புரியாத கதை!

Posted On மார்ச் 19, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது நோர்வே

Comments Dropped 2 responses

காலைநேரம். மகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல வெளியே வந்தேன். வெளியே மழை. குடையை விரித்தபோது, என்னை அறியாமல் சிறு வயதில் மனப் பாடம் செய்த பாட்டு வாயில் வந்தது. அதை உரத்துச் சொன்னேன்.

குடை பிடித்து செருப்புமிட்டு
புத்தகமும் கொண்டு
குடுகுடென நடந்து வரும்
குழந்தைகளே கேளீர்

(சிறுது இடைவெளி விட்டேன். மகள் சொன்னாள் “”நல்ல பாட்டம்மா, படியுங்கோ”)

மழைக்காலம் மிக வழுக்கும்
மிகக் கவனம் மக்காள்
வழியருகே வெள்ளமுண்டு
விலகி வரல் வேண்டும்

(“ஏனம்மா splash splash அடிச்சுக் கொண்டு வந்தால்தானே நல்லாயிருக்கும்?” இது மகள். “இங்க நீங்க shoe போடுறதால splash splash அடிக்கலாம். ஆனா slippers அல்லது வெறும் காலோட அங்க நாங்க விளையாடினால் காலில புண் வரும்” இது நான். “ஓஓஓஓஓஓஒ” பெரீய ஒரு ஓ போட்டாள் மகள்.)

வெள்ளத்தில் கல்லெறிந்து
விளையாட வேண்டாம்
(“ஏனம்மா விளையாடக்கூடாது?” இது மகள். “கல்லெறிஞ்சு விளையாடினால், உடுப்பெல்லாம் சேறாகி விடும். மிச்ச பாட்டை கேளுங்கோ” இது நான்.)
வீண் சண்டையால் வழுக்கி
விழுந்தெழும்ப வேண்டாம்

(கடைசி பந்தி நினைவுக்கு வர கொஞ்சம் அடம் பிடித்தது. பிறகு ஒரு மாதிரி, அதையும் தேடிப் பிடித்து பாடினேன்.)

கண்மணிகாள் நீர்ச்சிரங்கு
காலில் வரும் கவனம்
கண்ணுறக்கம் இல்லாமல்
கதறி அழ நேரும்

“அது என்னம்மா நீச்சிரங்கு?” என்று மகள் கேட்க, அதுக்கு விளக்கம் கொடுத்தேன். பிறகு “பாத்தீங்களா? அம்மாக்கு சின்ன வயசுல பாடமாக்கினது இன்னும் நினைவிருக்கு” என்று நானே பெருமைப் பட்டுக் கொண்டேன். “வேறு என்னெல்லாம் நினைவிருக்கு?”
“நிறைய எல்லாம் நினைவிருக்கு”.
“அதுதான் என்ன நினைவிருக்கு?” மகளுக்கு அம்மாக்கு உண்மையா நினைவிருக்கா என்ற சந்தேகம் தீரவில்லை. 🙂

“ம்ம்ம்,, அம்மா சின்ன வயசுல நடிச்ச நாடகம் ஒண்டு நினைவிருக்கு”.
“அது என்ன? சொல்லுங்கோ, பாப்பம்”, அட அவளுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை.
“அது தமிழ் இலக்கணத்தோட வரும். நான் சொன்னாலும், உங்களுக்கு விளங்காது”.
“நீங்க சொல்லுங்கோ”.

இவள் இன்றைக்கு விடமாட்டாள் என்று புரிந்தது. “சரி சொல்லுறன் கேளுங்கோ. அது கண்ணகி நாடகம். அதுல நான் king. ஆனால் எனக்கு மற்றவை பேசின வசனங்களும் பாடம். அதையும் சேர்த்து சொல்லுறன், சரியா?”

“ஓம்”.
“ஓகே”

மன்னன்:”அரண்மனைக் காவலர்களை மீறி ஆவேசக் கோலத்தில் உள்ளே நுழையும் நீ யார்?”
கண்ணகி:”நானா? புறாவுக்கு உடல் தந்து புகழ்பெற்ற மன்னவனின் வரலாற்றை, தேர்க்காலில் மகனையிட்டு நீதி காத்த மனுநீதிச் சோழனது பெருங்கதையை, நீதியின் இலக்கணமாய் உரைக்கும் திருமாவளவன் கரிகாற்சோழனது (அம்மா, அம்மா, இடையில் மகளின் குறுக்கீடு, ஆனால் நான் நிறுத்தவில்லை :)) பூம்புகாரே எனது ஊர். பெருவணிகன் மாசாத்துவானின் மருமகள். என் பெயர் கண்ணகி”. சொல்லி விட்டு நான் ஒரு சின்ன இடைவெளி விட்டதும், மகள் இடையில் புகுந்தாள்.

“அம்மா, போதும் நிப்பாட்டுங்கோ. எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை”.
“நான் முதலே சொன்னேன்தானே விளங்காதேண்டு”.

கண்ணகி, யாருடைய மகள் என்று சொல்லாமல், யாருடைய மருமகள் என்று சொன்னதன் காரணமென்ன என்று எனக்குள் ஒரு கேள்வி ஓடியது. நாடகம் நடித்த வயதில் தோன்றாத கேள்வி இது.

“அந்த நாடகத்தை எனக்கு விளங்குற மாதிரி சொல்லுறீங்களா?” என்று மகள் கேட்டாள். சரியென்று, கண்ணகியும், கோவலனும் பாண்டிய நாட்டுக்கு ஒரு கஷ்டத்தால் வந்தார்கள் என்று தொடங்கி (முன்கதை சொல்லவில்லை, அதில் எனக்கே பல கேள்விகள் உள்ளது என்பதாலும், நாடகம் இந்த இடத்தில் இருந்தே ஆரம்பித்தது என்பதாலும்), கண்ணகி ஊரை எரித்தது வரை சொன்னேன்.

“அது எப்படி எரிச்சாங்க? ஏன் எல்லாரையும் எரிச்சாங்க?” சோகமாகக் கேட்டாள் மகள். எனக்குள் இன்னமும் இருக்கும் கேள்விகள்தான் அவை. அதற்குள் நான் போக வேண்டிய bus வந்துவிட்டதால், அத்துடன் நிறுத்தி விட்டு புறப்பட்டு விட்டேன்.

மாட்டிக்கிட்டேன்!!

Posted On மார்ச் 19, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது குழந்தை

Comments Dropped 2 responses

அன்னைக்கு insects பத்தி என்னமோ TV ல போச்சுது. அதுல தேனீ பத்தி போனது. அப்போ நான் என் 8 வயது மகளுக்கு விளக்கம் கொடுத்துக் கிட்டே வந்தேன். தேனீ தேன் இருக்கிற இடத்தை மத்த தேனீக்களுக்கு எப்படி சொல்லும், தேனீ சமூகத்துல பெண் தேனீக்கள் தான் வேலையாட்கள், அதுல ஒரு பெண் தேனீ மட்டும் அரசியா இருக்கும். ஆண் தேனீக்களோட வேலை just mating தான், அவங்க வேறு ஒரு வேலையும் செய்ய மாட்டாங்க ன்னு சொன்னேன். மாட்டிக்கிட்டேன், நல்லா மாட்டிக்கிட்டேன். அவ உடனே கேட்டா, mating? அப்படின்னா என்ன? நான் அதுக்கு எப்படி பதில் சொல்லுறதுன்னு நல்லா முழிச்சேன். அப்புறம், babies வாறதுக்கு அவங்க செய்யுறதுதான் mating னு சொன்னேன். நல்ல வேளையா அவ வேறு எதிலோ ரொம்ப busy யா இருந்ததுனாலே, அதுக்கு மேலே கேள்வி கேக்காம போய்ட்டா. தப்பினேன், பிழைச்சேன்.

இது நானாப் போய் மாட்டிக்கிட்டது. அவளா நிறைய தர்ம சங்கடமான கேள்வியெல்லாம் கேக்கிறா. உதாரணம் baby எப்படி வயுத்துக்குள்ளே வருது? அவளுக்கு சரியான பதிலை, அவளுக்கு புரியுற மாதிரி எப்படியெல்லாம் சொல்லுறதுன்னு மண்டையை உடைக்கிறேன். “இப்போ சொன்னா உங்களுக்கு புரியுமா தெரியலை, நீங்க கொஞ்சம் வளர்ந்த பிறகு அது சொல்லித் தாறேன்” ன்னு சொன்னேன். அவளும் (நல்ல வேளையா) அந்த பதிலில் திருப்தியாகி போய்ட்டா.

பெண்கள் அடக்கி வைக்கப்படுகிறார்களா?

Posted On மார்ச் 8, 2007

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது சமூகம்

Comments Dropped 8 responses

நான் நீண்ட காலமாக ‘என்னைப் பாதித்தவை ‘ யில் எதுவும் எழுதவில்லை. அதனால் என்னை எதுவுமே பாதிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. பாதித்தவை, பாதிப்பவை என்று நிறையவே இருந்தாலும், எழுத முடியவில்லை. காரணங்கள் பல. அது எதற்கு இங்கே. இப்போ, என்னை பாதித்த ஒரு விடயத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்தியாவில் தமிழ் நாட்டில் இருந்து ஒரு தாதி தொழிலில் இருக்கும் ஒரு பெண், ஒரு 3 மாத காலம் பிரத்தியேகமான பயிற்சிக்காக இங்கே வந்திருந்தார். இயற்கையாகவே இந்தியா என்றதும் அவருடன் பேசுவதற்கு ஒரு ஆர்வமும், அவர் தமிழ் என்றதும் ஒரு மேலதிக ஆர்வமும் வந்து தொற்றிக் கொண்டது. பேசக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில், வழமையான அறிமுகக் கேள்வியாக பெயரைக் கேட்டதும், அவர் “வேண்டா” என்றார். ‘என்ன இது பெயரைக் கேட்க வேண்டாம்’ என்று சொல்கின்றாரா என்று யோசித்த படியே பார்த்தபோது, அவரது பெயரே ‘வேண்டா’ என்பதுதான் என்பதை அழுத்திக் கூறினார். “வித்தியாசமான பெயராக இருக்கிறதே” என்று கேட்டபோது, அவர் சொன்னது, என்னை அப்படியே அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் வீட்டில் அவர் 5 வது பெண் குழந்தையாம், அதனால் பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் ‘வேண்டா’. அந்த பெயரை உச்சரிக்கும் போதெல்லாம், அந்த பெண்ணுக்கு எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன். ‘நீ எங்களுக்கு வேண்டாத பிள்ளை’ என்று பெற்றோரே சொல்வதுபோல் இருக்காதா? வேதனையாக இருந்தது. பயிற்சிக் காலம் முடிந்து அவர் இந்தியா திரும்பிய வரையில், அவரை நான் பெயர் சொல்லி அழைத்ததே கிடையாது.

இந்த பதிவை எழுத தூண்டியது, இந்த ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல. சில மாதங்களுக்கு முன்னர் இங்கே தொலைக்காட்சியில் ஒரு விவரணப் படம் பார்க்க நேர்ந்தது. அந்த விவரணப் படம் பேசிய பொருள், ஆசிய நாடுகளில் பெண்களை அடக்கி வைப்பது பற்றியது.

இதை வாசிப்பவர்கள் சிலரது மனதில், “இந்த காலத்துலே போய் இப்படி பேசலாமா?” என்றோ, “என்ன எங்க வீட்டுல என்னை யாரும் அடக்கி வைக்கலையே”, என்றோ, “ஏன் எங்க அப்பா, அம்மா காலத்துலே கூட பெண்கள் சுதந்திரமாத்தானே இருந்தாங்க” ஏன்றோ தோன்றலாம். அட, நான் கூட அப்படி யோசிப்பேன். ஆனால், உண்மையாவே பெண்கள் அடக்கித்தான் வைக்கப் படுகிறார்கள் என்று புள்ளி விபரம் சொல்கின்றது. அதுவும் எப்போது அடக்கப் படுகிறார்கள் என்றால், கருவிலேயே அடக்கப்படுகிறார்கள். இங்கே நான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. பெண் குழந்தைகள் என்று தெரிந்ததும், அந்த குழந்தைகளை அழித்து விடுவது பற்றித்தான் சொன்னார்கள்.

பாகிஸ்தான், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இந்த விவரணப் படம் எடுக்கப் பட்டிருந்தது. பாகிஸ்தானில் எடுத்த பகுதியில் ஒரு காட்சியில், ஒரு வீட்டில் புதிதாய் பிறந்த குழந்தையும், குழந்தையைச் சுற்றி உறவினர்களும். ஆண் குழந்தை பிறந்தால் (மட்டும்) எவ்வளவு மகிழ்ச்சி என்பதை ஒரு ஆண்மகன் சொல்லிக் கொண்டிருக்கிறார். குழந்தை ஆண்தான் என்பதை ஆடையை விலக்கி காட்டி மகிழ்ந்து கொள்கின்றார். கூடவே, அங்கிருக்கும் பெண்களும் சேர்ந்து ஆண்குழந்தை பிறப்பதில் உள்ள மகிழ்ச்சியையும், அதுவே பெண் குழந்தையாக இருந்து விட்டால், ஏற்படும் கவலையயும், ஆண் குழந்தையாக இருந்து விட்டதில் உள்ள மகிழ்ச்சியுடன் சொல்கின்றார்கள். ஆண் குழந்தை பிறந்தால் கொண்டாட்டம் எப்படியெல்லாம் இருக்குமென்பதையும், பெண் குழந்தையாகி விட்டால், குழந்தை பெற்றுக் கொண்ட தாய்க்கு நடக்கவிருக்கும் அபாயங்களையும் சொன்னார்கள். அந்த தாயிடம் “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்ட போது, அவர் சொல்கின்றார் “என் கணவருக்கு எது வேண்டுமோ, எது விருப்பமோ, அதை செய்வதுதானே என் கடமை. அதனால் எனக்கும் பெண் குழந்தை பிறப்பது விருப்பமில்லை”.

இந்தியாவில் எடுத்த பகுதியில் ஒரு காட்சியில், ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை என்று தெரிந்ததும், வற்புறுத்தலின் பேரில் கருச்சிதைவு செய்து விட்டு வந்திருக்கிறார். கூடவே பல பெண்கள் துக்கம் விசாரிக்க வந்திருக்கிறார்கள். அவர் அழுதபடியே சொன்னது, “நான் என்ன செய்ய முடியும். அந்தக் குழந்தையை நான் பெற்றுக் கொள்ள முடிவு எடுத்திருந்தால், என்னை என் வீட்டுக்கு அனுப்பி விடுவார் எனது கணவர். எனக்கு குழந்தையை இழக்க விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழி தெரியவில்லை”. இவர்கள் ஓரளவு படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தவர்களாகத் தோன்றினார்கள்.

அட, படிக்காத நிலையில்தான் பெண்கள் இந்த முடிவுக்கு போக வேண்டி வருகின்றது என்று பார்த்தால், இல்லவே இல்லையாம். படித்தவர்கள் பலரும் கூட இதையே செய்கின்றார்களாம். ஒரு வைத்தியசாலைக்கு (பஞ்சாப் மாநிலத்தில் என்று நினைக்கின்றேன், சரியாக நினைவில் இல்லை) ஸ்கானிங் செய்து பார்க்க ஒரு பெண் வந்திருக்கிறார். படித்தவராகத் தெரிந்தார். அவரது கணவரின் தாயார் கூட்டி வந்திருக்கிறார். முதலில் வைத்தியரிடம், ஸ்கானிங் இல் பெண் குழந்தை என்று தெரிந்தால் என்ன நடக்கும் என்று கேட்ட போது, அவர் சொன்னார் “இங்கே வருபவர்களில் பலரும், பெண் குழந்தை என்று தெரிந்ததும், கருவை கலைத்து விடச் சொல்லி கேட்கிறார்கள். முக்கியமாக, கணவரின் உறவினர்கள் இதை வலியுறுத்திச் செய்கின்றார்கள். இப்போது அந்தப் பெண்ணுடன் வந்திருப்பவரும், அதையேதான் கேட்பார். நாங்கள் என்ன செய்வது?” என்று கவலையோடு அந்த ஆண் வைத்தியர் சொன்னார். ஸ்கானிங் செய்து கொள்ள வந்த பெண்ணிடம் “என்ன குழந்தை வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்” என்று கேட்டபோது, ஒளிப்பதிவாளரையும், வைத்தியரையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, மாமியார் அருகில் இல்லை என்பதையும் உறுதி செய்து கொண்ட பின்னர், மிகுந்த தயக்கத்தின் பின்னர் “எந்தக் குழந்தை என்றாலும் சரிதான்” என்று பதில் சொன்னார். மாமியாரிடம், அதே கேள்வி கேட்கப்பட்ட போது, எந்த வித தயக்கமுமின்றி “ஆண் குழந்தைதான்” என்ற பதில் வந்தது. “பெண் குழந்தை என்றால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு முதலில் சிறிய தயக்கம் தெரிந்தது. பின்னர் சிரித்த முகத்துடன், “கருவைக் கலைத்து விடுவோம்” என்று சாதாரணமாக ஒரு பதில் வந்தது அதிர்ச்சியை தந்தது. என்னத்தை சொல்ல, பெண்களே பெண் குழந்தைகளை வேண்டாத பொருளைப் பார்ப்பதைப் போல் பார்ப்பதற்கு, சமூகம் காரணங்களையும் ஏற்படுத்தி, பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது, ம்ம்ம். சீதனம் ஒரு முக்கிய காரணமாக பேசப் பட்டது.

இங்கே இப்படி என்றால் சீனாவில் வேறு ஒரு காரணம். ஒரே ஒரு குழந்தைதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றதும், அது ஆண் குழந்தையாகவே இருக்கட்டும் என்று முடிவு எடுக்கிறார்களாம். அது ஏன் ஆணாக இருக்க வேண்டும் என்று அங்கே நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அங்கேயும் சீதனப் பிரச்சனை உண்டா என்பது தெரியவில்லை. யாராவது தெரிந்தால் கூறுங்கள்.

இதனால் இந்த நாடுகளில் பெண்கள், ஆண்களுக்கிடையிலான விகிதம் 50:50 ஆக இல்லாமல், சமநிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அந்த சமநிலைக் குழப்பம் அபாயமான கட்டத்துக்கு போகலாம் என்றும் சொன்னார்கள். சீனாவில் இந்த one-child-policy யால், பிறக்கும் குழந்தைகளை பதிவு செய்யாமல் இருப்பதும், இந்த விகிதம் தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு ஒரு காரணமாம்.

“பெண்களின் சம உரிமையையும் சுதந்திரைத்தையும் வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்துவது முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்” என்று சொல்கின்றார்களே. இப்படி உலகிற்கு காலடி எடுத்து வைக்க முன்னரே, பெண்கள் சம உரிமையற்றுப் போவதை என்னவென்று சொல்லலாம்?