கோமாளிகள் நாள்!

Posted On பிப்ரவரி 25, 2010

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது குழந்தை, நோர்வே

Comments Dropped 2 responses

எப்பவாவது பாடசாலையில் இப்படி ஒருநாள் உங்களுக்கு கொண்டாடப்பட்டதா? எனக்கு இல்லவே இல்லை. அப்படி ஏதாவது இருந்திருக்கக் கூடாதான்னு இப்ப தோணுது. 🙂

வேற ஒன்றுமில்லை. மகளுடைய பாடசாலையில இப்படி இருநாள் இன்றைக்கு. இந்த கிழமை முழுமைக்குமே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி. இது அவர்களுடைய spirit week ஆம் :).

1. திங்கள் – pyjama day

இரவு உடையில் குழந்தைகள் எல்லோரும் பாடசாலைக்கு சென்றார்கள்.

2. செவ்வாய் – gym games day

முழுநாளும் விளையாட்டு. மகளுக்கு முதலாம் வகுப்பு பிள்ளைகளை நெறிப்படுத்தும் வேலை கொடுக்கப்பட்டதாம். அவர்களுக்கு ஒரே விசயத்தை திருப்பி திருப்பி சொல்லி அலுத்துப்போச்சாம். (ரொம்பத்தான் அலட்டிக்கிறா).

2. புதன் – Skiing day

இதற்கென்று தனியார் போக்கு வரத்து ஒழுங்கு செய்து பெரிய மலையொன்றுக்கு தொலைதூரம் போய் வந்தார்கள். தான் 10 தடவைக்கு மேல் விழுந்து எழும்பியதை, பெரிய சாதனையாக, மிகவும் சந்தோசத்துடன் சொல்லி மகிழ்ந்தாள் :). ஆனால், இன்றைக்குத்தான் கொஞ்சம் கழுத்து வலிப்பதாக கூறுகின்றாள் :(. விரைவில் குணமாகிவிடும் என்று நம்புகின்றேன்.

3. வியாழன் – crazy day

அப்பாவுடைய T-shirt ஐ எடுத்து அணிந்து கொண்டாள். அப்பாவிடம் ஒரு tie வாங்கி, அது சுற்றப்பட்டிருந்த polythene cover உடன் சேர்த்து t-shirt இல் குற்றிக் கொண்டாள். தலைமுடியை இரண்டாகப் பிரித்து, ஒரு பக்கம் பின்னாமலும், ஒரு பக்கம் பின்னியும் விடச் சொல்லிக் கேட்டாள். போட்டு விட்டேன். உடைக்கு சம்பந்தமேயில்லாத ஒரு sweater எடுத்து அணிந்து கொண்டாள்.  The crazy girl was ready then :). Crazy parade 9 மணிக்கு தொடங்குதாம் என்று சொல்லி அவசரமாக ஓடுகிறாள்.

இப்படியெல்லாம் நாங்க படிக்கும்போது எதுவும் இல்லாம போச்சே என்று கவலையா இருக்கு. நல்லாவே குழந்தைகளை கவனிக்கிறாங்க 🙂

அழகோ அழகு!

Posted On பிப்ரவரி 23, 2010

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது நோர்வே, ரசித்தவை

Comments Dropped one response

இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.

இன்று, அந்த கடல்நீரேரியின் வெண்கம்பளத்தை மூடி, ஆளை மறைக்கும் உயரத்துக்கு புகை மூட்டம் சூழ்ந்து அழகோ அழகாக இருக்கு. (ஐயோஓஓஒ அந்த அழகை விபரிக்க முடியேல்லையே). கையில் புகைப்படக் கருவி இருக்கவில்லை. கைத் தொலைபேசியில் எடுக்கும் படம் தெளிவில்லை. அந்த நீரேரியின் மேல் தற்போது நடக்க முடியும். சில நாட்கள் முன்னர், அதன்மேல் நடந்து படம், அசையும் படம் எல்லாம் எடுத்தோம். ஆனாலும் இப்படி இந்த புகை மூட்டத்தி்ற்குள் ஓடி எடுத்தால் நன்றாக இருக்கும். இன்றைக்கு அதை நடை முறைப்படுத்த முடியவில்லை. நாளையும் இந்த அழகு தொடர்ந்து இருந்தால், எப்படியாவது இதை எடுத்தே ஆக வேண்டும். பார்க்கலாம்.

1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த ஆண்டில்தான், பேர்கனில் இவ்வளவு பனிவிழுந்து நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து இருக்கிறதாம். பேர்கன்தான் மழைநகரமாச்சே. அடிக்கடி மழைபெய்து, பனியை கழுவிச் சென்று விடும். ஆனால், இந்த ஆண்டு மழை ஓய்வு பெற்றுக் கொண்டு, பனிமழைக்கு இடம் விட்டுச் சென்றிருக்கிறது :).

என் செல்லக் குட்டிம்மா!

Posted On பிப்ரவரி 5, 2010

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது குழந்தை, நோர்வே

Comments Dropped 10 responses

நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை.

அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள் வெளியே வந்தபின்னர், நான் எதையோ எடுக்க உள்ளே போனேன். அங்கே கிடைத்த ஒரு குட்டி தாளில், அங்கே கிடைத்த ஒரு பேனாவை எடுத்து, ‘I love you, I love you’ என்று எழுதி எனது புத்தகம் ஒன்றின் மேல் வைத்திருந்தாள்.

பின்னர் இருவரும் வெளியே போனோம். ஒரு மணி நேரத்தின் பின்னர், வீடு திரும்பும்போது ஆறுதலாய், நடந்த விடயங்களைப்பற்றி அவளிடம் சமாதானமாகப் பேசினேன். பின்னர் வீடு வந்து குளித்து, சாப்பிட்டு படுக்கைக்குப் போனதும், அவசரமாய் ஒரு தாள் எடுத்து எழுதினாள். ”அப்படி என்ன எழுதுறீங்க?” என்று கேட்டேன். பதிலில்லை. எனக்கு காட்டாமல் ஒளித்து ஒளித்து எழுதினாள். எழுதி முடித்ததும் என்னிடமே கொண்டு வந்து தந்தாள்.

அதில் சின்னதாய் ஒரு கடிதம்.

To my dear mother,

You always love me and kiss me,

But will never, ever miss me.

You are nice and pretty,

and you are also witty.

You are posh and kind,

And you have good thought in your mind,

I do not know what to write,

But one thing

WE SHOULD NOT FIGHT

By: Amma’s favourite Kutty

அன்பாக அணைத்து முத்தமிட்டேன். “நான் அப்பிடி செய்ததுக்கு Sorry அம்மா” என்று சொல்லி முத்தம் தந்து விட்டு, அந்தக் கடிதத்தை கடைசிவரை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று அன்பாய் உத்தரவிட்டுவிட்டு, படுத்து, உடனேயே தூங்கி விட்டாள் என் செல்ல மகள்.