ணில் பட்ட இடுகை ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ – புதிய நோக்கு. அங்கே ஒரு அறிமுகம் மட்டுமே கிடைத்தது. எனவே Google இல் தேடி, Richard Templar எழுதிய, அந்த 100 எளிய விதிகளையும் (விளக்கமாக இல்லாவிட்டாலும்) பார்த்துவிட்டேன். விளக்கமாக பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது. புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும்.

இன்று பேசியபோது குறைப்பட்டுக் கொண்ட அந்த நபர், குழந்தைகளை எந்தவொரு வேலையும் வீட்டில் தான் செய்ய விடுவதில்லை என்றும், அவர்கள் தங்களுடன் இருக்கும்வரை எதுவும் செய்து சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்றும் நினைப்பதுடன், அதை பெருமையாகவும் எண்ணுபவர். அப்படி செய்வதால் பிள்ளைகள் தமது சுயசார்பு (வெங்கடேஷ் க்கு நன்றி 🙂 தமிழ்ச் சொல்லுக்கு), நிலையை விரைவில் பெறுவதற்கான வழியை அடைத்து விடுகிறோம் என்றுதான் எனக்குத் தோன்றியது. இதுபற்றி பல தடவைகள் அவருக்கு எடுத்துக் கூறியும் அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்.

அன்றொருநாள் அவரது மகளிடம் (வயது 18 ஆகி விட்டது), பேசிக் கொண்டிருந்தபோது, ”அம்மா எதுக்கு இருக்கிறா செய்து தரத்தானே. இதெல்லாம் செய்வது அம்மாவின் கடமை” என்று சொல்கிறார். எனக்கென்னவோ அப்படி சொன்னது மகளின் குற்றமல்ல. அப்படி நினைக்கும்படி செய்யும் பெற்றோரின் தவறுதான் என்றே தோன்றியது. நான் அவருக்கு சில விடயங்களை சொல்லி புரிய வைக்க முயன்றேன்.

இன்னொருவர் கூறினார், சில குழந்தைகள் நமக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு, தனது (வெளிநாட்டு) நண்பர்கள் வீட்டில் இப்படித்தான் என்று கூறி தமது பொறுப்பை தட்டிக்கழிக்கப் பார்க்கிறார்கள் என்று. அதுவும் உண்மைதான். சில பிள்ளைகளும் புத்திசாலிகள்தான் :). சில விசயங்களுக்கு தமது வெளிநாட்டு நண்பர்களை உதாரணம் காட்டி, அவர்கள் மாதிரி தாமும் செய்ய வேண்டும் என்பவர்கள், தமக்கு சாதகமாக வரக் கூடிய வேறு விடயங்களில் இது நமது கலாச்சாரம், அதன்படி செய்யலாம் என்கிறார்கள். பெற்றோரின் உதவியுடன் வாழ்வது அவர்களுக்கு இலகுவான முறையாக இருக்கிறது.

நான் அறிந்த அளவில், நோர்வே நாட்டினர் அதிகமானோர் (வேறு எதைச் சரியாக செய்கிறார்களோ, இல்லையோ 🙂 ) தமது பிள்ளைகளை சுயசார்பு நிலையில் வளர்ப்பதில் வெற்றியே கண்டிருக்கிறார்கள். பொதுவாக 18 வயதில், பிள்ளைகள் தாமாகவோ, சில சமயம் பெற்றோரின் ஊக்கப்படுத்துதலாலோ, தனியாக சென்று வாழத் தொடங்குகிறார்கள். என்னுடன் வேலைபார்க்கும் ஒருவரின் மகன், அவர்களுடைய வீட்டிலேயே, basement apartment இல், பெற்றோருக்கு வாடகை கொடுத்து வாழ்கிறார். அதனால் பெற்றோருக்கு அவர்மேல் அக்கறையில்லை, அல்லது சரியான அன்பில்லை என்று சொல்லவும் முடியாது. அந்த அம்மாவும் நானும் ஒரே அறையில் வேலை செய்வதால் அவரை என்னால் நன்றாக கவனிக்க முடிகிறது.  அடிக்கடி பிள்ளைகளுக்கு தொலைபேசி கதைப்பதும், அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் காட்டும் அக்கறையும், அவரது அன்பை சொல்கிறது. ஏதோ ஒரு பிரச்சனையில் அன்று மகள் தொலைபேசியில் எடுத்துச் சொன்னபோது, அதற்கு தன்னால் முடிந்த புத்திமதியையெல்லாம் பொறுமையுடன் கூறிவிட்டு, அவர் இறுதியில் சொன்னது இன்னும் நினைவில் நிற்கிறது. அவர் சொல்கிறார் ”இது நான் உனக்கு கூறக் கூடிய புத்திமதி மட்டுமே. ஆனால் பிரச்சனைக்கேற்றவாறு, உன் மனநிலைக்கு ஏற்றவாறு முடிவெடுத்து, செயலாற்ற வேண்டியது நீதான்.” என்று.

இப்படி நம்மில் எத்தனைபேர் நினைக்கிறோம். ‘நாங்கள் சொல்கிறோம், பிள்ளைகள் கேட்கத்தான் வேண்டும். நாம் அவர்களுக்கு நன்மைக்குத்தானே சொல்வோம். இத்தனை அன்பு வைத்திருக்கிறோம், அவர்களுக்காக என்னவெல்லாம் செய்கிறோம். இதிலும் நாம் சொல்வதைக் கேட்டால் என்ன?” இதுதான் நம்மில் பலரின் மனநிலை. அவர்களுக்கு எது நன்மை என்பதை அவர்களே உணர்ந்து செய்யும் மனநிலையில் அவர்களை விடுவதுதானே நல்லது.

பிள்ளையிடமே வாடகை வாங்குவதெல்லாம் சரியா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கெல்லாம் என்னால் போக முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் தன்காலில் தானே நிற்பதற்கான ஒரு நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதில் இதுவும் ஒரு முறையே என்பதை ஏற்காமலும் இருக்க முடியவில்லை. சில விசயங்கள் நமக்கு மிகவும் குழப்பமாகத்தான் இருக்கிறது. நாம் வளர்ந்த சூழல் நம்மை இப்படி குழப்புகிறது என நினைக்கிறேன்.

தற்போதைய போட்டிகள் நிறைந்த அவசர யுகத்தில், எவ்வளவுக்கெவ்வளவு பிள்ளைகள் தாமே சுயமாக முடிவெடுக்கவும், தன் சொந்தக் காலில் நிற்கவும் பழக்கி விடுகிறோமே, அவ்வளவுக்கவ்வளவு பிள்ளைக்கு நல்லது என்றே நானும் நம்புகிறேன்.

அடுத்த பக்கம் »