தற்கால மனிதன் – 16

Posted On ஜூன் 27, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

எமது டீ.என்.ஏ. இப்போதும் நாம் வெப்ப மண்டலப் புல்வெளியிலோ, காட்டிலோ வாழ்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறது 😃.

எமது இனமானது எப்போதும் உணவுதேடும் இனமாகவே (foragers) இருந்து வந்திருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளில் நகர்ப்புறத் தொழிலாளர்களினதும், அலுவலக ஊழியர்களினதும் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றிருக்கிறது. அதற்கு முந்தைய 10000 ஆண்டுகள் நம் இனத்தின் அநேகமானோர் வேளாண்மை செய்பவர்களாகவும் (farmers), மேய்ப்பர்களாகவும் (herders) இருந்தார்கள். ஆனாலும் அதற்கும் முந்தைய பல்லாயிரம் ஆண்டுகளாக நம் இனத்தவர் வேட்டையாடுபவர்களாகவும் (hunters), உணவு சேகரிப்பவர்களாகவுமே (gatherers) இருந்து வந்துள்ளனர். எனவே நம் இனத்தின் வரலாற்றில் மிக மிக நீண்ட காலமாக நாம் உணவு சேகரிப்பவர்களாகவே இருந்து வந்துள்ளோம்.

அதனால் நமது தற்போதைய சமூக, உளவியல் இயல்புகள் யாவும் வேளாண்மைக் காலத்திற்கு முந்தைய காலத்தாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பரிணாம உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்போதும் நமது மூளையும், மனமும் ஆதிகாலத்து வேட்டையாடும், உணவு சேகரிக்கும் மனிதர்களின் வாழ்க்கையைத் தழுவியே அமைந்திருக்கின்றது என்கின்றனர்.

இதற்கான ஒரு எடுத்துக்காட்டு, நம்மவர்கள் உயர் கலோரி உணவுகளை நாடுவது. அதனால்தானே கட்டுக்கு மீறிய உடற்பருமன் (obesity) உட்பட, பல்வேறு நோய்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம். அது எப்படி இது ஆதிமனிதனின் வாழ்க்கையைத் தழுவி அமைந்திருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? 30000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களுக்கு பழங்கள் மட்டுமே உயர் கலோரி இனிப்பு உணவாக இருந்திருக்கும். எனவே ஒரு ஆதி மனிதன் எங்காவது பழமரத்தைக் கண்டால், ஏனைய குரங்கினங்கள் போட்டிக்கு வர முன்னர், அந்த இடத்திலேயே தன்னால் முடிந்தளவு உடனேயே பறித்து உண்டு விடுவான். ஏனென்றால் மரத்திலிருக்கும் பழம் முழுவதையும் பறித்து எடுத்துச் செல்ல வழியிருந்திருக்காது. (லொறியில் போட்டா கொண்டு போக முடியும்?) ஆனால் இப்போது எத்தனை எத்தனை உயர் கலோரி உணவுகள் (ஐஸ் கிரீமென்ன, சொக்கிளேற்றென்ன, கோக்கோகோலா போன்ற உயர் கலோரி பானங்களென்ன) இலகுவாகக் கிடைத்தாலும், ஆதி மனிதனின் மனநிலையிலேயே அவற்றையெல்லாம் வாங்கி குளிர்சாதனப் பெட்டிகளை நிரப்பி, பின்னர் அவற்றைக் கொண்டு வயிற்றையும் நிரப்பி, வருத்தத்தையும் தேடி எத்தனை பாடு. ஆதி மனிதன் அரிதாகக் கிடைக்கும் உயர் கலோரி உணவை கிடைக்கும்போது உண்டான். அது அவனுக்குத் தேவையும்கூட. ஆனால் நாம்? அந்த இயல்பு நமது மரபணுவில் பதிந்து இருப்பதனால்தானோ என்னவோ, நகர வாழ்வில் இருந்தாலும், இன்னமும் ஏதோ வெப்ப மண்டல புல் வெளியிலோ, காட்டிலோ வாழ்வது போன்ற நினைப்பில் நாம் உயர் கலோரி உணவை அளவுக்கு அதிகமாக உண்கிறோம்.

தற்கால மனிதன் – 15

Posted On ஜூன் 16, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

படைப்பின் எசமானர்கள்?

தற்கால மனிதன் கண்டுபிடித்த கற்பனை நிதர்சனங்களின் (imagined realities) பெரிய அளவிலான பன்முகத்தன்மை, அதனால் ஏற்பட்ட மனித நடத்தை முறைகளின் பன்முகத்தன்மை ஆகியவை கலாச்சாரங்களின் முக்கிய கூறுகளாகும். கலாச்சாரங்கள் மாறும்போதும் மேம்படுத்தப்படும்போதும் அது வரலாறு ஆகிறது.

முன்னர் உயிரியலை வைத்தே தற்கால மனிதனின் விருத்திக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு வந்தது. அறிவுப் புரட்சி ஏற்பட்டபோது வரலாறு பற்றிய கதைகள் ஆரம்பித்துவிட்டன. ஒரு மதம் உருவானது பற்றியோ, ஒரு புரட்சி ஏற்பட்டது பற்றியோ அறிய, மரபணு பற்றியும், ஓமோன்கள் பற்றியும், உயிர்கள் பற்றியும் கொடுக்கப்படும் உயிரியல் விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே ‘வரலாறு’ எனும் தனிப்பாதை ஆரம்பித்தது.

ஒரு தனி மனிதனின், அல்லது ஒரு சிறு குழுவின் நடத்தையை உயிரியலால் விளக்க முடியும். ஆனால் அந்தக் குழுவின் எண்ணிக்கை 150 என்னும் வரம்பை மீறும்போது பெரிய மாற்றம் நிகழ்கிறது. ஒரு ஆயிரம் மனிதக் குரங்குகளை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைக் கட்டடத்திற்குள் விட்டால் பெரிய அமளி துமளி ஆகி விடுமல்லவா? ஆனால் மனிதர்களால் இதைவிடப் பெரிய எண்ணிக்கையில் அமைதியாகக் கூட்டம் கூட முடிகிறது. காரணம் தற்கால மனிதனை மதம், வணிகம், அரசியல் என்று பல விதமான கற்பனை நிதர்சனங்கள் பசை போட்டு ஒட்டிப் பிணைத்து வைத்திருக்கிறது.

300000 ஆண்டுகளுக்கு முன்னர்வரை வெறும் ஈட்டி முனையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்த மனிதன் இப்போது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்து விளையாட ஆரம்பித்திருக்கிறான். ஒரு நவீன அணு ஆயுத உற்பத்திக்கு உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான அந்நியர்களின் ஒத்துழைப்பு உதவுகிறது. யுரேனியம் சுரங்கத் தொழிலாளர்களிலிருந்து, தத்துவார்த்த இயற்பியலாளர்கள் (theoritical physicist) வரை பலரும் அதில் பங்களிக்கிறார்கள்.

மனிதர்கள் மிகப் பெரிய குழுக்களாக ஒன்றிணைந்து, வர்த்தக வலைப்பின்னல்கள், பெரிய கொண்டாட்டங்கள் போன்றவற்றை ஒழுங்கு செய்கிறார்கள். மனிதனின் கற்பனை மிகப் பெரிய எண்ணிக்கையில் மனிதர்களை ஒன்றாக இணைத்து அவர்களைப் படைப்பின் எசமானர்களாக ஆக்கியுள்ளது.

தற்கால மனிதன் – 14

Posted On ஜூன் 14, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

( Sapiens தொடர்ச்சி)

நம்பிக்கை மனிதனைப் பிணைத்த முக்கிய கருவி!

மற்ற மனித இனங்களில் வர்த்தகத் தொடர்புகள் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஐரோப்பிய மையப்பகுதியில் 30000 ஆண்டுகள் பழமையான தற்கால மனிதர்களின் வாழ்விடம் ஒன்றைக் கண்டறிந்தனர். அவர்கள் அவ்விடத்தில், மத்தியதரைக் கடல் மற்றும் அட்லாண்டிக் கடலில் இருக்கும் கடற்சிப்பியின் ஓடுகளைக் கண்டெடுத்தனர். இவை தொலைதூர வர்த்தகம் காரணமாகவே குறிப்பிட்ட அவ்விடத்திற்கு வந்திருக்க முடியும். அவர்கள் தகவல்களையும் பரிமாறிக் கொண்டிருக்கலாம்.

தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த நியாண்டதால் மனிதர்களின் இடத்தில் இவ்வாறான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. நியாண்டதால் மனிதர்களில் ஒவ்வொரு குழுவும் தமக்குக் கிடைக்கும் உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தித் தமக்குத் தேவையான கருவிகளைத் தாமே தயாரித்திருக்க வேண்டும்.

தற்கால மனிதன் இடம் விட்டு இடம்போய் வர்த்தகத்தை ஆரம்பித்தான் என்றால், ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இவ்வாறான பரிமாற்றங்கள் நடந்திருக்க முடியும்.

தற்கால மனிதன் – 13

Posted On ஜூன் 10, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

விரைவுச்சாலையில் (Fast Lane) எமது பயணம்!

கலாச்சார பரிணாம வளர்ச்சி என்னும் விரைவுச்சாலையைப் பிடித்து குறுக்குவழியில் எப்படி முன்னேறினோம்?

தற்கால மனிதர்கள் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, பொருத்தமான சூழ்நிலையில், விரைவாக தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள்.

பழங்கால மனிதர்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பெரிய மாற்றமெதுவும் இன்றி வாழ்ந்தார்கள். எ.கா. கல்லினாலான கருவிகள் மில்லியன் ஆண்டுகளாக அப்படியே இருக்கின்றன. ஆனால் அறிவுப் புரட்சியின் பின்னர் மனிதர்கள் தங்கள் சமூக கட்டமைப்புகள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒவ்வொரு தசாப்தங்களுக்கும் குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர். மிக வேகமாக மாற்றங்களைச் செய்கின்றனர் (இன்னும் சொல்லப்போனால், நாளுக்கு நாள் கூட புதிய மாற்றங்கள் நிகழ்கிறது. எமது வாழ்க்கைக் காலத்தை வைத்தே இதனை நாம் உணரலாம்). தொடர்புப் பரிமாற்றத்திற்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தோம்… அவசரத்திற்குத் தந்தி அடித்தோம். பின்னர் தொலைபேசிகள் வந்தன… பின்னர் மின்னஞ்சல்கள் விரைவான தொடர்புப் பரிமாற்றத்தில் உதவியது. முதன் முதல் மாமாவிற்கு நான் மின்னஞ்சல் அனுப்பியதும், அடுத்த சில நிமிடங்களில் மாமாவிடமிருந்து பதில் வந்ததும் எப்படியொரு மகிழ்ச்சியைத் தந்தது என்பது இப்போதும் நினைவில் உள்ளது. பின்னர் இணைய இணைப்பு… இப்போது இணைய இணைப்புடன் கூடிய கைத்தொலைபேசி அனேகமாக அனைவரின் கைகளிலும்…. அது மட்டுமா? Whatsapp, Viber, Messenger, Instagram, Snapchat என்று சமூக ஊடகங்கள் எத்தனை விரைவான தொடர்புப் பரிமாற்றத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது. (Good morning, good night, சாப்பிட்டீங்களா, இண்டைக்கு மத்தியானம்
என்ன சாப்பாடு etc etc என்று சின்னச் சின்ன விடயங்களைக்கூட அன்புக்குரியவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பு கொண்டு, எந்த நேரமும் கேட்க முடிகிறது. முகம் பார்த்துப் பேச முடிகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருப்பவர்களும் ஒன்றாக group video call போட்டு மணிக்கணக்கில் கதைக்க முடிகிறது 😃. கணினியின் வளர்ச்சியில் மிகக் குறுகிய காலத்தில், எத்தனை பெரிய வளர்ச்சி… மேசைக் கணினி.. மடிக் கணினி.. கையடக்கக் கணினி.. கைக்கடிகாரக் கணினி… ).

கலாச்சார மாற்றம் எவ்வளவு விரைவாக தற்கால மனித இனத்தை மாற்றி வருகிறது என்பதற்கு நூலாசிரியர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டுத் தருகிறார்.

ஜேர்மனியில் பேர்லினில் 1900 ஆண்டு பிறந்த ஒரு பெண் 100 வயதுவரை வாழ்ந்திருந்தால்….

பிறந்து வில்ஹெல்ம் II பேரரசின் (Empire) கீழ் தன் குழந்தைப் பருவத்தைக் கழித்து, வீமர் குடியரசில் (Republic) தனது இளம்பெண் பருவத்தைக் கடந்து, பின்னர் நாஜி மூன்றாம் ரைச் (Nazi third Reich) இலும், கம்யூனிஸ்ட் கிழக்கு ஜெர்மனியிலும் (Communist East Germany) வாழ்ந்து, ஜனநாயக ஐக்கிய ஜெர்மனியின் (Democratic and reunified) குடியுரிமை உள்ளவராகத் தன் உயிரைத் துறந்திருப்பார்.

மில்லியன் ஆண்டுகளாக நிகழாதிருந்த மாற்றம் ஒரு சில நூற்றாண்டுகளிலேயே நிகழக் காரணம் கலாச்சார மாற்றம். கலாச்சார மாற்றம் என்பதே தற்கால மனிதனின் விரைவுச் சாலை எனலாம்.

தற்கால மனிதன் – 12

Posted On ஜூன் 7, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

( Sapiens தொடர்ச்சி)

குறுக்கு வழி (Shortcut)!

பிற விலங்குகள் அல்லது தொன்மையான மனிதர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களில் மரபணுக்களே (gene) முக்கிய பங்கு வகித்தன. ஆனாலும் இந்த மரபணுக்களைத் தன்னகத்தே கொண்ட டீ.என்.ஏ.க்கள் பெரிய எதேச்சாதிகார வேலையெல்லாம் காட்டாமல் சுற்றுச்சூழல் காரணிகளுக்கும் இத்தகைய மாற்றங்களில் பங்கெடுக்க வாய்ப்பளித்தது. ஒரு குறிப்பிட்ட சூழலில், ஒரு குறிப்பிட்ட இன விலங்குகள் ஒத்த நடத்தையைக் கொண்டிருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட மனிதக் குரங்குகள் (Common Chimpanzee) இனத்தின் குழுவில் படிநிலைகள் காணப்படுவதுடன் alpha male எனப்படும் ஒரு ஆணே குழுவிற்குத் தலைமை தாங்கும். இவற்றின் நெருங்கிய இனமான குள்ள மனிதக் குரங்கு (Bonobo) இனத்தின் குழுவில் ஒரு சமத்துவ நிலை பேணப்படுவதுடன் பெண்களின் கூட்டணியே குழுவில் ஆதிக்கம் செலுத்துகின்றது. மனிதக் குரங்கு இனத்திலுள்ள பெண்கள், குள்ள மனிதக் குரங்கு இனத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு பெண்ணியப் புரட்சியை மேற்கொள்ளவில்லை. அந்த இனத்தின் ஆண்கள், கூட்டம் போட்டு, எமக்கு alpha male வேண்டாம், குழுவில் அனைவரும் சமமாகவே மதிக்கப்பட வேண்டும் என்று பிரகடனம் எதுவும் செய்யவும் இல்லை.

இது போலவே தொன்மையான மனிதர்களும் புரட்சிகளின்றி, பெரிய மாற்றங்கள் இன்றி மிக நீண்ட காலம் (2 மில்லியன் ஆண்டுகள் வரை) வாழ்ந்து விட்டார்கள். ஆனால் தற்கால மனிதர்களில் ஏற்பட்ட பரிணாம மாற்றத்துக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக மனிதர்களின் கலாச்சார பரிணாமமானது
இருக்கிறது. அதாவது நேர்வழியான மரபணு / சூழல் மாற்றங்களால் ஏற்படும் பரிணாம வளர்ச்சியிலிருந்து, விலகி, கலாச்சார மாற்றங்களால் ஏற்படும் பரிணாம வளர்ச்சி எனும் குறுக்குவழியில் இறங்கி விரைவாக ஏனைய உயிரினங்களைக் கடந்து வந்து விட்டோம்.
இத்தகைய கலாச்சார மாற்றங்களாலேயே மனிதர்கள் திறமையுடன் கூட்டாக இணைந்து ஒத்துழைக்கிறார்கள்.

இயற்கை தேர்வுக்கு எதிராகவும் மனிதர்களில் மாற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக இனப்பெருக்கம் உயிரினங்களில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தாலும், கத்தோலிக்கப் பாதிரியார்கள் மத நம்பிக்கை என்னும் கலாச்சார முறை காரணமாகவே திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். அதற்கு மரபணு மாற்றமோ அல்லது சுற்றுச்சூழலோ காரணம் அல்ல. (தற்போது பல இளம் தலைமுறையினர் திருமணம் அவசியமில்லை, குழந்தைகளைப் பெறுவது முக்கியமில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். இதுவும் ஒரு கலாச்சார மாற்றத்தால் ஏற்பட்ட விளைவுதானே?)

மரபியல் பரிணாம வளர்ச்சியின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, நாம் கலாச்சார பரிணாமம் என்னும் குறுக்கு வழியில் முன்னேறி வந்துவிட்டோம்

தற்கால மனிதன் – 11

Posted On ஏப்ரல் 26, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

( Sapiens தொடர்ச்சி)

கூட்டுக் கற்பனையும், மனிதனால் கட்டமைக்கப்பட்ட கருத்துருக்களும்!

ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என்று கூடி மனிதர்கள் எப்படி ஒத்துழைக்கிறார்கள்? இதன் அடிப்படை என்ன?

கற்பனையும், அதுவும் கூட்டுக் கற்பனையும் (Collective imagination), அந்தக் கற்பனையில் மனிதர்கள் வைக்கும் நம்பிக்கையுமே அவர்களை இணைக்கிறது.

நாம் ஒரே ஊரை/ நகரத்தை/ நாட்டை/ நிறுவனத்தை/ மதத்தை/ கொள்கையைச் சேர்ந்தவர்கள்
என்று பல் வேறுபட்ட நம்பிக்கையின் அடிப்படையில் மனிதன் தனித்தனிக் கூட்டமாக இணைகிறான்.

ஜேர்மனியில் இருக்கும் Stadel Cave இல் 32000 ஆண்டுகளுக்கு முந்தைய சிங்க-மனிதனின் உருவம் (சிங்கத் தலையுடன் உள்ள மனித உருவம்) கண்டெடுக்கப்பட்டது. இது மனிதர்களால் இல்லாத ஒன்றைக் கற்பனையில் கண்டுகொள்ள முடியும் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. மனிதனால் தாம் என்றுமே கண்களால் பார்த்திராத, நுகர்ந்து பார்த்திராத, தொட்டு உணர்ந்திராத விடயங்களை கற்பனையாக உருவாக்கி, அதனடிப்படையில் கருத்துகளை புதிதாகக் கட்டமைத்து, அவற்றை நம்பும் இயல்பும், அதுவும் கூட்டமாக இணைந்து ஏற்றுக் கொள்ளும் இயல்பும் மொழிப் பரிமாற்றம் மூலம் மிகச் சாத்தியமான ஒன்றாகியது.

ஒரு பன்னாட்டு நிறுவனமும் இவ்வாறே தொழிற்படுகிறது. ஒரு நிறுவனம் அல்லது குழுமம் இயற்பொருளாக (physical object) இல்லாதிருந்தாலும், அதனை நிறுவியவர், அதற்காக உழைப்பவர்கள், அதன் பயனீட்டாளர்கள் என அனைவரும் அந்த நிறுவனத்தின் பெயரில் நம்பிக்கை வைக்கிறார்கள். ஒரு limited liability company யில் நிறுவனத்திற்குச் சொந்தக்காரரின் பெயரில் அல்லாது நிறுவனத்தின் பெயரிலேயே கடன் வாங்க முடியும். நட்டமேற்பட்டால், நிறுவனத்தின் பெயரிலேயே அதைக் காட்டவும் முடியும். ஏதாவது தவறு ஏற்பட்டால், நிறுவனத்தின் பெயரிலேயே வழக்குப் பதிவு செய்யலாம். நிறுவனத்தை மூடினாலும், அதில் பணி புரிந்தவர்கள் உயிர் வாழ்வார்கள். ஆனால் அந்த நிறுவனம் உடல், பொருள், ஆவி அற்றது. அப்படி ஒரு நிறுவனம் இயங்குவது மனிதர்களின் கூட்டுக் கற்பனையும் நம்பிக்கையும்.

(பணம் என்பதை எடுத்தால் வெறும் காகிதத் தாளுக்கு பெறுமதி இருப்பதாக, அதுவும் வெவ்வேறு எழுத்துகள் பொறித்தவுடன், ஒரே மாதிரியான தாள்களுக்கு வெவ்வேறு பெறுமதி இருப்பதாக எண்ணி அதை நம்புகிறோம். ஏன் ஒரு கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, கடன் அட்டையை ஒரு இயந்திரத்தின் முன் காட்டிவிட்டதும் வாங்கிய பொருட்களுக்கு நாமும் பணம் செலுத்திவிட்டதாக நம்புகிறோம், கடைக்காரரும் பணம் பெற்றுக் கொண்டதாக நம்புகிறார்.)

புராணக் கதைகள், கட்டுக் கதைகள், மதங்கள் எல்லாம் இதன் வெளிப்பாடாகவே உருவாகின. ஒரு கதையைத் திறம்பட, அனைவரும் நம்பும்படியாகச் சொல்வது இலகுவானதல்ல. அப்படிச் சொல்வதில் வெற்றியடைந்துவிட்டால், அந்த நம்பிக்கை ஒரு அளவற்ற சக்தியை மனிதருக்குத் தரும். அதனடிப்படையில் மில்லியன் கணக்கில் ஒருவருடன் ஒருவர் எந்த அறிமுகமும் அற்றவர்கள் இணைந்து ஒரு பொது இலக்கை நோக்கித் தொழிற்படுவார்கள்.

பல விலங்குகள், ஏன் வேறு மனித இனங்கள் “கவனம், சிங்கம்” என்று மட்டுமே தனது குழுவுக்கு எச்சரிக்கை சமிக்ஞை கொடுத்துக் கொண்டிருக்க, பழங்குடி மனிதன் “சிங்கம் எமது குழுவைப் பாதுகாக்கும் புனித ஆவி” (Lion is the guardian spirit of our tribe) என்று சொன்னான். இந்தக் கற்பனைத் திறன் மனித இனத்திற்கே கை வந்த கலையாக உள்ளது. எதையெல்லாமோ சொல்லி, மிகப் பெரிய கூட்டத்தை மனிதனால் சேர்க்க முடிகிறது, அதையெல்லாம் கேட்டு நம்பிக்கையுடன் சேரக் கூட்டமும் தயாராக உள்ளது.

இந்தக் கற்பனையைப் பயன்படுத்தி நம் மனித இனம் பெரும் கூட்டமாக இயங்கிப் பல நல்ல காரியங்களை நிறைவேற்றுகிறது. ஆனால், இவ்வாறான கற்பனை சில சமயம் ஆபத்தாகும் அளவுக்கு கவனத்தைச் சிதறடிக்கக் கூடியதாகவும், தவறான பாதைக்கு அழைத்துச் சென்றாலும், இதனை பெரிய குழுக்களாக இணைந்து செய்யும்போது, அதிக எண்ணிக்கையினர் தெரிந்தவர், தெரியாதவர் என்ற வேறுபாடின்றி அனைவருடனும் இணைந்து மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் ஒன்றாக ஒத்துழைக்கும் திறனைக் கொண்டிருக்கிறார்கள்.

அதனாலேயே நமது மனித இனத்தால் இந்த உலகையே ஆள முடிந்தது என்கிறார் நூலாசிரியர்.

தற்கால மனிதன் – 10

Posted On ஏப்ரல் 18, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

புது மொழியும், வெட்டிப்பேச்சும் (gossiping)!
(Gossiping ஐ வெட்டிப்பேச்சு எனலாமா? சரியான தமிழ்ச் சொல் பிடிபடவில்லை).

நமது மனித இனம் தொடர்பாடலை இலகுவாக்க மொழியை உருவாக்கிக் கொண்டார்கள். தேனீக்கள், எறும்புகள் கூட எங்கே உணவு கிடைக்கும் என்பதை ஒரு தொடர்பாடல் முறை மூலம் தெரிவித்துக் கொள்கின்றன. குரங்குகள் மற்றும் பல விலங்குகள் வேறுபட்ட சத்தங்கள் மூலம் வேறுபட்ட செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன.

நமது மனித இனத்திடம் அறிவுப் புரட்சி மூலம் ஏற்பட்ட தொடர்பாடல் மொழி, ஏனைய விலங்குகளின் மொழியிலிருந்து வேறுபட்டதாய் இருந்தது.

  1. இந்த மொழி பல விடயங்களைத் தெளிவாகவும், விரிவாகவும் பகிர்ந்து கொள்ள உதவியிருக்கிறது. எ.கா. ஒரு குரங்கு தனது குழுவினருக்கு ஒரு சிங்கம் வருகிறது அல்லது கழுகு வருகிறது என்பதை வேறுபட்ட சத்தங்கள் மூலம் சொல்லும். கழுகு என்ற சத்தத்திற்கு ஏனைய குரங்குகள் மேலே அண்ணாந்து பார்க்கும். சிங்கம் என்ற சத்தத்திற்கு அவை தாவி ஓடி மரங்களில் ஏறிக்கொள்ளும். ஆனால் மனிதனோ எந்தத் திசையில், குறிப்பாக எந்த இடத்தில் சிங்கம் இருக்கிறது, என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைச் சொல்வான். குழுவினர் தமக்குள் உரையாடி எந்தெந்த வழிகளால் அந்த இடத்திற்குப் போகலாம், சிங்கத்தை எப்படித் துரத்தலாம், துரத்திவிட்டு சிங்கம் துரத்திக் கொண்டு செல்லும் காட்டெருமையை எப்படி மடக்கிப் பிடித்து, வேட்டையாடி, தமக்கு உணவாக்கலாம் என்பதை முடிவு செய்வான்.
  2. மனிதர்கள் பயன்படுத்தும் மொழி மனிதனிடம் காணப்பட்ட, காணப்படுகின்ற gossiping இயல்பை அடிப்படையாகக் கொண்டு தொடர்பாடல் திறனைக் கூட்டியிருக்கும் என்கிறார் நூலாசிரியர். Gossiping என்பது அன்று தொட்டு இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. தற்போதும் ஈமெயில்கள், செய்தித்தாள் பத்திகள், தொலைபேசி அழைப்புகள் என்று பலவற்றிலும் இந்த வெட்டிப்பேச்சைப் பார்க்கிறோம்தானே? (ஏன் நல்ல பல விடயங்கள் இருந்தாலும் முகநூல், வாட்சப் எல்லாவற்றிலும் சிலசமயம் நாம் வெட்டிப் பேச்சில் மும்முரமாக இருக்கிறோமல்லவா? 😅) நம் இன மனிதனுக்கு இந்த இயல்பு ஆரம்பத்திலிருந்து மிகவும் இயல்பாக வந்திருக்கிறது.

மதிய உணவு இடைவேளையில் சந்தித்துக் கொள்ளும் இரு வரலாற்றுப் பேராசிரியர்கள் உலகப் போர் பற்றியோ, அறிவியல் மாநாட்டின் சிறு இடைவேளையில் (a coffee break) சந்தித்துக்கொள்ளும் இரு அணு இயற்பியலாளர்கள் (nuclear physicists) குவார்க்கு (quark) பற்றியோதான் பேசிக் கொள்வார்களா என்று கேட்கிறார் நூலாசிரியர். சில சமயம் பேசிக் கொண்டாலும், (அதைவிட முக்கியமான 😜) ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்ட பணத்தை Lexus வாங்கப் பயன்படுத்திய சக ஊழியர் பற்றியோ, கணவன் தன்னை ஏமாற்றியதைக் கண்டு பிடித்த பேராசிரியை பற்றியோ, பீடாதிபதிக்கும், துறைத் தலைவருக்கும் இடையிலான சச்சரவு பற்றியோ மிகவும் சுவாரசியமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்கிறார். இந்த gossiping சக மனிதர்களிடையேயான பிணைப்பைக் கூட்டி, அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை உள்வாங்கி, அவர்களை வெற்றிகரமான பெரிய குழுவாக இயங்க உதவுகிறது என்கிறார். (Gossiping இற்கு இப்படியொரு நேர்மறை விளக்கத்தை இப்போதுதான் பார்க்கிறேன் 😀).

ஆனாலும் இந்த மொழித் தொடர்பாடல் அல்லது gossiping மூலம் கூடும் கூட்டத்துக்கும் ஒரு வரையறை உண்டு. இந்த முறையில், ஒருவரிடம் ஒருவர் நேரடியாகப் பரிச்சயம் ஏற்பட்டு 150 பேரளவில் இணையலாம்.

ஏனைய மனித இனங்கள் உட்பட விலங்குகள் அனைத்தும் இந்த 150 எண்ணுக்குள்ளேயே கூட்டமாக இணைந்திருந்தன/ இணைந்திருக்கின்றன.

அப்படியிருக்க நமது இனம் மட்டும் எப்படி இந்த குறிப்பிட்ட வரம்பைத் தாண்டி, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என்று கூடி ஒத்துழைக்கிறார்கள்? இதன் அடிப்படை என்ன? ஒரே நாட்டைச் சேர்ந்தோர், ஒரே மதத்தைச் சேர்ந்தோர், ஒரே கொள்கையைச் சேர்ந்தோர், ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தோர் என்று பல வகையில், எத்தனையோ அறிந்த, அறியாத முகங்களுடன் கூட இணைந்து தொழிற்படுகிறார்கள், பயணிக்கிறார்கள். ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், உலகளவில் இலட்சக்கணக்கில் மனிதர்கள் இணைந்து தொழிற்படுகிறார்கள்.

மிக மிக அதிகமான எண்ணிக்கையில் கூட்டமாக மனித இனம் எப்படி இயங்குகிறது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

தற்கால மனிதன் – 9

Posted On ஏப்ரல் 14, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

அறிவுப் புரட்சி (Cognitive revolution)!

நமது இனத்தவர் 300,000 ஆண்டுகளுக்கு முன்னரே உலக அரங்கில் தோன்றியிருந்தாலும், மிக நீண்ட காலத்திற்கு பெரிய மாற்றங்கள் எதுவுமின்றியே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்தத் தொன்மையான நம் மூதாதையர்களின் மூளை அமைப்பு நமது மூளை அமைப்பை விட வேறுபட்டதாக இருந்திருக்கலாம். தற்போதைய மனிதர்களிடம் இருக்கும் கற்கும் திறன் (learning), நினைவாற்றல் (remembering), தொடர்பாடும் ஆற்றல் (communicating) அந்தத் தொன்மையான மனிதர்களிடம் இல்லாது இருந்திருக்கலாம். அதனால் , நீண்ட காலமாக நமது மனித இனம் ஏனைய மனித இனங்களைவிட மேலதிகமாக எந்த அனுகூலங்களையும் கொண்டிருக்கவில்லை.

பின்னர் 70000-30000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலேயே அறிவுப் புரட்சி ஏற்பட்டது. படகு, விளக்கு, அம்பு-வில், ஊசி போன்ற புதிய கண்டு பிடிப்புகள் ஏற்பட்டன. சிங்க-மனிதனின் உருவச் சிலை போன்ற கலை வடிவங்கள் உருவாக்கப்பட்டன. மதங்கள் உருவாகின. “நீ எனக்கு இரண்டு கடற் சிப்பிகள் தந்தால் நான் உனக்கு ஒரு பாசிமணி மாலை தருவேன்” என்பது போன்று வணிகம் ஆரம்பித்தது. ஒரு குழுவுக்கு ஒருவன் தலைவன், ஏனையோர் அவனுக்குக் கட்டுப்பட்டவர்கள் போன்ற
சமூக அடுக்கு உருவாகியது. அந்தக்கால மனிதர்களிடம் நவீன மனிதர்களிடம் இருக்கும் அறிவாற்றல், படைப்பாற்றல் இருந்திருக்கிறது. அப்போதிருந்த சூழ்நிலைக்கேற்ப அந்த ஆற்றல் வெளிப்பட்டிருக்கிறது.

இம்மனித இனத்தில், இப்படியான அறிவுப் புரட்சி ஏற்படக் காரணம் தற்செயலாக ஏற்பட்ட மரபணுப் பிறழ்ச்சியினால் மனித மூளையில் ஏற்பட்ட மின்பிணைப்பு மாற்றங்களாக இருக்கும். இதனை Tree of knowledge mutation என்கிறார்கள். இந்த மாறுதல் மூலமாக மனித இனம் ஒரு புது வகை மொழியை தம்மிடையே பயன்படுத்தி தமது தொடர்பாடல் முறையை முன்னேற்றிக் கொண்டது.

முன்பிருந்த வேறு மனித இனங்களில் ஏற்படாமல் தற்கால மனித இனத்தில் இந்த மரபணுப் பிறழ்ச்சி ஏன் ஏற்பட்டது? நமது இனத்திற்கு யோகமடித்துக் கிடைத்த ஒரு வாய்ப்புத்தான் 😀.

தற்கால மனிதன் – 8

Posted On ஏப்ரல் 12, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

உணவுச் சங்கிலியில் நமது இனம்!

நமது இனத்தவர் உணவுச் சங்கிலியில் ஒரு நடுநிலையிலேயே பல்லாண்டு காலம் வாழ்ந்தார்கள். 300000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவில் கூர்ப்படைந்த தற்கால மனிதர்கள் ஆப்பிரிக்க –  ஆசியப் பகுதிகளில்  தோன்றினார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழல் தொகுதியிலேயே வாழ்ந்தார்கள்.

இப்போதிலிருந்து 70000 – 30000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் படகு, விளக்கு, அம்பு-வில், சூடான ஆடைகளைத் தைத்துக்கொள்ளத் தேவையான ஊசி போன்றவற்றைக் கண்டு பிடித்தார்கள். இந்தக் காலகட்டமே அறிவுப் புரட்சிக்கான காலமாக அமைந்தது.

கிட்டத்தட்ட 45000 ஆண்டுக்கு முற்பட்ட காலம் வரையில், அவுஸ்திரேலியா போன்ற கடலினால் சூழப்பட்ட உலகின் பல பகுதிகள் மனித இனத்தினது காலடி படாமல் இருந்தன. மனித இனத்தின் காலடி மட்டுமல்லாமல், மனித இனத்துடன் கூடவே சூழலைப் பங்கிட்டு வந்த வேறு விலங்கினங்களோ, தாவர இனங்களோ அந்த இடங்களில் இருக்கவில்லை.   அந்த இடங்கள் தமக்கென ஒரு தனித்துவமான சூழல் தொகுதிகளைக் கொண்டிருந்தன.  எப்போது மனித இனம் தனது அறிவினைப் பயன்படுத்தி, கடலைக் கடந்து சென்று, முற்றிலும் புதிய சூழல் தொகுதிகளுக்குத் தம்மை இசைவாக்கப்படுத்தித்  தம்மைத் தக்க வைத்துக் கொண்டதோ,  அப்போதே மனித இனம் உணவுச் சங்கிலியின் உச்சியை நோக்கி நகர்ந்து மிக விரைவான வளர்ச்சியை அடைந்தது.

இன்னும் சரியாகச் சொன்னால் அவுஸ்திரேலியாவில் தம் காலடித் தடங்களைப் பதித்த மனித இனம் சூழலுக்குத் தம்மை இசைவாக்கம் செய்ததுடன், சூழலைத் தமக்கேற்றபடி மாற்றியமைக்க ஆரம்பித்தார்கள். அந்த இடங்களில் ஏற்கனவே இருந்த பல விலங்கினங்கள், தாவர இனங்கள் அழிவடைய நேரிட்டது. தற்கால மனித இனம் தம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் தம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள், சூழல் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆரம்பித்தது.

தற்கால மனிதன் – 7

Posted On ஏப்ரல் 6, 2023

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது தற்கால மனிதன்

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

மற்ற மனித இனங்களுக்கு என்ன நடந்தது?

நமது இனம் உலகின் வேறு பகுதிகளுக்கு நகரத் தொடங்கியதும் வேறு இனத்தவருடன் வேட்டையாடல், உணவு சேகரித்தல் என்பவற்றில் போட்டி ஏற்பட்டது. நமது இனத்திடம் மற்ற இனங்களிடம் இருந்ததை விடவும் சிறந்த தொழில் நுட்பமும், சமூகமாக இயங்கும் திறமையும் இருந்ததால் ஏனைய இனங்களால் ஈடுகொடுக்க முடியாமல் அழிந்து போயினர். நியாண்டதால் என்ற மனித இனம் நம்மவர்களைவிட உடல் வலிமை கூடியவர்களாக இருந்தமையால் முதல் தடவை நம்மவர்கள் தோற்றுப் போனார்கள். ஆனாலும் நம்மவர்கள் மிகப் பெரிய கூட்டமாக, சமூகமாக ஒருங்கிணைந்து, திட்டமிட்டு, புதிய வியூகம் வகுப்பதில் வல்லவர்களாக இருந்தமையால் அவர்களால் நியாண்டதால் மனிதர்களைப் பின்னர் வெற்றிகொள்ள முடிந்தது.

மற்ற மனித இனங்களிலிருந்து ஒரு சிலர் மட்டும் நம் இனத்துடன் கலந்து விட்டனர்.

சகிப்புத் தன்மை என்றால் என்ன என்று கேட்கக் கூடிய நமது இனம் வாழ்வுக்குத் தேவையான வளங்களுக்கான போட்டியில், ஏனைய மனித இனங்களை வன்முறை மூலம் அழித்து ஒழித்திருக்கலாம் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாக உள்ளது. நமது இனத்துக்குள்ளேயே வெறும் தோல் நிறத்தை வைத்து, மதத்தை வைத்து, நாட்டை வைத்து இன்னும் எதையெல்லாமோ காரணம் காட்டி இன்றைய காலகட்டத்தில் வன்முறையில் நம் மக்கள் ஈடுபடும்போது, எமது முன்னோர்கள் மட்டும் சும்மா இருந்திருப்பார்களா? அதுவும் வேறொரு இனத்திடம் பரிதாபம் காட்டியிருப்பார்களா? அவர்களிடம் மட்டும் சகிப்புத்தன்மை இருந்திருக்கவா போகிறது?

கடந்த 10000 ஆண்டுகளில் நமது இனம் மட்டுமே இவ்வுலகில் வாழும் மனித இனமாக இருக்கிறது. ஏனைய இனங்களும் இப்போது இருந்திருந்தால், என்ன மாதிரியான சமூகம், பண்பாடு, அரசியல் இப்போது இருந்திருக்கும்?

அவர்கள் அழிந்து போனதால், நமது இனமே படைப்பின் உருவகம் போலவும், நமக்கும் விலங்கு இராச்சியத்தின் ஏனைய உயிரினங்களுக்கும் இடையில் பென்னாம் பெரிய இடைவெளி இருப்பது போலவும் கற்பித்துக் கொள்வது நமக்கு இலகுவாகி விட்டது.

அடுத்த பக்கம் »