தற்கால மனிதன் – 5

Posted On மார்ச் 30, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

தற்கால மனிதன் – 5
(தொடர்ச்சி)

மனிதனின் கட்டுக்குள் வந்த நெருப்பு!

300000 ஆண்டுகளுக்கு முன்னால் மனித இனம் தன் நாளாந்தத் தேவைக்கு நெருப்பைப் பயன்படுத்தத் தொடங்கியது. வெளிச்சத்திற்கு, சூட்டுக்கு, ஏனைய விலங்குகளுக்கு எதிரான கருவியாக என்று பல தேவைகளுக்கு நெருப்பைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஒரு புல்வெளியையே நினைத்தால் எரித்துவிடத் தொடங்கினர். எரிந்து முடிந்த நிலத்தில் இறந்து கருகிப் போன விலங்குகள், பருப்புகள், கிழங்குகள் என்பவற்றைச் சேகரித்து உணவாக்கிக் கொண்டனர்.

இவ்வாறு பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட நெருப்பு சமையல் பயன்பாட்டுக்கும் வந்தது. மனித இனத்தால் இயற்கையான வடிவில் உண்ணப்பட முடியாத உணவுகளையும் சமைத்து உண்ண இந்த நெருப்பு உதவியது. சமையலானது உணவை இலகுவாக சமிபாடடையும் நிலைக்கு மாற்றியதுடன், கிருமிகள், ஒட்டுண்ணிகளை அழித்து மனிதனுக்கு உதவியது.

இதனால் மனிதனால் பல்வேறு உணவு வகைகளை உண்ண முடிந்ததுடன், உணவிற்காக நீண்ட நேரம் செலவிடத் தேவை இருக்கவில்லை. சிறிய பற்கள், குறுகிய குடலே போதுமானதாக இருந்தது. அதிகமான ஆற்றலைப் பயன்படுத்தக்கூடிய குடல் குறுகியதால், அதற்காகப் பயன்படும் ஆற்றலையும் சேர்த்து மூளைக்கு வழங்க முடிந்தது. இதனால் மூளை மேலும் நன்றாகத் தொழிற்பட முடிந்தது.

ஒரு தனிப் பெண்ணால் சில மணி நேரத்திற்குள் ஒரு காட்டையே அழித்துவிடக் கூடிய ஆற்றல் கிடைத்தது. ஏனைய விலங்குகளைப்போல் அல்லாமல், மனித இனம் நெருப்பைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கத் தெரிந்து வைத்திருந்தமையால் ஏனைய விலங்குகளை விட மேலான படிநிலைக்கு உயர்ந்தது.

தற்கால மனிதன் – 4

Posted On மார்ச் 24, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

மனிதனும் சுற்றுச் சூழலும்!

மனிதக் குழந்தைகள் முழு விருத்தியடைய முன்னர் பிறப்பதனால், அவற்றைச் சீராட்டிப் பாராட்டி, பாதுகாத்து, அறிவு புகட்டி வளர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. குழந்தையைப் பெறும் பெண்ணால் தனியாக முழுப் பொறுப்பையும் ஏற்க முடியாத சூழலில், குடும்பம், சமூகம் என்ற கட்டமைப்பு உருவானது. இந்தச் சமூகக் கட்டமைப்பு, பிணைப்பு அதிகரிக்கையில் மனித இனம் கூட்டாக இயங்கத் தொடங்கி, பல இன்னல்களைத் தாண்டி உயர்வான நிலையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டது.

மனிதர்களது சமூக வாழ்க்கை முறையே நாம் உயிர் வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்குமான நமது திறவுகோல் என்கிறார் நூலாசிரியர்.

மேலும் குழந்தைகள் முழு விருத்தியடையாமல் பிறப்பதால் நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பார்கள். வளர்க்கும், அறிவூட்டும் பொறுப்பு பெரியவர்கள் கையில் இருப்பதனால், வேறுபட்ட கொள்கைகளுடன், முரண்பாடுகளுடன் குழந்தைகள் பெரியவர்கள் ஆகிறார்கள் (அல்லது ஆக்கப்படுகிறார்கள்).

இத்தனையும் இருந்தும் பல்லாயிரம் ஆண்டுகாலமாக மனித இனம் பெரிய விலங்குகளுக்கு பயந்தும், ஒடுங்கியும் வாழ்ந்து வந்தது. தாவரங்கள், சிறு விலங்குகள் போன்றவற்றை உணவாக உட்கொண்டு வந்தனர். 400000 ஆண்டுகளுக்கு முன்னரே மனித இனம் பெரிய விலங்குகளையும் வேட்டையாடி உண்ணத் தொடங்கினர். அதிலும் 100000 ஆண்டுகளுக்கு முன்னரே, மிக விரைவாக வளர்ந்து உணவுச் சங்கிலியின் உச்சியை அடைந்தனர்.

ஏனைய விலங்குகள் படிப்படியாக மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியின் பின் உயர் படிகளை அடைந்தன. அதனால் சுற்றுச் சூழலுடன் ஒரு சமநிலை பேணப்பட்டது.

மனித இனமோ ஒரு பெரிய குதி குதித்து, பெரிய பாய்ச்சலுடன் மிகக் குறுகிய காலத்தில் உச்சிக்கு வந்தது. இதனால் சுற்றுச்சூழலால் மனிதனுடன் அனுசரித்துப் போக முடியவில்லை. மனித இனமும் சுற்றுச் சூழலுடன் அனுசரித்துப் போக முயற்சிக்கவில்லை. இது மனித இனத்தை ஒரு ஆபத்தான இனமாக்கி விட்டது.

இப்படி மனித இனத்தின் அவசரமான பாய்ச்சலே கொடிய போர்களிலிருந்து, சூழல் பேரழிவுகள் வரை கொண்டு வந்து விட்டுள்ளது.

தற்கால மனிதன் – 3

Posted On மார்ச் 17, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

எனது நீண்ட நாளைய கேள்விகளுக்கு இந்த நூலில் விடை கிடைத்தது.

அதி உயர் விருத்தியடைந்த மனித இனத்தில் சிக்கலான குழந்தை பிறப்பு ஏன்?

ஏனைய விலங்குகள் குட்டியை ஈன்று சில மணி நேரத்திற்குள் குட்டிகள் எழுந்து, ஓடியாடி விளையாடித் தானே தன் வேலையைப் பார்க்கத் தொடங்கி விடும்போது மனிதக் குழந்தைகள் மட்டும் சுதந்திரமாக இயங்க ஏன் நீண்ட காலம் எடுக்கிறது?

ஏனைய விலங்குகளிலிருந்து வேறுபட்டு மனித மூளை பெரிதாகவும், விருத்தியடைந்தும் செல்லத் தொடங்கியது. மனிதன் ஒரு சோடிக் கால்களை மட்டும் நகர்வுக்குப் பயன்படுத்திக் கொண்டு, நிமிர்ந்த நிலைக்கு வந்தமையால் கைகள் பல்வேறு மேலதிக பயன்பாடுகளில் ஈடுபடுத்தப்படக் கூடியதாக இருந்ததுடன், பார்வை மட்டம் உயர்ந்து, எதிரிகளை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள உதவியது. முக்கியமாக மேலதிக ஆற்றல் பெற்ற கைகளைக் கொண்டு சிக்கலான செயற்பாடுகளைச் செய்வதுடன், பல நவீன கருவிகளையும் உருவாக்க முடிந்தது.

நிமிர்ந்த நிலையும், பெரிய மூளையும் வெற்றியை நோக்கிய பாதையைத் தந்தாலும், சில இடர்களையும் கூடவே தந்தது.

நிமிர்ந்த நிலைக்கு வந்து பெரிய பாரமான மூளையைத் தாங்க வேண்டி வந்தமையால் முதுகு வலி, கழுத்து வலியும் கூடவே வந்தது. பெண்களுக்கு இன்னும் அதிக இடர் தரக் கூடியதாக, நிமிர்ந்த நிலைக்கு ஏற்ப இடுப்பெலும்பு சிறியதாகி பிறப்புப் பாதை சுருங்கியது. எனவே பெரிய தலை கொண்ட குழந்தை பிறப்பின்போது, பிறப்பு சிக்கலாகி, பெண்களின் இறப்பு வீதம் அதிகரித்தது. அதனை ஈடுகட்ட மனிதக் குழந்தைகள் தமது முழுமையான விருத்தியை அடைவதற்கு முன்பே, சிறிய உருவில் பிறக்க ஆரம்பித்தன. அப்படிப் பிறக்கும் குழந்தைகளின் தாய் தப்பிப் பிழைத்து மேலதிக குழந்தைகளை உருவாக்க முடிந்ததால், அந்த இயல்பு இயற்கைத் தேர்வில் தேர்ச்சி பெற்றது.

மனிதக் குழந்தைகள்
முழு வளர்ச்சியின்றிப் பிறப்பதால் தாயின் உடலை விட்டு வெளியேறிய பின்னரே முழு வளர்ச்சியை நோக்கி நகர்கிறார்கள். அதனாலேயே நீண்ட காலத்திற்கு அவர்களைச் சீராட்டிப் பாராட்டும் தேவை ஏற்பட்டது.

தற்கால மனிதன் – 2

Posted On மார்ச் 11, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

தற்கால மனிதன் – 2 (Sapiens தொடர்ச்சி)

இறுதி மனித இனம்!

2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் உருவாகிய ஒரு மனித இனம் கற்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இவர்கள் பின்னர் உலகின் பல்வேறு இடங்களுக்கு நகர்ந்தார்கள். தவிர பல்வேறு மனித இனங்கள் வெவ்வேறு இடங்களில் உருவாகத் தொடங்கியிருக்கிறது. அப்படி உருவாகிய இனங்களின் பரிணாம வளர்ச்சியில், அவர்களுக்குத் தசைகள் கூர்ப்பு அடைவதற்குப் பதிலாக நரம்பணுக்கள் கூர்ப்படைய ஆரம்பித்தன. அதன்மூலம் பெரிய மூளையையும், தொடர்ந்து அறிவையும் வளர்த்துக் கொண்டார்கள். சிம்பன்சி ஒன்றுடன் நேருக்கு நேர் நின்று மோதும் தசைவலு இந்த மனிதர்களிடம் இல்லாவிட்டாலும், பாதுகாப்பான தூரத்தில் ஒளிந்திருந்து அவற்றைத் தாக்குவதற்கான ஆயுதங்களைத் தயாரிக்கும் அறிவை வளர்த்துக் கொண்டார்கள்.

Neander Valley யில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மனித இனம் Homo neanderthalensis என்ற பெயருடன் ஐரோப்பா, மேற்கு ஆசியாவில் வாழ்ந்திருக்கிறது. நிமிர்ந்த மனிதன் என அழைக்கப்பட்ட Homo erectus கிழக்கு ஆசியாவில் வாழ்ந்திருக்கிறான். இந்தோனேசியாவில் Solo Valley யில் வாழ்ந்த மனிதன் Homo soloensis என்றும், Flores இல் வாழ்ந்த மனிதன் Homo floresiensis என்றும், சைபீரியாவின் Denisova Cave இல் வாழ்ந்த மனிதன் Homo denisova
என்றும் அழைக்கப்படுகிறான். இன்னும் பல மனித இனங்கள் இருந்தன என்பது தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்த புதைபடிமங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. இன்னும் இப்படி எத்தனை மனித இனங்கள் (அதாவது காணாமல்போன நமது உறவினர்கள்) கண்டுபிடிக்கப்படுவார்களோ தெரியாது என்கிறார் நூலாசிரியர்.

இன்றைய கால கட்டத்தில், நம்மைத் தவிர ஏனைய அனைத்து மனித இனங்களும் உலகிலிருந்து அழிந்துவிட்டன அல்லது அழிக்கப்பட்டு விட்டன. அவற்றில் Homo erectus கிட்டத்தட்ட 2 மில்லியன் ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தமையால், நம்மை விடவும் (Homo sapiens ஐ விடவும்) நீண்ட காலம் வாழ்ந்த மனித இனமாக இருக்கும் என்றும் கூறுகிறார். காரணம் கிட்டத்தட்ட 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நமது இனம் (அதாவது Homo sapiens), இன்னும் 1000 ஆண்டுகள் இருப்பதே சந்தேகம் என்பதால் (உலகம் போகும் போக்கைப் பாரு என்று சொல்லாமல் சொல்கிறார்), Homo erectus இன் சாதனையை முறியடிப்பது நினைத்துப் பார்க்க முடியாது என்கிறார். 300000 ஆண்டுகள் எங்கே, 2 மில்லியன் ஆண்டுகள் எங்கே?

2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 10,000 ஆண்டுகள் முன்னர் வரை ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்கள் ஒரே நேரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு இனம் அழிவடைந்திருக்கிறது. ஆனால் எங்களுடன் கூடவே, எங்களை ஒத்த வேறு மனித இனமும் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நம்மை ஒத்த மனித இனங்களை, நாமே அழித்திருந்தால் அதற்குக் காரணம் என்னவாகஇருந்திருக்க முடியும் என்பதற்கு அவருக்குத் தோன்றிய காரணம், அந்த மனிதர்கள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு நம்மை ஒத்திருந்ததும், பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நம்மில் இருந்து வேறுபட்டிருந்ததுமாக இருக்கலாம் (may be they were too familiar to ignore and too different to tolerate) என்கிறார்.

தற்கால மனிதனால்தான் அந்த இனங்கள் அழிந்தனவா என்ற கேள்வியை மீறி, தற்கால மனிதர்கள் எந்த இடங்களில் எல்லாம் சென்று கால் பதித்தார்களோ, அந்த இடங்களில் எல்லாம் இருந்த ஏனைய மனித இனங்கள் அழிவடைந்தன. அவர்கள் விட்டுச் சென்றவை எலும்புகள், சில கல்லினால் ஆன உபகரணங்கள், எங்களுடைய டீ.என்.ஏ. யில் சில மரபணுக்கள். கூடவே பல பதில் கிடையாக் கேள்விகளையும், இறுதி மனித இனமாக இருக்கும் நம்மையும் விட்டுச் சென்றுள்ளார்கள் என்கிறார்.

தற்கால மனிதன் – 1

Posted On மார்ச் 11, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

தற்கால மனிதன் – 1 Sapiens!

யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari) ஒரு இஸ்ரேலிய அறிவுஜீவி. வரலாற்றாசிரியரான இவர் ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் ( Hebrew University, Jerusalem) வரலாற்றுத் துறையில் பேராசிரியராக உள்ளார்.

இவர் எழுதிய Sapiens என்ற நூலை ஒலி வடிவில் கேட்க ஆரம்பித்தேன். அச்சு வடிவிலான நூலைக் கையில் வைத்து வாசித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றவே நூலை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.

மனித வரலாற்றை அறிவு பூர்வமாக, மிகவும் எளிய நடையில், சுவாரசியம் நிறைத்து தந்திருக்கிறார்.

13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றிய இயக்கவியல் பற்றியும், அணுக்கள், மூலக்கூறுகள் தோன்றிய வேதியியல் பற்றியும் கூறிவிட்டுப்,
பின்னர் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலகம் தோன்றியது பற்றியும், 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிரினங்கள் தோன்றிய உயிரியல் பற்றியெல்லாம் கூறிவிட்டு, 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நமது மூதாதையர் பற்றிக் கூறி, இறுதியாக மனிதன் தோன்றிய 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திற்கு வருகிறார்.

இந்த நூலை வாசிப்பவர் அனைவரும் Homo sapiens என்று கருதுவதாகக் கூறி ஆரம்பிக்கிறார் 😀. தற்கால மனிதர்களின் உயிரியற் பெயர் Homo sapiens (Homo = man and sapiens = wise). தற்போதைய மனித இனத்திற்கு மூதாதையர்களான வேறு மனித இனங்கள் பற்றியும், அவர்களது குணாம்சங்கள் பற்றியும், அவர்களது மூதாதையர்கள் பற்றியும் சொல்கிறார்.

ஆனாலும் அந்த உண்மையை மனித இனம் (அதாவது தற்கால மனித இனம்) ஒத்துக்கொள்ளப் பிரியப்படாமல், இரகசியமாக வைத்துவிட்டுத் தாங்கள் வேறு எந்த ஒரு உயிரியல் குடும்பத்தையும் (biological family) சார்ந்தவர்களல்ல என்றும், தாங்கள் எந்த ஒரு விலங்கு இனத்துடனும் (species) எந்த ஒரு தொடர்பும் அற்றவர்கள் போலவும் காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள் என்றும் கூறுகிறார்.

இதை வாசித்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர் (நாமெல்லாம் வலைப்பதிவுகளில் நேரம் செலவளித்த ஒரு கால கட்டத்தில்) ஒருவர் வலைப் பதிவொன்றில் “குரங்கிலிருந்து மனிதன் வந்திருந்தால் இப்ப இருக்கிற குரங்கெல்லாம் ஏன் இன்னும் மனிதனாகவில்லை?” என்று கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது. இந்தக் கேள்விக்குரிய பதிலாக இந்த நூலில் நூலாசிரியர் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறுவது … 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிம்பன்சிக்கு இரண்டு மகள்கள் பிறந்தார்கள். ஒரு மகள் தற்போதைய சிம்பன்சிகளுடைய மூதாதையராகவே இருக்க, மற்றைய மகள் (சில மரபணுப் பிறழ்வுகளால்) நமது மூதாதையராக மாற்றம் பெற்று விட்டார்.

அந்த மூதாதையர்கள் மனிதர்கள் என்ற பேரினத்தைச் (Genus Homo), சேர்ந்தவர்களாயினும், வேறு இனத்தைச் (species) சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அப்படி நம்மை விடவும் வேறு மனித இனங்களும் (species) இருந்த காரணத்தால், Homo என்ற பேரினத்தில் உள்ளடக்கப்படும் அனைத்து உயிரினங்களும் (தற்கால மனிதன் உட்பட) மனிதர்கள் என்பதால் அவர்களையெல்லாம் human என்றும், தற்கால மனிதனை sapiens என்றும் நூலில் குறிப்பிடப் போவதாகச் சொல்கிறார். அதனால்தான் நூலின் பெயர் Sapiens.

பி.கு.: இந்தப் பதிவை முழுமையாக வாசிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். வாசித்துவிட்டால், ஏதாவது வகையில் எனக்குத் தெரியப்படுத்தி விடுங்கள். ஒரு சின்ன புள்ளிவிபரத் தேவைக்காக இந்த வேண்டுகோள் 😀 .